Wednesday, March 27, 2013

திசையெங்கும் திருவள்ளுவர் சிலைகள் ! -ஆய்வு அறிஞர் டாக்டர்.எஸ். பத்மநாபன்


திருவள்ளுவர் சிலையை டாக்டர் வி.ஜி. சந்தோஷம் அவர்கள் தமிழகத்தின் 

தலைநகரான சென்னை தங்கக் கடற்கரையிலும், அமெரிக்க நாட்டின் 

தலைநகர் வாஷிங்டன் தமிழ்ச் சங்கத்திலும், தென்னாப்பிரிக்காவிலுள்ள 

டர்பன் நகரிலும், நவி மும்பைத் தமிழ்ச் சங்கத்திலும், கங்கைக்கரையில் 

ரிஷிகேசத்திலும், மலாய் நாட்டின் தலைநகர் கோலாலம்பூரிலும், அந்தமான் 

தீவிலுள்ள தமிழர் சங்கத்திலும், விசாகப்பட்டினத்திலுள்ள தமிழ்க் கலை 

மையத்திலும் நிறுவியுள்ளார்.
 
இதுவரை 8 இடங்களிலும், இன்னும் 

பல்வேறு இடங்களில் திருவள்ளுவர் 

சிலையை நிறுவும் திட்டத்தையும் 

வைத்துள்ளார். சென்னை, 

வாஷிங்டன், டர்பன், ரிஷிகேசம் 

ஆகிய இடங்களில் திருவள்ளுவர் 

இருந்த கோலத்தில் காட்சி 

தருகிறார். அதன்பின்னர் 

எழுப்பப்பட்டுள்ள சிலைகள் கன்னியாகுமரி போன்று நின்ற 

கோலத்தில் காட்சி தருவது குறிப்பிடத்தக்கது. 


வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று 

பாடிய அமரகவி பாரதியாரின் கூற்றை மெய்ப்பித்து வரும் டாக்டர் 

சந்தோஷம் அவர்களைத் தமிழ்நாடு என்றும் மறவாது. 01.01.2000 அன்று 

முக்கடல் சங்கமத்தில் மூன்றெழுத்து நாயகி குமரி அம்மன் ஆலயத்தின் 

எதிரே முப்பால் தந்த திருவள்ளுவர் பெருமானுக்கு 133 அடி உயரம் கொண்ட 

திருவுருவச் சிலையை தமிழ்நாடு அரசின் சார்பில் அன்றைய முதல்வர் 

டாக்டர் கலைஞர் நிறுவினார். 01.01.2011 முதல் அச்சிலையின் ஆண்டு 

விழாவை நான் பொதுச் செயலாளராகப் பணிசெய்யும் கன்னியாகுமரி 

வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வு மையம் தொடர்ந்து நடத்தி வருகிறது.

ஜனவரி 23, 24 தேதிகளில் பாரத ஸ்டேட் பாங்கின் உதவியோடு 5-ஆவது 

ஆண்டு விழாவினையும், அதனை ஒட்டி விவேகானந்தபுரத்தில் 

குமரித்துறையில் துறவிகளின் தரிசனம் என்ற தலைப்பில் ஒரு 

கருத்தரங்கையும் நடத்தினோம்.


அந்த விழாவில் டாக்டர் வி.ஜி. சந்தோஷம் அவர்கள் எழுதிய அணு இமயமே! 

அக்கினிப்பூவே! என்ற தமிழ் நூலையும், World Peace என்ற ஆங்கில நூலையும் 

ஆய்வு மையப் பொருளாளர் டாக்டர். சிதம்பர நடராஜன் அறிமுகம் செய்ய, 

தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் அவ்வை 

நடராசன் வெளியிட, சாகித்திய அக்கடமி விருதுபெற்ற எழுத்தாளர் தோப்பில் 

முகம்மது மீரான் பெற்றுக்கொண்டார். 


