Friday, May 10, 2013

சீரழிக்கும் தொலைக்காட்சிச் “சீரியல்கள்” - ஜி.கிருஷ்ணமூர்த்தி, சத்தியமங்கலம்


நீங்கள் நல்லவராக இருக்கலாம்; பிறருக்குத் தீங்கு நினைக்காதவராக இருக்கலாம். இருந்தாலும் ஒருவரை அழிக்க, தீங்கு செய்ய, பழிவாங்க உங்களிடம் யோசனை கேட்டால் உங்களால் ஒன்று அல்லது இரண்டு யோசனைகளைத்தான் கூற முடியும். சற்று உலகம் தெரிந்தவராக இருப்பின் யோசித்து, தடுமாறி சுமார் 10 யோசனைகளைக் கூறுவீர்கள்.

நூற்றுக்கணக்கான யோசனைகளைக் கூற முடியும் என்றால் நீங்கள்தான் தொலைக்காட்சி சீரியல்கள் என்று அழைக்கப்படும் நெடுந்தொடர்கள் எழுதுவதற்கேற்ற "நல்ல' கதாசிரியர்!

நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை நிறுத்துவது, கொலைசெய்யத் திட்டமிடுவது, அப்பாவியைச் சிறையில் தள்ளுவது, வயிற்றில் வளர்ந்த கருவைக் கலைப்பது, கருவே உருவாகாமல் தடுத்துவிடுவது, பிறந்த குழந்தையைக் கடத்துவது, பச்சைக் குழந்தையை மாற்றுவது, மாமியாருக்கு மருமகள் விஷம் வைப்பது, மருமகளுக்கு மாமியார் விஷம் வைப்பது, கணவனையே கொல்ல சதித் திட்டம் தீட்டுவது, கணவருக்கு எதிராக எதிராளியுடன் சேர்ந்து சதி செய்வது, திருமணம் ஆன தம்பதியருக்கு முதலிரவுச் சடங்குகள் நடக்காமல் தடங்கல் செய்வது, போலியாக மணப்பெண்ணை உருவாக்குவது, குண்டர்களின் உதவியைக் குடும்பப் பெண்கள் நாடுவது,

காவல்துறை அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக்கொண்டு மற்றவர்களை ஆட்டிப்படைப்பது, சூனியக்காரியின் உதவியால் அச்சுறுத்துவது, சாமியார்களின் உதவியை நாடி குடும்பங்களைக் கலைப்பது, கணவனைவிட்டுவிட்டு இன்னொருவனை நாடுவது என்று எத்தனை விதமாகவோ தீமைகள் செய்வதைக் கற்றுத்தருவதுதான் இன்றைய சீரியல்கள்.

இந்த தீங்குகளையெல்லாம் கதைகளில் பெரும்பாலும் பெண் கதாபாத்திரங்கள்தான் செய்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள மகளிர் அமைப்புகளும் மகளிர் நலம்நாடும் ஆர்வலர்களும், பெண்ணுரிமைக்காகவே கொடிபிடிக்கும் இயக்கங்களும் இதைப்பற்றியெல்லாம் கொஞ்சமும் சூடு சொரணையில்லாமல் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் வேதனையை என்னவென்பது?

இல்லத்தரசிகள், "ஹோம்-மேக்கர்'கள், "ஹெüஸ்-ஒய்ஃப்' என்றெல்லாம் பட்டம் தாங்கி பெருமைப்படும் பெண்கள் ஒட்டுமொத்தமாக இந்தத் தொடர்களைப் புறக்கணித்தால் (அது நடக்கிற காரியமா?) நல்ல பொழுதுபோக்கு அம்சமுள்ள, தரமான கதைகளைத் தயாரிப்பார்கள்; இல்லையென்றால் எல்லோருடைய மனங்களிலும் விஷத்தைத் தூவும் இந்த சாக்கடைகளே தொடர்ந்து தொலைக்காட்சிகளில் ஓடும்.
ஆண்களைக் கெடுக்க மதுக்கடைகளும் பெண்களைக் கெடுக்க இந்த நெடுந்தொடர்களும் தமிழ்நாட்டைப் பிடித்த இரட்டைச் சாபங்களாகத் தொடர்கின்றன.

இளம்பெண்கள், கருவுற்ற பெண்கள், குடும்பப் பெண்கள் தொடர்களைப் பார்க்க வேண்டாம், தவிர்த்துவிடுங்கள் என்று ஆன்மிகச் சொற்பொழிவாளர் ஒருவர் சமீபத்தில் உருக்கமாக வேண்டுகோள்கூட விடுத்தார்.
மத்திய, மாநில அரசுகள் இந்தத் தொடர்களையெல்லாம் கட்டுப்படுத்த முயற்சிகள் எடுக்காது.

தொலைக்காட்சி நிறுவனங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசியல்வாதிகள்தான் நடத்துகிறார்கள். அவர்களுக்கு இந்தச் சமுதாயம் கெட்டுப்போவதில்தான் ஆவல். அவர்கள் குடும்பத்துக்கு "நிதி' சேர்ந்தால் போதும், மக்கள் தங்களுடைய "மதி'யை அடகுவைத்து இவற்றைத் தொடர்ந்து பார்ப்பதையே அவர்கள் விரும்புவார்கள். நாம்தான் விழிப்போடு இருக்க வேண்டும்

நன்றி :- கருத்துக்களம், தினமணி, 06-05-2013


0 comments:

Post a Comment

Kindly post a comment.