Sunday, December 1, 2013

கலாரசிகன் & டிராபிக் ராமசாமி

கடந்த 30 ஆண்டுகளாக நான் ஒருவரை நேரில் சந்திக்க வேண்டும் என்று விரும்பி ஆனால் சந்திக்காமல் இருக்கும் ஒருவர் "டிராபிக்' ராமசாமி. அவரை சந்திக்கவில்லை என்கிற குற்ற உணர்வு எனக்கு எப்போதுமே உண்டு. எம். சதீஷ்குமார் எழுதியிருக்கும் "ஒன்மேன் ஆர்மி!' என்கிற "டிராபிக்' ராமசாமி என்கிற போராளியின் சரித்திரம் அந்தக் குற்ற உணர்வை மேலும் அதிகரித்திருக்கிறது.

அவரை நான் தற்செயலாக ஒருமுறை பார்த்தது, பல்லவன் போக்குவரத்துக் கழக ஊர்தியில் பயணித்துக் கொண்டிருக்கும் போதுதான். கீத்து நாமத்துடன் ஒருவர் சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார். முன் இருக்கையில் இருக்கும் ஒருவர் மற்றவரிடம் "அவர்தான் "டிராபிக்' ராமசாமி என்றும், அவர் தன்னலமில்லாமல் இதுபோன்ற பொதுச் சேவைகள் செய்வது பற்றியும் சொல்லிக் கொண்டிருந்ததை மனதில் பதித்துக் கொண்டேன். இவரைப் போல நம்மால் துணிந்து நியாயத்துக்காகத் தெருவில் இறங்கிப் போராட முடியவில்லையே என்று நினைத்துக் கொண்டேன்.

சென்னை புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவில் வசித்து வந்த 19 வயது ராமசாமியின் வாழ்க்கையை நிர்ணயித்தது அன்றைய முதல்வராக இருந்த ராஜாஜியுடன் எதேச்சையாக நடந்த சந்திப்பு. பக்கத்து வீட்டில் நடந்த ஒரு விழாவுக்கு வந்திருந்த முதல்வர் ராஜாஜியைக் காண தெருவே கூடிவிட்டிருந்தது. எல்லோரையும் வணங்கியபடி வெளியே வந்த ராஜாஜி, இரு கைகளைக் கூப்பி, உதடுகள் துடிக்க அவரிடம் ஏதாவது பேசிவிட முடியாதா என்கிற ஏக்கத்தோடு நின்றுகொண்டிருந்த ராமசாமி என்கிற இளைஞனின் அருகில் வந்ததும், அவரது தோளைத் தொட்டு "உன் பேரு என்னப்பா?' என்று கேட்டிருக்கிறார்.

ராஜாஜிக்கு ஏதோ பொறிதட்டி இருக்கிறது போலும். சும்மாவா "ராஜரிஷி' என்று அவரிடம் நெருங்கிப் பழகியவர்கள் கூறுகிறார்கள்.

""உன்னைப் பார்த்தால் பெரிய ஆளா வருவேன்னு தெரியுது... பெரிய ஆளா வந்தாமட்டும் போதாது... நடத்தையில் நல்லவனாக இருக்கிறது எவ்வளவு முக்கியமோ, அதே நேர்மை இந்த சமூகத்திடமும் இருக்கணும். எங்கே அநியாயம் நடந்தாலும் அதைத் தட்டிக் கேட்கிற துணிச்சலும் நேர்மையும் ஒரே நேர்க்கோட்டில் நின்று பெறுகிற வெற்றிதான் உண்மையானது, நான் எதிர்பார்க்கிற, எதையும் தட்டிக் கேட்கும் துணிச்சல் கொண்ட பையனா நீ வளரணும்''

ராஜாஜியின் கரம் ஆசீர்வதித்தது. "டிராபிக்' ராமசாமி என்கிற சமூகப் போராளி உருவாகி விட்டார்.

எத்தனை எத்தனையோ போராட்டங்கள். தாக்குதல்கள். காவல்துறையே அவருக்கு எதிராக அணிதிரண்ட நிகழ்வுகள், இப்படி ஏராளம் ஏராளம். "இவரால் முடிக்கப்பட வேண்டிய கடமை நிறைய இருக்கிறது' என்று இறைவன் நினைத்தால், ஆயிரம் கத்திகள் பாய்ந்தாலும் உயிரை ஒன்றும் செய்துவிட முடியாது என்கிற நம்பிக்கையில், ராஜாஜி சொல்லிக் கொடுத்த பாதையில் "டிராபிக்' ராமசாமியின் பயணம் தொடர்கிறது.

""நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யாருக்கும் அஞ்சாத ஞானச் செருக்கு இவையெல்லாம் இருந்தால் போதும். சமூகத்திற்கு எதிராகச் செயல்படும் யாரையும் நாம் நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தி நீதிக்குத் தலைவணங்கச் செய்யலாம்.

பொதுநல வழக்குத் தொடுப்பவர்களை விளம்பர விரும்பிகளாகப் பார்க்கும் வழக்கம் சமீப காலமாக உள்ளது. அநீதிக்கு எதிராகப் போராடுகிறார் என்றால், அதற்குத் துணையாக நிற்க நாம் முன்வர வேண்டும். நாம் செய்ய வேண்டிய ஒன்றை இன்னொருவர் செய்கிறார் என்கிற புரிதல், எல்லோருக்கும் வரவேண்டும்!''

- "டிராபிக்' ராமசாமியின் இந்தக் கூற்றை நாம் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

""என் மனைவி, மகன், உறவினர்கள், எனக்குப் பிடித்தமானவர்கள், என் நலம் விரும்பும் நண்பர்கள் என யாருக்குமே நான் செய்யும் வேலைகள் பிடிக்கவில்லை. எந்தக் குடும்பத்தைப் பிரியக்கூடாது என்றெண்ணி பம்பாய் வேலையை உதறினேனோ, அந்தக் குடும்பமே என்னை அநாதையாகத் தவிக்கவிட்டுப் போனதுதான் வாழ்க்கையின் விசித்திரம். மனைவி, மகள், பேரப்பிள்ளை என்ற உறவுகளின் கதகதப்பில் கண்மூடிக் கிடக்க வேண்டியவன், தனியே நிராதரவாக கால்நீட்டிப் படுத்திருக்கிறேன். துன்பத்திலேயே கொடூரமானது நிராதரவான துன்பம்தான்'' இந்தப் புத்தகத்தில் "டிராபிக்' ராமசாமி கூறும்போது, அவர் அழுதாரா என்று தெரியாது, நான் அழுதேன்.

சமூகப் போராளிகளுக்கு இதுதான் சமுதாயம் கொடுக்கும் பரிசு. "நாடோடி மன்னன்' திரைப்படத்தில், "இருளைப் போக்கும் விளக்குக்குத் தனது நிழலைப் போக்கும் சக்தி கிடையாது, வீராங்கா' என்கிற கவியரசு கண்ணதாசனின் வசன வரிகள் நினைவுக்கு வந்தது.


தமிழ்மணி -  01 - 12 - 2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.