கங்கைக்கரையில் திருவள்ளுவர் சிலையை  நிறுவிய டாக்டர். சந்தோஷம் 

அவர்களுக்கு  சிங்கம்பட்டி ஜமீன்தார், டாக்டர். அவ்வை நடராசன் 

முன்னிலையில் திருக்குறள் தூதர்  என்ற விருதினை வழங்கினார்.

 
மலாய் நாடு :

மலாய் நாட்டின் தலைநகர்  கோலாலம்பூரிலுள்ள மலாய்ப் 

பல்கலைக்கழகத்தில் மலேசியத்தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கத்தின் 

சார்பில் 2005 ஜூன் மாதம் 17 முதல் 19 வரை நடைபெற்ற உலகத்தமிழ் 

மறையான திருக்குறள் ஆராய்ச்சி மாநாடு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

அனைத்துலக முதல் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை 1966-லும், ஆறாவது 

மாநாட்டை 1987-லும் கோலாலம்பூரில் நடத்தியது போலவே அனைத்துலகத் 

திருக்குறள் ஆராய்ச்சி மாநாட்டையும் மலாய் வாழ் தமிழ் மக்களே 

கோலாலம்பூரில் 2005-இல் முதலில் நடத்தியது மிகவும் பாராட்டுக்குரியது.

இந்த மாநாட்டை ஒட்டி குமரி மாவட்டத்தில் மயிலாடியில் டாக்டர். 

சந்தோஷம் அவர்களால் உருவாக்கப்பட்ட 6 1/2அடி உயரம் கொண்ட 

திருவள்ளுவரின் கற்சிலையை 18.06.2005 அன்று மலாய் நாட்டுப் 

பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ.ச.சாமிவேலு திறந்து வைத்தார்.


நவி மும்பை :

2007 அக்டோபர் மாதம் மும்பை கார்கர் தமிழ்ச்சங்கம் மற்றும் நவி மும்பை 

தமிழ்ச்சங்கங்களின் அழைப்பின் பேரில் நான் நவிமும்பை சென்று இரண்டு 

நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். நவி மும்பை தமிழ்ச்சங்க அரங்கம் 

திருவள்ளுவர் பெயரைத் தாங்கி நிற்பதும், அந்த அரங்கின் முன்புள்ள சாலை 

திருவள்ளுவர் மார்க் (சாலை) என்று பெயரிடப்பட்டுள்ளது.

அந்நேரத்தில் திருவள்ளுவர் அரங்கத்தின் முன்பு திருவள்ளுவர் சிலை ஒன்று 

நிறுவினால் சிறப்பாக இருக்கும் என்ற என் எண்ணத்தைத் தமிழ்ச்சங்க 

நிர்வாகிகள் இராஜகோபால், மகாதேவன் ஆகியோரிடம் கூறினேன். 

அவர்களும் அங்கே திருவள்ளுவர் சிலையை நிறுவ ஒப்புக் கொண்டனர். 

இத்திட்டத்தை டாக்டர் சந்தோஷம் அவர்களிடம் நான் தெரிவித்தேன். அவர் 

உடனே என்னுடன் மயிலாடி வந்து அங்குள்ள சிற்பி நல்லக்கண்ணுவைப் 

பார்த்து 6 1/2 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை செய்ய ஏற்பாடு செய்தார்.

 
நவி மும்பைத் தமிழ்ச் சங்கமும், சென்னை வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கமும் 

இணைந்து நவிமும்பை தமிழ்ச் சங்க வளாகத்தில் 2008 ஜூன் 21, 22 தேதிகளில் 

திருவள்ளுவர் பற்றி நடத்திய கருத்தரங்கின் போது மயிலாடியில் செய்த 

திருவள்ளுவரின் கற்சிலை நிறுவப்பட்டு, 22.06.2008 அன்று காலை 10 மணிக்கு 

திருவள்ளுவர் சிலையை டாக்டர் சந்தோஷம் திறந்து வைத்தார். 

