கவிஞர் முத்துலிங்கம், பேராசிரியர் ம.வே. பசுபதி, முனைவர் பால.இரமணி,
முனைவர் ம.லோகநாயகி ஆகியோருக்கு சிறந்த தமிழறிஞர்கள் விருதை இந்த ஆண்டு
தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான (2013) தமிழ்த்தாய் விருது, சிறந்த தமிழ் அமைப்பான
தில்லித் தமிழ்ச் சங்கத்துக்கு வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா
அறிவித்துள்ளார்.
தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி, தமிழக அரசு வழங்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
இலக்கியம் வளம் நிறைந்த தமிழ் மொழியைப் பேசுபவர்கள் 2 ஆயிரம்
ஆண்டுகளுக்கும் மேலாக சித்திரை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடி
வந்துள்ளனர். இதைக் கருத்தில் கொண்டும், ஒட்டு மொத்த தமிழர்களின்
உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் சித்திரைத் திங்கள் முதல் நாளை
மீண்டும் தமிழ்ப் புத்தாண்டாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில் சிறந்த தமிழ் அமைப்புக்கு தமிழ்த்தாய் விருதும், சிறந்த
தமிழறிஞர்களுக்கு கபிலர் விருதும், உ.வே.சா. விருதும் வழங்கப்பட்டன.
விருது பெறுவோர் யார் யார்? தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில்
வழங்கப்படும் கபிலர் விருதானது, மரபுச் செய்யுள் மற்றும் கவிதைப்
படைப்புகளைப் புனைவதில் ஆற்றல் பெற்ற கவிஞர் முத்துலிங்கத்துக்கும், அரிய
கையெழுத்துப் படிகள், கிடைத்தற்கரிய நூல்களைத் தொகுத்து தமிழுக்கு வளம்
சேர்க்கும் வகையில் பதிப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் பேராசிரியர் ம.வே.
பசுபதிக்கு உ.வே.சா. விருது வழங்கப்படும்.
இந்தத் தமிழ்ப் புத்தாண்டு முதல் ஆண்டுதோறும் கம்பராமாயணத்தின் உயரிய
கருத்துகளைப் பரப்பும் சிறந்த அறிஞருக்கு கம்பர் விருதும், சிறந்த
இலக்கியப் பேச்சாளருக்கு சொல்லின் செல்வர் விருதும் வழங்கப்படும் என ஆளுநர்
உரையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டுக்கான கம்பர் விருதுக்கு முனைவர் பால.இரமணியும்,
சொல்லின்செல்வர் விருதுக்கு முனைவர் ம.லோகநாயகியும் முதல்வர் ஜெயலலிதாவால்
தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விருதுகளைப் பெறுபவர்கள், ஒவ்வொருவருக்கும் பரிசுத் தொகையாக ரூ.1
லட்சமும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும், தகுதிச் சான்று மற்றும்
பொன்னாடையும் முதல்வர் ஜெயலலிதாவால் வரும் திங்கள்கிழமை (ஏப்ரல் 15)
வழங்கப்படும்.
2013 ஆம் ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருதுக்கு சிறந்த தமிழ் அமைப்பான
தில்லித் தமிழ்ச் சங்கத்தை முதல்வர் ஜெயலலிதா தேர்வு செய்துள்ளார். இந்த
அமைப்புக்கு விருதுத் தொகையாக ரூ.5 லட்சமும், கேடயம் மற்றும் பாராட்டுச்
சான்றும் வழங்கப்படும்
நனேஇ:- தினமணி, 12-04-2013
Saturday, April 13, 2013
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Kindly post a comment.