Thursday, February 9, 2012

தமிழ்க் கலைக்களஞ்சியத் திட்டம்


தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் உயரிய குறிக்கோளாகிய கலைக்களஞ்சியத் திட்டத்தை திரு. தி.சு. அவினாசிலிங்கம் அவர்கள் இந்திய விடுதலை நாளான 15.08.1947 அன்று அறிவித்தார்கள். திருவாளர்கள் ஆர்.கே. சண்முகம் செட்டியார், ஏ.எல். முதலியார், வடபாதி மங்கலம். வி.எஸ். தியாகராஜ முதலியார், திரு. டி.கே. சிதம்பரநாத முதலியார், கல்கி ஆகியோர் உதவியுடன், திரு. ம.ப. பெரியசாமித்தூரன் அவர்களைத் தலைமைப் பதிப்பாசிரியராகக் கொண்டு இம்மாபெரும் பணியைத் தொடங்கினார். தமிழ் வளர்ச்சியில் ஆர்வமும் அக்கறையும் கொண்ட அனைத்துத் தரப்பு மக்களும் அவருடைய இந்த அறிவிப்பை மெத்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

திரு.ம.ப.பெரியசாமித்தூரன் அவர்கள்
Periyasamithooran

சென்னைப்பல்கலைக் கழக வளாகத்தில் விசயதசமி நாளான 20.10.1947இல் கலைக்களஞ்சியப் பணி தொடங்கப்பெற்றது. அன்றைய துணைவேந்தர் டாக்டர் ஆ. இலக்குமணசாமி முதலியார் அவர்கள் தலைமையில் கலைக்களஞ்சிய உருவாக்கத்திற்கு ‘அறிஞர் குழு‘ ஒன்று அமைக்கப்பட்டது. பேராசிரியர் மு. வரதராசன், பேராசிரியர் ரா.பி. சேதுப்பிள்ளை, பேராசிரியர் தெ.பொ. மீனாட்சிசுந்தரன், திரு. டி.கே. சிதம்பரநாத முதலியார், ஆகியோர் இக்குழுவில் உறுப்பினர்களாக இடம்பெற்றனர். கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தியும் பேராசிரியர் கே. சுவாமிநாதனும் இக்குழுவின் செயலாளர்களாக நியமிக்கப்பெற்றனர். சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ் வளர்ச்சிக் கழக அலுவலகத்திற்குரிய இடத்தைத் தந்து உதவுகிறது. தமிழறிஞர் திரு. ம.ப. பெரியசாமித்தூரன் அவர்கள் கலைக்களஞ்சியத்தின் தலைமைப் பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்றார்.

கலைக் களஞ்சியத் திட்டத்திற்கு உதவி கோரி 1947இல் திரு. தி.சு. அவினாசிலிங்கம் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். தமிழார்வம் கொண்ட பலரும் தாமே மனமுவந்து நிதி வழங்கினர். சில வாரங்களில் கணிசமான அளவில் நிதி சேர்ந்தது, மைய. மாநில அரசுகள் கலைக் களஞ்சியப் பணிக்கு நிதி உதவ முன்வந்தன. மைய அரசின் நிதியமைச்சராக விளங்கிய திரு. ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்கள் கலைக் களஞ்சியத் திட்டத்தில் மிகுந்த ஈடுபாடுடையவராய், அத்திட்டத்திற்கு மைய அரசின் உதவியைப் பெற்றுத் தந்தார்.

தமிழில் கலைக்களஞ்சியத்தைப் பத்துத் தொகுதிகளாகக் கொண்டுவரவேண்டுமென்று திட்டமிடப்பட்டது. ஒவ்வொரு தொகுதியும் ஏறத்தாழ 750 பக்கங்களைக் கொண்டதாகவும், பொதுமக்களுக்கும் விளங்கக்கூடிய நடையில், அறிவுத் துறைகள் அனைத்தையும் திறம்பட எடுத்துரைப்பதாகவும், பல்துறை அறிவு பற்றிய பதிவுகளை அகரவரிசைப்படுத்தி, அவைகளைக் கட்டுரை வடிவில் தெளிவாக விளக்குவதாகவும் அமைந்த சிறப்பானதோர் அறிவுக் கருவூலமாகக் கலைக்களஞ்சியத்தை உருவாக்க வேண்டும் என்றும் திட்டமிடப்பட்டது.

கலைக்களஞ்சியக் கருத்துகள் பொதுமக்களுக்கும் நன்றாக விளங்க வேண்டும் என்பதால் அதில் நான்கில் ஒரு பாகம் படங்களாக அமைய வேண்டும் என்றும், தேவையான இடங்களில் வண்ணப்படங்களும் புகைப்படங்களும் சேர்க்கப்பட வேண்டுமென்றும் முடிவு செய்யப்பெற்றது.

கலைக் களஞ்சிய மாதிரிப் படிவம் ஒன்றை 20-12-1948இல் தமிழ் வளர்ச்சிக் கழகம் தயாரித்து வெளியிட்டது. அம் மாதிரிப் படிவத்திற்கு கழகத் தலைவர் திரு. தி.சு. அவினாசிலிங்கம் அவர்கள் எழுதியுள்ள முகவுரை குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலத்தில் பல பெரிய கலைக் களஞ்சியங்கள் (Encyclopaedia) இருக்கின்றன. மக்களுடைய அறிவை வளர்ப்பதற்கு அவை பெரிதும் பயன்படுகின்றன. அவை போன்ற புத்தகங்கள் தமிழில் இல்லாதது ஒரு பெருங்குறையாகும். நமது நாட்டின் சாதாரண மக்களின் அறிவு உயர வேண்டுமானால் இத்தகைய நூல்கள் நமது மொழியில் வெளிவருவது அவசியம்.