திருவள்ளுவர் சாலைக்கு அப்பெயரைச் சூட்டிய நவிமும்பை முதல் 

மாநகரத்தந்தை ஸ்ரீசஜ்சீவ் நாயக் முன்னிலைவகித்தார்.  

அந்தமான் தீவு :
அந்தமான் தீவில் தமிழ் வளர்ப்பதில் டாக்டர். சந்தோஷம் அண்ணாச்சிக்கு 

மிகுந்த ஆர்வம். 1994 மார்ச் மாதம் 25 அன்று தமிழ்க் கவிஞர்களைக் கப்பலில் 

அழைத்துச் சென்று, அந்தக் கப்பலிலேயே ஒரு கவியரங்கம் நடத்திச் சாதனை 

படைத்தவர் டாக்டர் சந்தோஷம் அவர்கள். போர்ட் பிளையரில் வி.ஜி.பி. 

உலகத் தமிழ்ச்சங்கமும், அந்தமான் தமிழர் சங்கமும் இணைந்து 

திருவள்ளுவர் சிலைத் திறப்பு விழாவினையும், ஒன்பதாவது திருக்குறள் 

மாநாட்டையும் 2009 டிசம்பர் 6, 7, 8 தேதிகளில் நடத்தியது. 

 

07.11.2009 அன்று மாலை இந்திய அரசு சமூக நீதித்துறை இணை அமைச்சர் 

நெப்போலியன் திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்தார்.

விசாகப்பட்டினம் : வி.ஜி.பி. உலகத்தமிழ்ச் சங்கமும் விசாகப்பட்டினம் தமிழ்க் 

கலை மன்றமும் இணைந்து 2013 ஜனவரி 20 அன்று விசாகையில் 

திருவள்ளுவர் சிலைத் திறப்பு விழாவையும், 12-ஆவது திருக்குறள் 

மாநாட்டையும் சிறப்பான முறையில் நடத்தியது.

விசாகைத் தமிழ்க்கலைமன்றச் செயலாளர் திவாகர் திருவள்ளுவர் 

சிலையெழுப்பும் அவரது வேண்டுகோளை அண்ணாச்சி வழியாக நான்தான் 

நிறைவேற்றினேன். விசாகையில் திருவள்ளுவர் சிலையை தமிழ்நாடு 

ஆளுநர், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ரோசய்யா அவர்கள் 

திறந்து வைத்தார். அடுத்து ஆஸ்திரேலியாவில் மெல்பர்ன் நகரிலும், 

கல்கத்தாவிலும் திருவள்ளுவர் சிலையெழுப்ப மயிலாடியில் கற்சிலை 

தயாராகி வருகிறது.
இந்த ஆண்டே அங்கு திருவள்ளுவர் சிலை நிறுவப்படும். இவ்வாறு வி.ஜி.பி. 

உலகெலாம் திருவள்ளுவர் சிலை எழுப்பி திருக்குறள் மாநாட்டையும் 

நடத்துவது தமிழ் இனத்திற்கே பெருமையளிக்கிறது. 

இதையெல்லாம் மனதிற்கொண்டுதான் பாரத நாட்டின் முன்னாள் குடியரசுத் 

தலைவர் டாக்டர் அப்துல் கலாம் நாகர்கோவிலில் 09.07.2010 அன்று 

நடைபெற்ற ஒரு விழாவில் திருவள்ளுவர் தூதர் என்ற விருதினை வழங்கிப் 

பெருமைப்படுத்தினார். திருவள்ளுவரின் புகழை இதுவரை 8 நகரங்களில் 

பரப்பி, இனிமேல் உலக நாடுகளிலும் பரப்ப உள்ள அண்ணாச்சி வி.ஜி. 

சந்தோஷத்தைத் தமிழகம் என்றும் மறவாது. 

நன்றி :-ஓம் சக்தி மார்ச் 2013



0 comments:

Post a Comment

Kindly post a comment.