Saturday, November 12, 2016

இறந்த உடலை எடுத்துச் செல்லும் வசதி அனைத்து ரயிலிலும் உள்ளது !




அரசாங்க அமைப்புகளில் அனைவருக்குமே பயன்படும் வகையில் சில நல்ல நிகழ்வுகள் அவ்வப்போது நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் நம்மில் பலருக்கு இது போய் சேரவே இந்த பதிவு. முடிந்தவரை இதைப் பகிருங்கள். அனைவருக்கும் போய் சேரவேண்டும் என்பதே இதன் நோக்கம். 

சமிபத்தில் சென்னையில் நெருங்கிய நண்பர் ஒருவரது தந்தையார் புற்றுநோயால் காலமானார். உடலை சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைக்கு எடுத்துக்கொண்டு போய் இறுதிச் சடங்குகள் செய்ய திட்டமிட்டிருந்தனர்... 

அவர் சென்னை அரசு பொதுமருத்துவமனையில் அதிகாலை சுமார் 2.30 அளவில் காலமானார். அவரது உடலை அன்றே சொந்த ஊரில் தகனம் செய்ய வேண்டுமென்பது  இயற்கை எய்தியவரின் குடும்பத்தார்களது குறிக்கோள்.

3.00 மணிக்கு நண்பர் மருத்துவமனையை அடைகிறார். அங்குள்ள மருத்துவர்கள் அவரின் தகனம் செய்யும் திட்டத்தைப் பற்றி அறிந்து கொள்கின்றனர். நண்பருக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒரு புறம் தந்தை இறந்த துக்கம். மறுபுறம் எப்படி எடுத்து அன்றே தகனம் செய்வது என்ற நெருக்கடி. 

மருத்துவர்கள் அவரை ஆசுவாசப்படுத்தி. உங்களுக்கு 2 வழிகள் உள்ளன. ஒன்று அரசாங்க வாகனம் மற்றொன்று தனியார் வாகனம் . நீங்கள் அரசாங்க வாகனத்தை உபயோகித்தால். உங்களுக்கு ஒரு ரூபாய் கூட செலவு இல்லை. நீங்கள் தனியார் வாகனம் உபயோகித்தால் சுமார் 8000 முதல் 15000 வரைக் கேட்பார்கள் என்று கூறினார்கள். 

நண்பரோ தனியார் தான் சிறந்தது என்றெண்ணி அவர்களை தொடர்பு கொண்டார்.. அவர்கள் சுமார் 8000 ரூபாய் செலவு ஆகும் என்றனர். மீண்டும் மருத்துவர்களைப் பார்த்துப் பேசிய நண்பர் அவர்களின் அறிவுரைப்படி அரசாங்க ஊர்தியின் இலவசத் தொலைபேசி எண் 155377ஐ அழைத்து விசாரித்திருக்கிறார். அவர்கள், நீங்கள் எங்கே உடலை எடுத்துச் செல்லவேண்டும் என்று கேட்டுள்ளார்கள். நண்பர் விவரம் சொல்லவே, நிச்சயம் நாங்கள் சிறந்த முறையில் உங்களுக்கு உதவி செய்கிறோம். ஆனால், நீங்கள் ஆக வேண்டியதை முடிக்க சுமார் 3 மணி நேரம் பொறுத்துக் கொள்ள வேண்டும். இறந்த உடலைப் பாதுகாப்பதற்கான பணிகளை மட்டும் மேற்கொள்ளுங்கள். தேவகோட்டைக்கு கொண்டு செல்வதற்கான பயணத் திட்டத்தை  முறையாகச் செய்து தந்து நீங்கள் விரும்பும் படியே அதே நாளில் - அன்றைய தினத்திலேயே தகனம் செய்திட வழிவகை செய்கிறோம் என்று உறுதியளித்தனர்...

அவர்கள் சொன்னபடி சுமார் 7.30 மணிக்கு மற்றவேலைகளை முடித்துக் கொண்டு நண்பர் அவர்களை மீண்டும் தொடர்பு கொண்டுள்ளார். அவர்கள் நண்பரிடம் சார் எங்களால் 100 கி.மீ வரைதான் இலவசமாகச் செல்ல இயலும். 

