Wednesday, May 15, 2013

மதுரையில் ரூ.100 கோடியில் தமிழ்த்தாய் சிலை !


பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: 

அமெரிக்க நாட்டின் பெருமையையும் புகழையும் உலகளவில் பரப்பும் வகையில், சுதந்திர தேவி சிலை அமைந்துள்ளது. அதேபோன்று, தமிழர்களின் நாகரிகம், பண்பாடு, இலக்கியச் செல்வங்கள், கட்டடக் கலைத் திறன் ஆகியவற்றை உலகுக்கு எடுத்துக் காட்டும் வகையில் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில் ரூ.100 கோடியில் தமிழ்த் தாய் சிலை அமைக்கப்படும்.

மேலும், ஐவகை நிலங்களான குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை ஆகியவற்றின் மாதிரிகளை உருவாக்கி தமிழர்களின் தொன்மைச் சான்றுகளாய் விளங்கும் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மரம், செடி, கொடிகளுடன் தமிழ்த் தாய்ப் பூங்கா உருவாக்கப்படும்.

அயல் நாட்டுத் தமிழறிஞரான ஜி.யு.போப்பின் தமிழ்த் தொண்டைப் போற்றும் வகையில், அயல்நாட்டு மொழிகளில் தமிழ் இலக்கியங்களை மொழி பெயர்க்கும் சிறந்த தமிழ் மொழி பெயர்ப்பாளருக்கு ஜி.யு.போப் விருது வழங்கப்படும்.

இஸ்லாமிய தமிழ்க் காப்பியங்களில் சிறந்த காப்பியமான சீறாப் புராணத்தை இயற்றிய உமறுப்புலவர் தமிழுக்கு ஆற்றிய அருந்தொண்டைப் போற்றும் வகையில் தமிழுக்கும், தமிழ் இலக்கியத்துக்கும் தொண்டாற்றி வரும் தமிழறிஞருக்கு உமறுப்புலவர் பெயரில் விருது வழங்கப்படும்.

கம்ப்யூட்டர் வழியே தமிழ் மொழி பரவிட வகை செய்திட கம்ப்யூட்டர் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில், முதலமைச்சர் கணினித் தமிழ் விருது வழங்கப்படும்.

இந்த மூன்று விருதுகளைப் பெறுபவருக்கு விருதுத் தொகையாக ரூ.1 லட்சம், தங்கப் பதக்கம், தகுதியுரை, பொன்னாடை ஆகியன வழங்கப்படும்.

இந்த விருதுகள் சித்திரை திருநாள் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று வழங்கப்படும்.

ஆந்திர பல்கலைக்கழகம்: தமிழறிஞர் மு.வ.வின் வேண்டுகோளுக்கிணங்க, ஆந்திரத்தில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான திருப்பதி திருவேங்கடன் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்ட தமிழ்த் துறை இப்போது பொன்விழா கண்டுள்ளது. அங்குள்ள பேராசிரியர்கள் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், மூன்று உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்படும்

தில்லி தமிழ்ச் சங்கம்: தில்லி தமிழ்ச் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று சங்கத்துக்குத் தோரண வாயில் கட்டுவதற்கு நிதியுதவியாக ரூ.25 லட்சம் வழங்கப்படும். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தொல்காப்பியத்தின் பெயரால் ஆய்விருக்கை ஏற்படுத்தப்படும். இதற்காக ரூ.50 லட்சம் வைப்புத் தொகையாக வைக்கப்படும்.

அண்ணா நினைவிடத்தில் பூங்கா: சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் 3 ஏக்கர் பரப்பிலான காலியிடத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதாஅறிவித்தார்.

நன்றி :- தினமணி, 15-05-2013    

0 comments:

Post a Comment

Kindly post a comment.