Monday, December 31, 2012

இமயமலைப் பகுதியில் பெரும் பூகம்பம் ஏற்படும் ஆபத்து: விஞ்ஞானிகள் எச்சரிக்கை !


சிங்கப்பூர், டிச.31-

இந்தியாவின் வட பகுதியில் அமைந்துள்ள இமயமலை பூகம்ப ஆபத்து அதிகம் உள்ள பகுதி ஆகும். இந்த பகுதியில் கடந்த 1897, 1905, 1934, 1950 ஆகிய ஆண்டுகளில் பெரிய அளவில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. அப்போது 7.8 முதல் 8.9 ரிக்டர் அளவு வரை பூகம்பம் உண்டானது. அதன்பிறகும் அந்தப் பகுதியில் பலமுறை பூமி அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.

ஆனால் வருங்காலத்தில் இமயமலைப் பகுதியில் கடுமையான அளவில் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சிங்கப்பூரைச் சேர்ந்த நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்குழு ஒன்று எச்சரித்து உள்ளது. பால் டப்போனியர் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு நடத்திய ஆய்வில் இது தெரிய வந்து உள்ளது. இந்த குழுவில் நேபாளம், பிரான்சு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளும் இடம் பெற்று இருந்தனர்.

ஆய்வு தொடர்பாக அந்தக் குழுவின் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்தியாவில் இமயமலை பகுதியில் 1255 மற்றும் 1934 ஆகிய ஆண்டுகளில் இரு மிகப்பெரிய பூமி அதிர்ச்சிகள் ஏற்பட்டன. குறிப்பாக 1934-ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தின் போது இமயமலையின் தென் பகுதியில் பூமிக்கு அடியில் உள்ள நிலத்தட்டில் 150 கிலோ மீட்டர் நீளத்துக்கும் மேலாக வெடிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியின் நிலப்பரப்பிலும் சிறிது மாற்றங்கள் நிகழ்ந்தன.

வருங்காலத்தில் இமயமலைப் பகுதியில் பெரிய அளவில் பூகம்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளன. இந்த பூகம்பங்கள் 8 முதல் 8.5 ரிக்டர் அளவு வரை இருக்கக்கூடும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, காஷ்மீர் மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு 11.20 மணி அளவில் 5.9 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைப்பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் திரிபுரா மாநிலத்தில் இந்தியா-வங்காளதேசம் எல்லையையொட்டிய பகுதியில் நேற்று பிற்பகல் 1.47 மணிக்கு 4.2 ரிக்டர் அளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. அதனால் சேதம் எதுவும் ஏற்படவில்லை.                                                                                                                            

நன்றி :- மாலைமலர், 31-12-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.