Tuesday, October 13, 2015

எழுத்தாளர்கள் மீதான தாக்குதல்: தமிழ் எழுத்தாளர்கள் கண்டனம்

எழுத்தாளர்கள், அறிவாளிகளைத் தாக்குவதும், சுட்டுக் கொலை செய்வதும் இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறி சாகித்ய அகாதெமி விருது பெற தமிழ் எழுத்தாளர்கள் 16 பேர் கண்டனம்
எழுத்தாளர்கள், அறிவாளிகளைத் தாக்குவதும், சுட்டுக் கொலை செய்வதும் இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறி சாகித்ய அகாதெமி விருது பெற தமிழ் எழுத்தாளர்கள் 16 பேர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர்கள் இந்திரா பார்த்தசாரதி, கி. ராஜநாராயணன், பொன்னீலன், பிரபஞ்சன், அசோகமித்ரன், தோப்பில் முகமது மீரான்,  அப்துல்ரகுமான், வைரமுத்து, ஈரோடு தமிழன்பன்,  மு. மேத்தா, மேலாண்மை பொன்னுச்சாமி, புவியரசு, நாஞ்சில் நாடன், சு. வெங்கடேசன்,  டி. செல்வராஜ், பூமணி ஆகியோர் இணைந்து கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 மதச்சார்பற்ற ஜனநாயக சோசலிசக் குடியரசான நம் நாட்டின் அடிப்படை விழுமியங்களும், இந்தியப் பண்பாட்டின் பன்முகத்தன்மையும் அச்சுறுத்தலுக்கும், தாக்குதலுக்கும் உள்ளாகி வருவது குறித்த எங்கள் அச்சத்தையும் கவலையையும் வெளிப்படுத்திக் கொள்கிறோம்.

 சாகித்ய அகாதெமி விருது பெற்ற கன்னடப் படைப்பாளி எம்.எம். கல்புர்கி சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியளிக்கும் நிகழ்வாகும். நாடெங்கும் இப்படுகொலைக்கு எதிராக வலுவான கண்டனக்குரல்கள் எழுந்துள்ள நிலையில், சாகித்ய அகாடமி இப்படுகொலையை நேரடியான வார்த்தைகளில் வன்மையாகக் கண்டிக்க முன்வராததும், எழுத்தாளர்களின் பாதுகாப்பு குறித்து திட்டவட்டமான தீர்மானத்துடன் மத்திய அரசுக்கு அழுத்தமும், நெருக்கடியும் தராததும் வருத்தமளிக்கிறது.

பன்முகப் பண்பாடுகளின் வண்ணக்கலவைதான் இந்திய நாட்டின் ஆதார சுருதி. விதவிதமான வழிபாட்டு முறைகளும், உணவு முறைகளும், நம்பிக்கைகளும், பகுத்தறிவுச் சிந்தனைப் போக்குகளும் கலந்து நடப்பதே இந்திய வாழ்வின் வரலாற்றுப் பாதை. ஆனால் மாற்றுக் கருத்துகளை வெளிப்படுத்தும் படைப்பாளிகளைத் தாக்குவதும், சுட்டுக் கொலை செய்வதும், மக்களின் பன்முகப் பண்பாட்டு வாழ்வின் மீது நேரடித் தாக்குதல் நடத்துவதும், இதற்கு எதிராக எழுகின்ற குரல்களையும், கருத்துகளையும் வன்முறையால் எதிர்கொள்வதும் தொடர்ச்சியாக நிகழ்வதைக் கண்டிக்கிறோம். இது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இந்திய நாட்டின் அடிப்படை மாண்புகளான ஜனநாயகம், மதச்சார்பின்மை, கருத்துச்சுதந்திரம் போன்றவற்றைக் காத்திடவும் மேலும் வளர்த்தெடுக்கவும் அனைத்துப்பகுதி மக்களும், படைப்பாளிகளும் கரம் இணைத்து உறுதியுடன் நடைபோட வேண்டியது இன்றைய காலத்தின் தேவை'' என்று எழுத்தாளர்கள் கூறியுள்ளனர்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.