Sunday, May 12, 2013

கல்வித்துறை அமைச்சர் வைகைச் செல்வனின் அதிரடி அறிவிப்புகள் !

அடுத்த ஆண்டு முதல் அனைத்துப் பள்ளிகளிலும் ஆங்கிலவழிப் பிரிவுகள் துவக்கம் !

வரும் கல்வியாண்டு (2013-14) முதல் தேவைப்படும் அனைத்துப் பள்ளிகளிலும் ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் அறிவித்தார்.

பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் பேரவையில் நேற்று  நடைபெற்றது. இந்த விவாதத்துக்குப் பதிலளிக்கும் போது அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:-

தனியார் பள்ளி மாணவர்களைப் போன்று அரசுப் பள்ளி மாணவர்களும் ஆங்கிலத்தில் பயிலும் வகையில் ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், அரசு உயர் நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் 1,6-ஆம் வகுப்புகளில் இரண்டு ஆங்கில வழிப் பிரிவுகள் வீதம் மொத்தம் 640 பிரிவுகள் தொடங்க அரசு அனுமதியளித்தது.

மொத்தம் 320 பள்ளிகளில் இந்தப் பிரிவுகள் தொடங்கப்பட்டு 22 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

வரும் கல்வியாண்டு முதல் தேவைப்படும் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர் நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கப்படும். இதனால் ஆண்டுக்கு 1.5 லட்சம் மாணவர்கள் பயனடைவர். 

பார்வைக் குறைபாடு உள்ளோர் பக்கம் பரிவு 

பார்வைக் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு இலவசப் பொருள்கள்: 2013-14-ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் பார்வையற்ற குழந்தைகளுக்கு கற்பித்தல் முறையை எளிதாக்க கீழ்க்கண்ட உபகரணங்கள் அடங்கிய பை வழங்கப்படும். "ஸ்டைலஸ்', "ஸ்மால்லர் டெய்லர் ஃப்ரேம்', "அபாகஸ்', "ஃபோல்டிங் ஸ்டிக்', "டிராஃப்ட் ஃபோர்டு வித் காயின்ஸ்', "அரித்மெடிக் டைப்ஸ்', "அல்ஜீப்ரா டைப்ஸ்' ஆகிய உபகரணங்கள் அடங்கிய பை வழங்கப்படும். இதனால் 2,221 மாணவர்கள் பயனடைவர். இதற்கான திட்டச் செலவு ரூ.18 லட்சம் ஆகும்.

சதுரங்க விளையாட்டுத் திறனை ஊக்குவித்தல்

சதுரங்கப் போட்டி: மாணவர்களின் சதுரங்க விளையாட்டுத் திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் வரும் கல்வியாண்டில் இருந்து 269 வட்டாரங்களில் உள்ள பள்ளிகளிடையேயும், பின்னர் கல்வி மாவட்ட அளவிலும், அதன்பிறகு மண்டல அளவிலும் சதுரங்க விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, இறுதியாக மாநில அளவில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும்.

நூலகங்களின் தரம் உயர்த்தல்

நூலகங்கள் தரம் உயர்வு: வரும் கல்வியாண்டில் மாவட்டத்துக்கு 3 பகுதிநேர நூலகங்கள் வீதம் 96 பகுதிநேர நூலகங்கள் ஊர்ப்புற நூலகங்களாகத் தரம் உயர்த்தப்படும். மாவட்டத்துக்கு 5 ஊர்ப்புற நூலகங்கள் என 160 ஊர்ப்புற நூலகங்கள் கிளை நூலகங்களாகத் தரம் உயர்த்தப்படும். காஞ்சிபுரம், கோவை, திருச்சி மாவட்ட மைய நூலகங்கள் ஒவ்வொன்றும் ரூ.50 லட்சம் செலவில் மாதிரி நூலகங்களாக தரம் உயர்த்தப்படும்.

மதுரை, திருச்சி, விருதுநகர், ஈரோடு ஆகிய 4 மாவட்ட மைய நூலகங்களில் உள்ள குழந்தைகள் பகுதி ரூ.20 லட்சம் செலவில் கம்ப்யூட்டர், கல்வி குறுந்தகடுகள் போன்ற நவீன சாதனங்களுடன் தரம் உயர்த்தப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.                                                               

    
 மழலையர் (எல்.கே.ஜி., யு.கே.ஜி.) பள்ளி தொடங்குவது பற்றி அரசு பரிசீலித்து வருகிறது.

மழலையர் பள்ளி தொடங்குவது பற்றி அரசு பரிசீலித்து வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் கூறினார்.

சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் தேமுதிக உறுப்பினர் ஆர்.சுபா (கெங்கவல்லி) பேசியது:

தனியார் பள்ஒவ்வொரு ளியிலும் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு கட்டாயம் வழங்க வேண்டும் என்று விதியுள்ளது. ஆனால் தனியார் மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் இடஒதுக்கீடு தர மறுக்கின்றனர்.

எனவே, சட்டவிதிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் வைகைச்செல்வன்: எந்தப் பள்ளி என்று குறிப்பிட்டுச் சொன்னால், அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். தனியார் பள்ளிகள் ஏழை மாணவர்களுக்கு கட்டாயம் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

ஆர்.சுபா: 5 வயது வரையிலான குழந்தைகளுக்கும் தரமான கல்வி அளித்திடும் வகையிலும், பெருகி வரும் ஆங்கில வழி மழலையர் பள்ளிகளுக்கு மாற்று ஏற்பாடு காணும் வகையிலும் அரசுப் பள்ளிகளில் இலவச மழலையர் கல்வி வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும்.

இதனால், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சதவீதம் அதிகரிக்கும்.
அமைச்சர் வைகைச்செல்வன்: மழலையர் (எல்.கே.ஜி., யு.கே.ஜி.) பள்ளி தொடங்குவது பற்றி அரசு பரிசீலித்து வருகிறது.                                                            

நன்றி :- தினமணி, 11-05-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.