நாங்கள் உங்களுக்காக ஒரு மாற்று ஏற்பாடு செய்துள்ளோம். அதன்படி காலையில் குருவாயூர் விரைவு இரயிலில் உங்களுக்குப் போதிய வசதிகள் செய்துள்ளோம். . உடலோடு ஒருவர் இலவசமாகச் செல்லலாம் என்று கூறி 
ரயிலில் இஞ்சின் பெட்டிக்கு அடுத்த பெட்டியில் உடலை ஏற்றி விட்டார்கள். 

கவனிக்க : இதுவரை அப்படி ஒரு வசதி ரயிலில் இருப்பது நம்மில் பல பேருக்கு தெரிய வாய்ப்பில்லை. அனைத்து ரயிலிலும் இந்த வசதி உள்ளது. 

திருச்சியை நெருங்கும் வேளையில் நண்பருக்கு ஒரு அழைப்பு   வந்தது! , அழைத்தவர்கள், அரசாங்க இலவச ஊர்தியின் பணியாட்கள். நீங்கள் திருச்சி சந்திப்புக்கு வந்ததும் தொடர்புகொள்ளுங்கள் மற்றவற்றை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றனர். நண்பர் அவர்கள் சொன்னபடி தொடர்வண்டி திருச்சி வந்ததும் அந்த எண்ணை அழைத்துப் பேசினார்.. ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் அவர்கள் நடைமேடையிலேயே அவர்களின் வருகைக்காகக் காத்திருந்தனர். வந்தவர்கள் இரண்டே நிமிடங்களில் உடலைத் தூக்கிக்கொண்டு ஊர்தியில் வைத்து தாமதிக்காமல் உடனே புறப்பட்டு தேவகோட்டைக்கு  குறித்த நேரத்தில் எடுத்துச் சேர்த்துள்ளனர். நண்பரும் அவர் குடும்பத்தாரும் திட்டமிட்டபடி இறுதிச் சடங்குகளை குறித்த நேரத்திற்க்கெல்லாம் முடித்து நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.. 

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் 
கொள்வர் பயன்தெரி வார்.

உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொருத்துச் சிறப்படைவதில்லை; அந்த உதவியைப் பெறுபவரின் பண்பைப் பொருத்தே அதன் அளவு மதிப்பிடப்படும்.

பொது மருத்துவமனையிலிருந்து இறுதி வரை அவர்கள் ஒரு ரூபாய் கூட வாங்காதது மட்டுமல்லாமல்.அவர்கள் எழும்பூரில் நண்பர் எடுத்த பயணச்சீட்டின்  கட்டணமான 100 ரூபாய்  பணத்தையும் திரும்பக்   கொடுத்து விட்டனர்.

எரிகிற  வீட்டில் பிடுங்கியது ஆதாயம் என்னுமாறு நடந்துகொள்ளும் திருக்கூத்தை அரசு மருத்துவமனைகளின் பிணவறை முன்னே நாளும் காணலாம். இலவச ஊர்தி இருக்காது. இருந்தாலும் இயங்கும் நிலையில் இருக்காது. அப்படியே இருந்தாலும் ஓட்டுநர்கள் கிடைக்கமாட்டார்கள். கிடைத்தாலும் பேரங்கள் தொடர்கதையாகும். பெரும்பாலும் இதுதான் உண்மையான நிலை.

மனிதாபிமானமும் மனிதநேயமும் கொண்டு செயல்பட்ட ஒவ்வொரு மானுட நெஞ்சங்களையும்  மனமாறப் பாராட்டி வாழ்த்தி வணங்குவோம்.

முக்கியப் பிரமுகர்களுக்கு மருத்துவ மனைகளில் கிடைக்கும் வசதிகள் அனைத்தும் சாமான்யருக்கும் எந்தவித இடையூறுகளுமின்றி இயல்பாகக் கிடைக்கும் நாளே  உண்மையான சுதந்திரத் திருநாள் !

எனவே இந்த சேவையைப் பற்றி 
நண்பர் சொன்னபடி இங்கு பதிந்துள்ளேன். 
அனைவரும் பகிரவும். 
இந்த செய்தி யாருக்காவது 
நன்மை அளிக்கட்டும்.

இலவச அமரர் ஊர்தி எண்ணிற்கு 155377

வலைப்பதிவரின் அருமை நண்பர், ஓய்வு பெற்ற BSNL  அதிகாரி

எல்.வரதராஜப் பெருமாள் அவர்கள்

வாட்ஸஅப் மூலம் அனுப்பிய   உண்மைச் செய்தி!

0 comments:

Post a Comment

Kindly post a comment.