Sunday, March 24, 2013

காலத்தால் அழியாத செஞ்சிக் கோட்டை !


தென் இந்தியாவில் கண் என்று அழைக்கப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாக இருக்கும் செஞ்சிக்கோட்டை, விழுப்புரம் மாவட்டத்தில் சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது.

பண்டையகால மனிதர்கள் எப்படி வாழ்ந்தார்கள்? என்பதை நாம் வரலாற்றில் படித்துத் தெரிந்து கொள்கிறோம். அதே சமயம், கடந்த கால மன்னர்களின் வாழ்க்கை முறையைப் பற்றி அவர்கள் வாழ்ந்த, ஆட்சிபுரிந்த இடங்களை நேரில் கண்டு, தொட்டுப் பார்த்து, மகிழந்து தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தால்.. அது எவ்விதம் இருக்கும் என்பதை உணர வேண்டும் என்றால், நீங்கள் செல்ல வேண்டியது செஞ்சிக்கோட்டைதான்.

செஞ்சிக் கோட்டையை ஆட்சி புரிந்த ராஜாதேசிங்கு உள்ளிட்ட வீரமிக்க மன்னர்களைப் போன்று கம்பீரமாக விண்ணை முட்டி நிற்கிறது செஞ்சிக்கோட்டை. கால மாற்றங்களையும், பல்வேறு படையெடுப்புகளையும் முறியடித்து காட்சி தருகிறது செஞ்சிக்கோட்டை. கடைசி மன்னராக செஞ்சிக்கோட்டையை ஆண்ட ராஜா தேசிங்கு வாழ்ந்த இடம், போரிட்ட இடம், மரணம் தழுவிய இடம், தேசிங்கின் மனைவி ராணிபாய் உடன்கட்டை ஏறிய இடம் என பார்த்துப் பரவசம் அடைய ஏராளமான வரலாற்று நினைவிடங்களைத் தன்வசம் வைத்துள்ளது இந்த இடம்.

வியப்பில் ஆழ்த்தும் கட்டடக் கலைக்கு எடுத்தக்காட்டாகக் கலைநயத்துடன் கல்லில் கட்டப்பட்ட கம்பீரமான கட்டுமானத்தைக் கண்டு வியப்படையாதவர்களே இல்லை. தேசிங்குராஜன் ஆட்சி செய்த 17-ம் நூற்றாண்டின் வரலாற்றின் காலத்திற்கே நம்மை அழைத்துச் செல்லும் இடமாக விளங்கி வருகிறது இந்த செஞ்சிக் கோட்டை. இதற்குள் நுழையும் போது நமக்கு தேசிங்கு ராஜாவின் ஆட்சி முறை மற்றும் அந்த கட்டடக் கலையின் நுணுக்கங்கள் பற்றி எடுத்துச் சொல்லவோ அல்லது அதைப் பற்றிய விவரங்களை ஏற்கனவே அறிந்து வைத்துக் கொள்வதோ மிகவும் நல்லது.

கோட்டையைப் பார்த்து விட்டு வெளியே வரும்போது நாம் இந்த நூற்றாண்டை அடைந்து விட்டோம் என்ற உணர்வு அனைவருக்கும் ஏற்படும்.

இந்த விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க செஞ்சிக்கோட்டை கொத்தலங்களை பார்ப்பதன் மூலம் வரலாற்றை படிப்பதில் இருக்கும் ஆர்வத்தை விட வரலாற்றை நேரில் பார்த்த அனுபவம் ஏற்படும். இந்தியத் தொல்லியல்துறையின் முழுக் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள செஞ்சிக் கோட்டையில் சுற்றுலாப் பயணிகளுக்கு சில அடிப்படை வசதிகள் செய்து பழமை மாறாமல் பராமரிக்கப்பட்டு  வருகிறது.

ஆனால் அதிகாரபூர்வமாக செஞ்சிக் கோட்டையைத் தமிழ்நாடு அரசு சுற்றுலா மையமாக அறிவிக்காததும், தமிழ்நாடு அரசு சார்பில் செஞ்சிக்கோட்டையில் எந்த ஒரு இடத்திலும் சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை வசதியைச் செய்து தரவில்லை என்பதும் வேதனைக்குரியது.

