Tuesday, April 16, 2013

அண்ணாமலைப் பல்கலை. அரசு பல்கலை.யாக மாற்றும் மசோதா: ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு வரவேற்பு !

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு பல்கலைக்கழகமாக மாற்ற தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்த மசோதாவை, பல்கலைக்கழக ஆசிரியர் - ஊழியர் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் - ஊழியர் கூட்டமைப்பு துணை ஒருங்கிணைப்பாளரும், ஊழியர் சங்கத் தலைவருமான சி.மதியழகன் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

இணைவேந்தர் எம்.ஏ.எம்.ராமசாமியை நீக்க வேண்டும் என தொடர் போராட்டத்தை நடத்தி வந்தோம். பல்வேறு போராட்டங்களின் விளைவாக தமிழக முதல்வர் சட்டமாற்றம் கொண்டு வந்தது வரலாற்றுச் சிறப்பு மிக்கச் செயலாகும்.

எங்களது போராட்டத்துக்கு ஒத்துழைப்பு அளித்த அனைத்துக் கட்சியினருக்கும், அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் சங்கத்தினர்களுக்கும், குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த குடியாத்தம் சட்டப்பேரவை உறுப்பினர் பொன்னுபாண்டி ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

பல்கலைக்கழகத்தின் 12500 ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதல்வருக்கு ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தமிழக முதல்வர் பின்தங்கிய மாவட்டமான கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும். புதிதாக பொறுப்பேற்றுள்ள பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா பல்வேறு முறையான நடவடிக்கைகள் மேற்கொண்டு முறைகேடுகளை கண்டுபிடித்துள்ளார். எனவே தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சி.மதியழகன் தெரிவித்தார்.           

நன்றி :- தினமணி, 16-04-2013                                                                                              

0 comments:

Post a Comment

Kindly post a comment.