Wednesday, February 5, 2014

தமிழ்வழியில் பொறியியல் பட்டம் பெற்ற முதல் குழுவினர்

தமிழ் வழியில் இன்ஜினீயரிங் படிப்பு: இறுதியாண்டில் முதல் பேட்ச் மாணவர்கள்

தமிழகத்தில் 2010-ம் ஆண்டு முதன்முதலாக தமிழ்வழி இன்ஜினீயரிங் பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அண்ணா பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் பாடத்திட்டம், தமிழகத்தில் உள்ள அனைத்து அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பாடத்திட்டத்தில் சிவில் மற்றும் மெக்கானிக்கல் துறைகள் இயங்கி வருகின்றன.

தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அப்போதைய திமுக அரசு அரசாணை பிறப்பித்தது. இதனால் மாணவர்களும் தமிழ்வழிக் கல்வியை விரும்பி எடுத்தனர்.

தற்போது தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தமிழ்வழியில் இன்ஜினீயரிங் படித்து வருகின்றனர். 2010-ம் ஆண்டு சேர்ந்த முதல் பேட்ச் மாணவர்கள், இப்போது இறுதியாண்டை எட்டியுள்ளனர். தமிழ்வழியில் படித்த தங்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து இறுதியாண்டு மாணவர் ஒருவர் கூறியதாவது:

எங்கள் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே வளாக நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆங்கில வழியில் படித்த மாணவர்களுக்குத்தான் அதில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. தமிழ்வழி மாணவர்களுக்கு சொற்பமான அளவிலேயே வளாக நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. எங்களுக்கு உரிய வேலைவாய்ப்பை வழங்க அரசும் பல்கலைக்கழமும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக நேர்முகத்தேர்வு அலுவலர் தியாகராஜன் கூறியதாவது:

தமிழ்வழி மாணவர்களுக்கு வேலை கிடைக்காததுபோல் ஒரு மாயை உள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு தமிழ்வழி மாணவியே அதிகமான சம்பளத்தில் வேலைக்கு தேர்வாகியிருக்கிறார். தமிழ்வழியில் மெக்கானிக்கல் படிக்கும் எஸ்.சண்முகப்பிரியா என்ற அந்த மாணவியை மஹேந்திரா & மஹேந்திரா நிறுவனம், ஆண்டுக்கு ரூ.5.6 லட்சம் சம்பளத்துக்கு தேர்வு செய்துள்ளது.

மேலும் பல நிறுவனங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறோம், அவையும் வளாக நேர்முகத்தேர்வுக்கு வருவதாக கூறியுள்ளன. ஆங்கில வழி மாணவர்களைப் போலவே டான்செட், கேட் போன்ற நுழைவுத்தேர்வுகளை எழுதி தமிழ் வழி மாணவர்களும் மேற்படிப்பை படிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். 

தி இந்து 

0 comments:

Post a Comment

Kindly post a comment.