Monday, August 29, 2016

தமிழினத்தை உயர்த்திய தலைமகன், எஸ்.ஆர்.நாதன்




ஒரு சமூகத்தின், நாட்டின் தலைவன் சிறந்து விளங்கினால் அவனது சமூகமும் நாடும் சிறப்புறும். சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் அமரர் எஸ்.ஆர். நாதன் சிங்கப்பூருக்குப் பெருமை சேர்த்தவர், இந்திய சமூகத்துக்குச் சிறப்புத் தேடித் தந்தவர், தமிழினத்துக்கு உயர்வு கொண்டு வந்தவர்.

நவீன சிங்கப்பூரின் உருவாக்கத்தில் ஆரம்ப காலம் முதல் பல வழிகளிலும் சேவையாற்றியுள்ள முன்னோடித் தலைவர்களில் ஒருவர் திரு செல்லப்பன் ராமநாதன். மூன்றாம் தலைமுறை சிங்கப்பூரரான திரு நாதன், இந்த நாட்டின் நலனுக்கு எது முக்கியம், எது தேவை, எது சாத்தியம் என்பதை உணர்ந்து அதற்கேற்ப சேவையாற்றி யவர். இதில் நாட்டுக்காக உயிரையும் பணயம் வைக்க அவர்  தயங்கியதில்லை.

திரு கோபிநாத் பிள்ளை குறிப்பிட்டத்தைப் போல “முடிந்தவரையில் சிறப்பாகச் செயல்படுவது போதுமான தல்ல, தேவையானதைச் செய்வதே  மிக முக்கியமானது” எனக் கருதிய திரு நாதன், தொழிற்சங்கத் தோழராக, அரசாங்க ஊழியராக, அதிபராக, சமூக சேவையாளராக மக்களின் நண்பராக, சிங்கப்பூரின் மகனாக நாட்டுக்குத் தேவையான காரியங்களை செய்து முடிப்பதில் வாழ்நாள் முழுவதும் கடுமையாக உழைத்தார். அதேநேரத்தில் ஓர் இந்தியராக  இந்திய சமூகத்தின் முன்னேற்றத்துக்கும் ஒருங்கிணைப்பிற்கும் முக்கிய பங்காற்றியுள்ளவர் திரு நாதன்.

இந்து  அறக்கட்டளை வாரியம், இந்து ஆலோசனை மன்றம் ஆகியவற்றின் தலைவராகச் சேவை புரிந்துள்ள அவர், சிங்கப்பூரில் இந்து சமயம் சார்ந்த, குறிப்பாக கோயில்களின் செயல்பாடுகளையும் சமூகத்தில் இந்து சமயம் குறித்த பார்வையையும் உயர்தரத்துக்கு உயர்த்தியவர்.

வாரியத்தில் நிறுவன நிர்வாக விதிமுறைகளைக் கொண்டுவந்து, கணக்கு வழக்குகளையும் செயல்பாடு களையும் முறைப்படுத்தியது போன்ற பல பணிகளை அவர் செய்துள்ளார். சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தை (சிண்டா) நிறுவியவர்களில் ஒருவருமான திரு நாதன் அறிமுகம் செய்த ‘புரொஜெக் ரீட்’ திட்டம் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு உதவியதுடன் தொண்டூழியமும் சமூகப் புரிந்துணர்வும் வளர்வதற்கும் வழிவகுத்தது.

கடந்த 2000 வரை சிண்டாவின் அறங்காவலர் குழுவில் நீடித்த அவர், இந்திய சமூகத்தின் மேம்பாட்டில் இறுதிக் காலம் வரை அக்கறை கொண்டிருந்தார். எத்தனை உயர்பதவியில் இருந்தபோதும் தமது தமிழ் அடையாளங்களையும் அவர் விட்டுவிடவில்லை. வீட்டில் தமிழ் பேசி வளர்ந்த திரு நாதனுக்கு பள்ளியில் தமிழ் படிக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. அதனால் பிற்காலத்தில் தமிழ் எழுதவும் படிக்கவும் கற்றுத் தேர்ந்தார். தமிழர்களிடம் தமிழில் உரையாடுவதில் அவருக்கு அலாதி இன்பம்.

சிங்கப்பூரராக, இந்தியராக, தமிழராக அவரை நாடி வந்தவர்க்கெல்லாம் அவர் உதவி செய்தவர். வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியாமல் அவர் செய்துள்ள பல உதவிகள் அவரின் மறைவுக்குப் பின்னரே தெரிய வந்துள்ளன.

சொல்லப்படாத மேலும் பல சம்பவங்கள் பலரின் மனப் பெட்டகங்களுக்குள் பாதுகாக்கப்பட்டிருக்கும். பேதங் களின்றி நாடி வந்தோருக்கெல்லாம் நல்ல நண்பராகத் திகழ்ந்த  அவருக்கு அஞ்சலி செலுத்த 20,000க்கும் மேற் பட்டவர்கள் திரண்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

சாதாரண குடும்பத்தில் பிறந்து, சிறுவயதில் தந்தையை இழந்து, படிப்பைப் பாதியில் விட்டு, வீட்டைவிட்டு வெளியேறி, தெருவில் படுத்துத் தூங்கி, கிடைத்த வேலைகளைச் செய்தபோதும் தன் மீதும் தனது திறன் மீதும் கொண்டிருந்த நம்பிக்கையால் சிங்கப்பூரின் அதிபராக உயர்ந்த திரு எஸ்.ஆர். நாதன் தனது  ஒப்பற்ற ஆற்றலாலும் உயரிய பண்பாலும் தமிழ்ச் சமூகத்தின் மதிப்பை பன்மடங்கு உயர்த்தியுள்ளார். உலக அரங்கில், நாட்டின் அதிபர்களாக பெரும் சிறப்புடன் பெயர் பொறித்த தமிழர்களான எஸ்.ஆர்.நாதனும் அப்துல் கலாமும் அன்பு மனத்தாலும் பண்புநெறிகளாலும் மக்களை ஈர்த்தவர்கள். தங்களின் உயர்வால் உலகெங்கும் பல தமிழர்கள் உயர் நிலையை எட்ட இவர்கள் உந்துசக்தியாகத் திகழ்வார்கள் என்பது நிச்சயம்.

நன்றி :- தமிழ் முரசு, சிங்கப்பூர்

0 comments:

Post a Comment

Kindly post a comment.