 இராஜா கோட்டையின் கீழே பார்க்க வேண்டிய இடங்கள்

சிவன் கோயில், அம்மன் ஆலயம், வேலூர் வாயில், சாதத்துல்லாகான் மசூதி, பாண்டிச்சேரி வாயில், வெங்கடரமணர் ஆலயம், சுழலும் பீரங்கிமேடை, உளி வளிக்கும் கல் பட்டறை, கல்யாண மஹால், முகமதுகான் மசூதி, அரண்மணை வளாகம், பணியாளர்கள் தங்கும் அறை, கல்யாண மஹால், குதிரை லாயம், யானைக்குளம், ஆயுதக் கிடங்கு, உடற்பயிற்சி அரங்கம், வெடி மருந்துக் கிடங்கு, நெல் களஞ்சியம், வேணுகோபாலசுவாமி கோயில், ஜும்மா மசூதியின் கலை பாணி, தேசிங்குராஜன் உடல் எரியூட்டப்பட்ட இடம், ஏழு கன்னிமார் கோயில், சர்க்கரைக் குளம், செட்டிகுளம், ஆஞ்சநேயர் கோயில், மரணக்கிணறு ஆகியவை பார்க்க வேண்டிய முக்கிய இடங்களாகும்.

இராஜகிரி மலை மீது பல அற்புதங்களைக் கொண்ட கலைநயத்துடன் விளங்கும் கட்டடங்கள் கலைநயம் மிக்க கோயில்கள், அரண்மனைகள் மற்றும் பாலரங்கநாதர் கோயில், கமலக்கண்ணி அம்மன் கோயில், சுனை நீர், இழுவை பாலம், மணிக்கூண்டு, பீரங்கி என அற்புதமான இடங்களை கோட்டையின் மீது ஏறிச் சென்று பார்த்துப் பரவசம் அடையலாம்.

இராணிக்கோட்டை என அழைக்கப்படும் கிருஷ்ணகிரிக் கோட்டை

திருவண்ணாமலை சாலையில் அமைந்துள்ள ராணிக்கோட்டையை அந்தப் பக்கம் பயணம் செய்வோர் பார்க்காமல் செல்ல முடியாது. அற்புதமான அழகுடன் காட்சி அளிக்கும் இராணிக்கோட்டையைப் பார்க்கப் பார்க்க அழகுதான். இயற்கை எழிலுடன் கட்டப்பட்ட மலைக்கோட்டைதான் இராணிக்கோட்டை. கோட்டை மீது சுழலும் பீரங்கிமேடை, நெற்களஞ்சியம், அரங்கநாதர் ஆலயம், எண்ணெய்க் கிணறு, அழகிய கட்டட கலைநயத்துடன் கூடிய தர்பார் மண்டபம், கிருஷ்ணர் கோயில், மலையடிவாரத்தில் உள்ள பூவாத்தமன் கோயில் என பார்க்க பல இடங்கள் உள்ளன.

வரலாற்றின் முந்தைய காலத்தையும் அவர்கள் வாழ்ந்த விதம் மற்றும் கடைசியாக மன்னர்கள் மற்றும் குறுநில மன்னர்கள், ஆங்கிலேயர்கள் வரை ஆண்ட செஞ்சிக்கோட்டையை அவசியம் பார்த்து இந்த விடுமுறையைப் பயனுள்ளதாக்குவோம்.

எவ்வளவு தூரம்?

சென்னையில் இருந்து 150 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது செஞ்சிக்கோட்டை. விழுப்புரத்தில் இருந்து 37 கிலோ மீட்டரும், திண்டிவனத்தில் இருந்து 27 கிலோ மீட்டர் தூரமும், திருவண்ணாமலையில் இருந்து 38 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. செஞ்சிக் கோட்டையைப் பார்க்க வருவதற்குப் பேருந்து தான் வசதியாக இருக்கும். கோட்டை வாயிலுக்கு அருகிலேயே பேருந்து நிறுத்தம் உள்ளது.                                                                 

நன்றி :- தினமணி, 19-03-2013


0 comments:

Post a Comment

Kindly post a comment.