Saturday, October 29, 2011

பரம்பரையாகத் தொடர்ந்திடும் ஜாதீயக் கொடுமை?



பார்க்கும் வேலையால் ஒன்றுபட்ட அவர்கள் நெருங்கிய நண்பர்களாகவும் ஆகிவிட்டனர். ஒருவர் முஸ்லீம். மற்றொருவர் இந்து. ஆனாலும் இன மத பேதமின்றி சரிசமமாக வாழ்ந்தார்கள். நாற்பதாயிரத்திற்குமேல் சம்பளம். நல்ல துணி மணி, சாப்பாடு, வசதியான வாழ்க்கை. இந்துவாயிருப்பவர் வருடாவருடம் சித்திரை மாதம் மட்டும் ஊருக்குத் தவறாமல் சென்று வந்துவிடுவார். தீபாவளி, பொங்கல் என்று கூடப் போவதில்லை.

சித்திரை மாதம் மட்டும் தவறாமல் செல்வதற்கான காரணத்தைக் கேட்டபோது பதறிப்போனார், முஸ்லீம் நண்பர்.

”நான் பறையர் ஜாதி என்பதாலே மதுரையில் கள்ளளகர் ஆற்றில் இறங்கும்போது நான்தான் கொட்டடிக்கணும்.” என்றார்.

“ஏன், அதுக்கு ஊரில் ஆள் இல்லையா?” என்று கேட்டார்”, நண்பர்.

”இருக்காஙக. ஆனா, எங்க ஊரைச் சேர்ந்த ஆதிக்க ஜாதியினர், கள்ளழகர் வேடம் போட்டு ஆத்துல இறங்குனா, அதே ஊரச் சேர்ந்த நாங்கதான் கொட்டடிக்கணும். இது பரம்பரை வழக்கம். அபாவுக்கு வயசாயிடுச்சு. அவரால இப்போ அடிக்க முடியாது. எனக்கு சவூதிக்கு விசா கிடைத்ததும் ஆதிக்க சாதியினர் எல்லாம் வீட்டுக்கு வந்துட்டாஙக.

“நீங்கள் எல்லாம் துபாயி, சிங்கப்பூர், சவூதின்னு போயிட்டா, யாருடா இங்க கொட்டு அடிப்பாங்க”ன்னு பிரச்னை பண்ணாங்க.

அப்பாதா அவங்களை சமாதானப்படுத்தி, ”ஐயா, திருவிழாவுக்கு லீவு எடுத்துட்டு, கொட்டடிக்க ஊருக்கு வந்துடும். அனுமதி கொடுங்கய்யா” ன்னு என் அப்பா கெஞ்சினார்.

”டேய், வருஷமானா திருவிழாவுக்கு கரெக்டா வந்துறணும். சரியா?”ன்னு வழிவிட்டாங்க. அதுக்கப்புரம்தான் சவூதி வந்தேன். என்றார்.

மேலும் பேசியதில் பேண்ட், சர்ட் போன்ற நவீன நல்ல உடைகளை எல்லாம் ஊருக்குள் அணிய முடியாது. அது ஊர்க்கட்டுப்பாடு என்ற தகவலும் கிடைத்தது.

பரமக் குடியைச் சேர்ந்த பாலமுருகனைப்பற்றி, சவூதியிலிருந்து அவர் நண்பர் ஹைதர் அலி நேரில் கண்டதையும், விசாரித்துஅறிந்ததையும் வைத்து மீடியா வாய்ஸ் வார 5-11-2011 இதழில் எழுதியதன் அடிப்படையில் பதிவர்களின் பார்வைக்குக் கொண்டு வரப்படுகின்றது.

”எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓரினம், எல்லோரும் இந்திய மக்கள்,”
என்று பாரதி பாடியதெல்லாம் வெறும் ஏட்டளவில்தானா?

பால முருகன், பிறந்த மண் ஆசையை எல்லாம் விட்டொழித்துப் பறந்துவிட வேண்டியதுதான் பட்டணத்திற்கு ! எதிர்த்துப் போரட முடியாதபோது விலகிக் கொள்வதுதானே நல்லவழி. அதற்காக வசதியான வாழ்க்கையை ஏன் இழக்க வேண்டும்?

2 comments:

  1. சாதி
    சாதி
    சாதி
    எதையாவது!
    -சித்திரவீதிக்காரன்
    சாதிக் கொடுமைகள் தொடர்வது வருந்தத்தக்கது மட்டுமல்ல, கண்டிக்கத்தக்கது. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி நண்பரே
    வாருங்கள் சாதீக்கேதிராக கைகோர்ப்போம்
    மனிதத்தை முன்னிறுத்துவோம்

    ReplyDelete

Kindly post a comment.