பருவநிலை மாற்றம் காரணமாக தமிழக வெப்பநிலை 2100-ஆம் ஆண்டு முடிவில் 145 டிகிரி (ஃபாரன்ஹீட்) என்ற அளவை எட்டும் என நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.இதன் காரணமாக உத்தரகண்டில் ஏற்பட்ட இயற்கைச் சீரழிவைப்போல் தமிழகத்திலும் ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உத்தரகண்ட் பேரிடரும் இயற்கை சீரழிவும் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது.
இதில் சென்னை அண்ணா பல்கலைக்கழக பருவநிலை மாற்ற ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர் ஏ. சலீம் கான் பேசியது:பருவநிலை மாற்றப் பாதிப்பு எந்த அளவுக்கு இயற்கைச் சீரழிவை ஏற்படுத்தும் என்பதை உத்தரகண்ட் உலகுக்கு உணர்த்தியிருக்கிறது.இதைத் தடுக்க முடியாது என்றபோதும், பருவநிலை மாற்றப் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு தீவிர முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.இந்த முயற்சியை தீவிரமாக எடுக்கத் தவறியதால், மழை எப்போது பெய்யும் என்பதே தெரியாமல் போயுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் பருவ மழை வெகுவாக குறைந்துபோயுள்ள நிலையில், கடலோரப் பகுதிகளில் அபரிமிதமான மழை பெய்யும் நிலையும் உருவாகியிருக்கிறது.
ஐபிசிசி (பருவநிலை மாற்றத்துக்கான சர்வதேச குழு) அறிக்கையின்படி, 1990 முதல் 2090-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கடல் மட்டம் 18 முதல் 59 செ.மீ. வரை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கிழக்கு கடலோரப் பகுதியில் குறிப்பாக வங்காள விரிகுடா பகுதியிலும் இதே அளவில் கடல் மட்டம் உயர வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் பேரழிவைச் சந்திக்க நேரிடும்.
இதுபோல் வெப்பநிலையும் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தின் வெப்பநிலை இந்த நூற்றாண்டின் இறுதியில் அதாவது 2100-ஆம் ஆண்டு இறுதியில் சராசரியாக 37.6 டிகிரி கூடுதலாக வாய்ப்பு உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன என்றார்.
தமிழகத்தில் கடந்த மே மாதம் அதிகபட்ச வெயில் அளவு (வேலூர்) 108 டிகிரியாக இருந்தது. எனவே, இந்தப் புள்ளி விவரத்தின்படி 2100-ஆம் ஆண்டில் அதிகபட்ச வெப்பநிலை 145 டிகிரியாக உயரும் அபாயம் உள்ளது. இந்தப் பருவநிலை மாற்றங்கள் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். குறிப்பாக நாகப்பட்டினம் கடல் பகுதிகளில் பாரம்பரிய மீன் வகைகள் முழுமையாக அழிந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே, பருவநிலை மாற்றப் பாதிப்புகளை கட்டுப்படுத்த முறையான நடைமுறைகள் வகுக்கப்பட்டு, அதற்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டும் என கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
இன்னும் 87 ஆண்டுகளில் தமிழகத்தில் வெப்பநிலை 145 டிகிரியாக உயரும்! - நிபுணர்கள் எச்சரிக்கை
[Saturday, 2013-07-13 16:30:14]
http://www.seithy.com/breifNews.php?newsID=87421&category=IndianNews&language=tamil
0 comments:
Post a Comment
Kindly post a comment.