Wednesday, October 2, 2013

கம்பம் அருகே காமயகவுண்டன் பட்டியில் காந்திக்குக் கோயில் !


கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியில் மகாத்மா காந்திக்கு பொதுமக்களால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான கோயில். 
கம்பத்துக்கு அருகே வயல்வெளிகளும், திராட்சை தோட்டங்களும் நிறைந்த இயற்கை எழில் கொஞ்சும் ஊர் காமயகவுண்டன்பட்டி. கம்பம் பள்ளத்தாக்கு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான இந்திய தேசியப் படையில் சோமநாதன், சிக்கந்தர் ஆகியோரும் மற்றும் சின்னியகவுடர், பீர்முகமது, சையதுமுகமது, வெள்ளையத்தா, வெங்கடாசல செட்டியார், நாராயண பண்டிதர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் காந்திய வழியில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற தியாகிகள் நிறைந்த பகுதியாகும்.

கத்தியின்றி, ரத்தமின்றி இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த மாகாத்மா காந்திக்கு, உலகில் பல இடங்களில் நினைவு மணிமண்டபங்களும், சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன.

ஆனால், 29 ஆண்டுகளுக்கு முன் மகாத்மா காந்திக்கு கோயில் கட்டிய பெருமை காமயகவுண்டன்பட்டி கிராமத்தையே சாரும்.

சுதந்திரத்துக்குப் பாடுபட்ட முன்னாள் எம்.பி., கே. சக்திவேல் கவுடர், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் என்.கே. பாண்டியராஜ், பரமசிவத் தேவர், கிருஷ்ணசாமி, சுருளியாண்டி ஆசாரி, தொட்டப்பனு, வீராச்சாமி நாயுடு போன்ற நூற்றுக்கணக்கான தியாகிகள் நிறைந்த ஊர் என்பதால், காமயகவுண்டன்பட்டி கிராமம் இயற்கையாகவே தேசப்பற்று நிறைந்து காணப்பட்டது.

காந்தியின் அஸ்தி நாட்டின் பல பகுதிகளில் உள்ள புனித நதிகளில் கரைக்கப்பட்ட போது, அஸ்தியின் ஒரு பகுதியை காமயகவுண்டன்பட்டியில் வைத்து தியாகிகளால் பாதுகாக்கப்பட்டது.

இந்தக் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி., சக்திவடிவேல் கவுடர், என்.கே. ராமராஜ், என்.கே. பாண்டியராஜ் ஆகியோர் சேர்ந்து, காந்தியின் அஸ்தி வைக்கப்பட்டிருந்த கம்பம் சாலையில், பொதுமக்கள் வழிபடும் வகையில் மகாத்மா காந்திக்கு கோயில் எழுப்பினர்.

இந்தக் கோயில் கட்டும் பணிக்கு ஊரில் உள்ள பொதுமக்களும் நிதியளித்தனர். உயர்ந்த கோபுரத்துடன் கூடிய கோயிலில் 6 அடி உயரத்தில் காந்திக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. கோயில் கட்டுமானப் பணிகள் முடிந்து, 1985 இல் அப்போதைய குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் இக் கோயிலை திறந்து வைத்தார்.

கோயில் வளாகத்தில் காந்தி இறந்த அன்று நடைபெற்ற ஊர்வலக் காட்சிகளின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. சத்திய சோதனை, காந்தி சுயசரிதை உள்ளிட்ட ஏராளமான புத்தகங்களும் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இக் கோயிலில், காந்தி பிறந்த நாள், நினைவு நாள், சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் முக்கிய தேசத் தலைவர்கள் பிறந்த நாளில் சிறப்புப் பூஜைகளும், சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

மேலும், காந்தி ஜயந்தி நாளில், காந்தி படத்தை தேரில் வைத்து நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலம் நடைபெறும்.

ஊர்வலத்தின்போது, பொதுமக்கள் காந்திக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தேங்காய் உடைத்து, பழங்கள் வைத்து வழிபட்டு வருகின்றனர்.

இந்தக் கோயில் பராமரிப்புச் செலவுக்காக ரூ. 30 ஆயிரம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது. அதன் வட்டித் தொகையில் தற்போது பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது.

தற்போது, மீண்டும் ஊர் பொதுமக்கள் நிதி உதவியுடன் ரூ. 10 லட்சம் செலவில் இக் கோயில் முன் தியான மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி, 02-10-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.