Saturday, January 19, 2013

"நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு' - சகாயம்





சமுதாயத்தில் நேர்மையாக வாழ்ந்து வருபவர்களாலேயே வரலாறு மாற்றப்படுகிறது என்று கோ-ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குநர் சகாயம் கூறினார்.

36-ஆவது சென்னைப் புத்தகக் காட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உரையரங்கில் கலந்து கொண்டு "நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு' என்ற தலைப்பில் அவர் மேலும் பேசியது:

நேர்மை என்றால் அது அரசு அலுவலருக்கு மட்டுமான பண்பு என்று மட்டுமே அனைவரும் கருதுகின்றனர். ஆனால் அது சமுதாயத்தில் உள்ள அனைவருக்குமான பண்பு. நேர்மை என்ற சொல்லுக்குச் சமூகத்தில் நேர்க்கோட்டில் பயணம் செய்வது, கடைக்கோடி ஏழைக்கும் இரக்கம் காட்டுவது என்றும் பொருள் கொள்ளலாம்.

இந்தியா இன்று பல துறைகளில் வளர்ச்சி கண்டுள்ளது. சாலைகளும் ஆலைகளும் பெருகிவிட்டன. ஆனால் நாட்டின் கடைக்கோடியில் உள்ள பாமரனுக்குச் சுதந்திரத்தின் பலன் இன்னும் கிடைக்கவில்லை. நாட்டின் சுதந்திரத்துக்காக எண்ணற்ற தலைவர்கள் அளப்பரிய தியாகம் செய்துள்ளனர். ஆனால் தேசத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் விவசாயி நஞ்சு உண்டு இறக்கிறான் என்றால் பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தின் பலன் என்ன என்று தெரியவில்லை.

லஞ்சமும் ஊழலும் இன்று வெறும் பொருளாதாரப் பிரச்னையாக மட்டும் இருக்கவில்லை. லஞ்சம் அடிப்படையில் ஏழைகளுக்கு எதிரானதாக உள்ளது. நாட்டுக்கும், மானுடப் பண்புக்கும் எதிரானதாக உள்ளது. எனவே லஞ்சமும் ஊழலும் எல்லா நிலைகளிலும் முற்றிலும் அகற்றப்பட வேண்டும். இப்போதெல்லாம் நேர்மையாளர்களைப் பைத்தியக்காரன் என்கின்றனர். ஆனால் நேர்மையாளர்கள்தான் வரலாற்றையே மாற்றியுள்ளதாக உலக சரித்திரம் கூறுகிறது.

சமூகத்தில் எந்த அங்கமும் பொறுப்பின்றி இருந்துவிடலாம். ஆனால் ஆசிரியர்கள் அப்படி இருந்துவிட்டால் எல்லாமும் பாழாகிவிடும். ஆசிரியர்கள் சமூக மாற்றத்துக்கான கருவிகள். அவர்களிடம் இருந்தே நேர்மையான இளைய தலைமுறை உருவாக்கப்பட வேண்டும்.

இன்றையக் காலகட்டத்தில் ஊழல்வாதிகள், லஞ்சம் பெறுவோர் மிகுந்த செல்வாக்குடன் இருக்கின்றனர். அதேநேரம் நேர்மையாக இருப்பதால் உறவுகள், நண்பர்களைப் பெரிதும் இழக்கவும் நேரிடுகிறது. ஆனால் நேர்மையானவர்களுக்கு அடித்தட்டு மக்களிடம் இருந்தும் அங்கீகாரம் கிடைக்கும். அவர்கள் நேர்மையை மிகவும் நேசிக்கின்றனர். அதை நானே பல முறை உணர்ந்துள்ளேன் என்றார் சகாயம்.

நிகழ்ச்சியில் இலக்கியப் போக்குகள் என்ற தலைப்பில் கண்மணி சேகரனும், இளைஞர்களும் கனவுகளும் என்ற தலைப்பில் ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.ஆறுமுகமும் பேசினர். பபாசி நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர்.மனோகர் வரவேற்றார். எம்.சாதிக்பாட்சா நன்றிகூறினார்.                                                               

நன்றி :--தினமணி, 19-01-2013                                                         



0 comments:

Post a Comment

Kindly post a comment.