தமிழக உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்று அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை வலியுறுத்தியது.
இதுகுறித்து பெங்களூருவில் புதன்கிழமை பேரவையின் தலைவர் எம்.என்.கிருஷ்ணமணி, செயல் தலைவர் மு.மீனாட்சிசுந்தரம், பொதுச் செயலாளர் இரா.முகுந்தன், அமைப்புச் செயலாளர் சுந்தரராசன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டி, தமிழகத்தில் பல ஆண்டுகளாக குரல் எழுப்பபட்டு வருகின்றது. இதுதொடர்பாக, 2006-ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அப்போதைய குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.2007-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இதுகுறித்து வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 2013, ஏப்ரலில் புதுதில்லியில் நடைபெற்ற மாநில முதல்வர்கள், உயர்நீதிமன்றத் தலைமை நீத்பதிகள் மாநாட்டில் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, நீதியின் ஆளுமையை மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்ல வேண்டுமானால் உயர்நீதிமன்றங்களில் அந்தந்த மாநில மொழிகளே பயன்பாட்டு மொழியாக அமைதல் வேண்டும் என்று கூறினார்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 16-ஆம் தேதி முதல் வழக்குரைஞர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்களது போராட்டத்துக்கு அனைத்திந்தியத் தமிழ்ச்சங்கப் பேரவை ஆதரவு தெரிவிக்கிறது. மேலும், வழக்காடு மொழி குறித்து மத்திய அரசு உடனடியாகத் தேவையான சட்டத் திருத்தத்துக்கு வழிவகுக்க வேண்டும் என்றனர் அவர்கள்.
நன்றி :- தினமணி
0 comments:
Post a Comment
Kindly post a comment.