தமிழில் கலைக் களஞ்சியத்தை உருவாக்குவதற்குக் கீழ்க்காணும் பல தலைப்புகளில் குழுக்கள் நியமிக்கப்பட்டன:

1. நிர்வாகக் குழுக்கள் 5, மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 74

2. பொருட்பட்டி அமைப்புக் குழுக்கள் 21, மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 132

3. ஆய்வுக்குழுக்கள் 27, மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 66

4. கலைச்சொற் குழு 1, உறுப்பினர்கள் எண்ணிக்கை 40

முதல் தொகுப்பு, அதன் பணி தொடங்கி 6 ஆண்டுகட்குப் பின் 1954இல், 742 பக்கங்களுடன் வெளிவந்தது. இதற்கு 207 அறிஞர்கள், அவரவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளில் கட்டுரைகள் வழங்கியுள்ளனர். பணி தொய்வின்றித் தொடர்ந்து நடந்தது. 1968இல் 10ஆம் தொகுதி (இணைப்புத்தொகுதி) வெளியாயிற்று. இவற்றிற்கு 2240 அறிஞர்கள் பங்களிப்புச் செய்திருக்கின்றனர். இது உண்மையிலேயே ஓர் ஒப்பும், உயர்வுமற்ற தமிழ்ப் பணி.

ஆக்கப்பூர்வமான, முன்னோடியான தமிழ்ப்பணி

கலைக்களஞ்சியத் தரவுகளைச் சேகரிப்பதில் திரு. ம.ப. பெரியசாமித்தூரன் அவர்கள் அறிஞர் பெருமக்கள் பலரின் உதவியுடன் முன்னின்று கடுமையாக உழைத்தார். இவ் உழைப்பின் பயனாகக் கலைக் களஞ்சியத் தொகுதிகள் பின்வருமாறு வெளிவந்தன:

1954 முதல் தொகுதி
1955 இரண்டாம் தொகுதி
1956 மூன்றாம், நான்காம் தொகுதிகள்
1958 ஐந்தாம் தொகுதி
1959 ஆறாம் தொகுதி
1960 ஏழாம் தொகுதி
1961 எட்டாம் தொகுதி
1963 ஒன்பதாம் தொகுதி
1968 பத்தாம் தொகுதி

கலைக்களஞ்சியத்தின் ஐந்தாவது தொகுதியை அன்றைய இந்தியப் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் வெளியிட்டார்கள். அந்நிகழ்ச்சி கலைக்களஞ்சிய ஆக்கப்பணிக்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்தது.

இந்திய மொழிகளில் பத்துத் தொகுதிகளைக் கொண்ட விரிவானதொரு கலைக்களஞ்சியம் தமிழ் மொழியில்தான் முதன் முதலில் வெளிவந்தது. இதைத் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் ஓர் ஒப்புயர்வற்ற ஆக்கப்பூர்வமான தமிழ்ப் பணியாகக் கருதலாம்.

‘கலைக்களஞ்சியம்‘ என்ற பொருள் பொதிந்த சொல்லைத் தமிழகத்திற்கு வழங்கிய பெருமையும் தமிழ் வளர்ச்சிக் கழகத்திற்கே உரியதாகும். இப்பொழுது “Encyclopaedia” என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான புத்தாக்கச் சொல்லாகத் தமிழறிஞர் அனைவராலும் “கலைக் களஞ்சியம்” என்ற சொல் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இச்சொல் தமிழ் வழக்கிலும் வேரூன்றி நிலைத்துவிட்டது.

கலைக்களஞ்சியம் மறுபதிப்பு

கலைக்களஞ்சிய ஆக்கத்திற்கு அதன் ஆசிரியராக, திரு. ம.ப. பெரியசாமித்தூரன் அவர்கள் ஆற்றிய நிலையான பணிகளைப் பாராட்டி மைய அரசு அவருக்கு 'பத்மபூஷண்' விருது வழங்கிச் சிறப்பித்தது. 'கலைக்களஞ்சியம்' என்ற அரிய செல்வத்தைத் தமிழில் உருவாக்கி, எல்லாத் துறைகளிலும் தமிழ்மொழி தழைத்து ஓங்குவதற்கு வழிகாட்டிய பெருமைக்குரியது தமிழ் வளர்ச்சிக் கழகம்.

கலைக்களஞ்சியம் 2ம் பதிப்பு தொடக்கவிழா

கலைக்களஞ்சியத்தின் திருந்திய இரண்டாம் பதிப்பை, ஒவ்வொரு தொகுதியும் 1000 பக்கங்களைக் கொண்டதாய், 12 தொகுதிகளில் வெளிக்கொணரப் பெரிதும் விரும்பினார் திரு। தி.சு. அவினாசிலிங்கம். 75 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அதற்குரிய திட்டமும் தயாரிக்கப்பட்டு, தொடக்க விழாவும் நடந்தது. பல்வேறு காரணங்களால் அத்திட்டம் நிறைவேறாமற் போயிற்று. கலைக் களஞ்சியத்தின் திருந்திய இரண்டாம் பதிப்பு வெளிவந்திருந்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் மேலும் பயன்படத்தக்கதாய் அமைந்திருக்கும்.

www.tamilvk.com

0 comments:

Post a Comment

Kindly post a comment.