Sunday, March 17, 2013

தாத்தா-பாட்டிகளைத் தத்து எடுக்கிறார்கள் !

குழந்தைகளைத் தத்து எடுத்து வளர்ப்பதைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆதரவற்ற தாத்தா - பாட்டிகளைத் தத்து எடுத்து அவர்களைப் பாதுகாப்பதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

கடலூர், நாகப்பட்டினம், வேதாரண்யம் பகுதிகளில் மட்டும் 300க்கும் மேற்பட்ட முதியவர்கள்  தத்து எடுக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறார்கள்'' என்கிறார் இளங்கோ. இந்தப் பகுதிகளில் செயல்படும் "முதியோர்களுக்கான முதியோர் அமைப்பைச்' சேர்ந்தவரான அவர், இந்த அமைப்பின் முன் முயற்சியால் முதியவர்கள் தத்து எடுக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறார்கள் என்கிறார்.

எனது சொந்த ஊர் திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளபட்டி. எம்.ஏ., ரூரல் டெவலப்மென்ட் படித்திருக்கிறேன். என் அப்பா இறந்ததும், அவர் வயதுள்ள முதியவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற விருப்பத்தில் ஏதாவது முதியோர் இல்லத்தில் சேர்ந்து செயல்படலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

அந்த நேரத்தில் சுனாமி வந்தது. சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக கடலூருக்கு வந்தேன். என் சேவை மனப்பான்மையின் காரணமாக ஹெல்பேஜ் இன்டியா என்ற தொண்டு நிறுவனத்தில் சேர்ந்தேன்.

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நிறைய அமைப்புகள் அப்போது செயல்பட்டு வந்தன. அதிலும் சுனாமியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ நிறைய அமைப்புகள் முன் வந்தன. ஆனால் சுனாமியால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு உதவ  ஒரு சிலரே முன் வந்தார்கள். எனவே முதியவர்களுக்கு உதவ ஹெல்பேஜ் இன்டியா முதியோர் சுய உதவிக் குழுக்களை அமைத்தது. அவற்றின் மூலமாக முதியோர்களுக்குச் சேவை செய்து கொண்டிருந்தேன்.

2007 ஆம் ஆண்டில்தான் முதியோர்களுக்கான முதியோர் அமைப்பை ஏற்படுத்தினோம். ஆதரவற்ற  முதியவர்கள், முதியோர் இல்லங்களுக்குப் போகலாம். ஆனால் அதற்குப் பணம் யார் கட்டுவது? பணம் கட்ட வசதியில்லாதவர்கள் என்ன செய்வது?

எனவே நாங்கள் கிராமப்புறங்களில் வாழும் ஏழை முதியவர்களைக் கவனத்தில் கொண்டோம். அவர்கள் காலம் முழுக்க உழைத்துக் களைத்தவர்கள்.  முதுமையின் காரணமாக உழைக்க முடியாமல் போனவர்கள். அப்படி உழைக்க முடியாமல் போனவர்களைப் பாதுகாக்க அவர்களுடைய மகன்களுக்கோ, மகள்களுக்கோ வசதியில்லாமல் இருக்கலாம். சில குடும்பங்களில் முதியவர்களைப் புறக்கணித்துத் தெருவில் விட்டிருக்கலாம். சிலருக்கு மகன்களோ, மகள்களோ இல்லாமல் இருக்கலாம். எனவே கிராமங்களில் உள்ள ஏழை முதியவர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைத்தோம்.

வீட்டை விட்டுப் பிரிந்து - தாம் வாழ்ந்த இடத்தைப் பிரிந்து - பழகிய மனிதர்களைப் பிரிந்து  முதியோர் இல்லங்களுக்குச் சென்று அங்கே  வாழ்வதற்கு பல முதியவர்கள் விரும்புவதில்லை.

எனவே முதியவர்கள் அவர்கள் இருக்கும் வீட்டிலேயே - ஊரிலேயே - இருக்க வேண்டும். அதே சமயத்தில் அவர்களைப் பாதுகாக்கவும் வேண்டும். இதற்கு என்ன செய்யலாம்? என்று யோசித்தோம்.

அப்போது தோன்றியதுதான் முதியவர்களைத் தத்து எடுக்கும் திட்டம். எங்கள் அமைப்பின் மூலமாக உண்மையிலேயே யாருமற்ற, துன்பப்படுகிற முதியோர்களை முதலில் கண்டறிந்தோம். பின்பு அவர்களைத் தத்து எடுத்துப் பராமரிக்கத் தயாராக உள்ள நல்ல உள்ளம் கொண்டவர்களைத் தேடிப் பிடித்தோம். அவர்களிடம் முதியவர்களை ஒப்படைத்தோம்.

அவ்வாறு 700 க்கும் மேற்பட்ட முதியவர்கள் கடலூர், நாகப்பட்டினம், வேதாரண்யம் பகுதிகளில் இருந்தார்கள். அவர்களில் சுமார் 400 பேருக்கு அரசின் முதியோர் உதவித்தொகை  கிடைப்பதால், அவர்கள் நீங்கலாக மீதமுள்ள 316 ஆதரவற்ற ஏழை முதியவர்களைப் பராமரிப்பதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறோம். அதில் ஓரளவு வெற்றியும் கிடைத்திருக்கிறது.

உதாரணமாக வேதாரண்யம் பகுதியில் எட்டு முதியவர்களைப் பராமரிக்க சில இளைஞர்கள் முன் வந்துள்ளனர்.  கடிநெல்வயல், நாலுவேதபதி, ஆற்காட்டுதுறை, கொள்ளிதீவு, முதலியார்தோப்பு போன்ற ஊர்களில் உள்ள முதியவர்களைப் பராமரிக்க அண்ணாமலை, மோகன், மனோகரன், கரிகாலன், பஞ்சநாதன், ஆறுமுகம் போன்ற இளைஞர்கள் முன்வந்தனர்.

கொள்ளித்தீவு கிராமத்தில் உள்ள பேத்தன் என்ற முதியவரையும், கடிநெல்வயலில் உள்ள சோமு என்ற முதியவரையும், ஆற்காட்டுதுறையில் உள்ள ராமாயி என்ற மூதாட்டியையும் அண்ணாமலை தத்து எடுத்துள்ளார்.  நாலுவேதபதியில் உள்ள ஜோதி என்பவரை கரிகாலன் தத்தெடுத்துள்ளார். கோடியக்கரையில் உள்ள லோகநாயகி என்ற 78 வயது பாட்டியை ஆறுமுகம் தத்தெடுத்துள்ளார். அகஸ்தியன் பள்ளி பவுனம்பாளை மோகனும், கீழாறுமுகக்கட்டளையைச் சேர்ந்த நடேசனை பஞ்சநாதனும், மூட்டாண்டித்தோப்பு அஞ்சம்மாளை மனோகரனும் தத்தெடுத்துள்ளனர்.

இவர்கள் எல்லாருமே இந்த முதியவர்களை அவர்களின் அப்பா, அம்மா  போலவே நடத்துகின்றனர். தாங்கள் தத்தெடுத்துள்ள முதியவர்களின் தேவைகளைத் தெரிந்து கொண்டு உதவுகின்றனர். அவர்களுக்கு உடல் நலம் சரியில்லை என்றால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவம் பார்க்கின்றனர். மாதா மாதம் அவர்களுடைய சாப்பாட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்துவிடுகின்றனர். இத்தனைக்கும் இவர்களை ரொம்ப வசதியானவர்கள் என்று சொல்லவும் முடியாது. சிறு சிறு தொழில்கள் செய்பவர்கள். கரிகாலன் மட்டும் காவல்துறைப் பணியில் உள்ளார்.

பெற்ற பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்ட அல்லது பராமரிக்க முடியாத முதியவர்கள் நாடு முழுக்க உள்ளனர்.  சமுதாயத்துக்குத் தேவையான உழைப்பில் இளம் வயதிலிருந்து ஈடுபட்டவர்களை - அவர்களால் உழைக்க முடியாதபோது - சமுதாயம்  கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறது.  அவர்களுடைய கடைசிக் காலத்தில் உணவில்லாமல் திண்டாடும் பரிதாபநிலை வந்துவிடுகிறது. இந்நிலையை மாற்ற எங்களாலான சிறிய முயற்சிதான் இந்த முதியவர்களைத் தத்தெடுக்கும் திட்டம்'' என்கிறார் இளங்கோ.                                                                                                                               

நன்றி :-ந.ஜீவா. ஞாயிறு கொண்டாட்டம், தினமணி, 17-03-2013                                      

0 comments:

Post a Comment

Kindly post a comment.