Saturday, December 1, 2012

ரயில் பயணிகள் அசல் அடையாள அட்டையைக் கொண்டு செல்ல வேண்டும்: இன்று முதல் அமல் !


ரயில்களில் உயர் வகுப்பு முன்பதிவுப் பயணிகளுக்கு மட்டும் இப்போது அசல் அடையாள அட்டையைப் பயணத்தின்போது கொண்டு செல்ல வேண்டும் என்ற விதி உள்ளது.

இரண்டாம் வகுப்புப் படுக்கை, இருக்கை வசதிப் பயணிகள் இதுவரை அடையாள அட்டை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் 2-ஆம் வகுப்பு முன்பதிவு டிக்கெட்டுகளில் இடைத்தரகர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவது குறித்து ரயில்வே துறைக்குப் புகார்கள் வரத்தொடங்கின.

ஏ.சி உயர் வகுப்பு பயணிகள், முதல் வகுப்பு பயணிகள், 2-ம் வகுப்பு படுக்கை மற்றும் இருக்கை முன்பதிவுப் பயணிகள் அனைவரும் பயணத்தின்போது அசல் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறை சனிக்கிழமை முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வருகிறது.

இதன் மூலம் இடைத்தரகர்களின் முறைகேடுகள் முற்றிலுமாக ஒழிந்து முறையாக முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு டிக்கெட்டுகள் கிடைக்கும் என்று ரயில்வே துறை எதிர்பார்க்கிறது.

எனவே சனிக்கிழமை (டிசம்பர் 1) முதல் முன்பதிவு பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் புகைப்படத்துடன் கூடிய அசல் அடையாள அட்டையை (ORIGINJAL) வைத்திருக்க வேண்டும்.

அட்டைகள் விவரம்: ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு, மத்திய, மாநில அரசு ஊழியர்கள் அடையாள அட்டை, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அடையாள அட்டை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஊழியர்கள் அடையாள அட்டை போன்றவற்றைp பயணிகள் அடையாள அட்டையாகப் பயன்படுத்தலாம்.

ஒரு டிக்கெட்டில் 5 அல்லது 6 பேர் மொத்தமாகப் பயணம் செய்தால் அதில் யாராவது ஒருவருக்கு மட்டும் புகைப்படத்துடன் அடையாள அட்டை இருந்தால் போதுமானது. மற்றவர்கள் அடையாள அட்டை வைத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை.

டிக்கெட் பரிசோதகர் சரி பார்க்க வரும்போது, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஏதாவது ஒன்றை அவரிடம் காண்பிக்க வேண்டும். அடையாள அட்டை வைத்திருக்காவிட்டால், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததாகக் கருதி அபராதம் விதிக்கப்படும்.

அபராதம் எவ்வளவு? பயணம் செய்யும் டிக்கெட்டின் கட்டணம் ரூ.250-க்கும் மேலாக இருந்தால் அதன் மீது இரு மடங்கு அபராதம் விதிக்கப்படும். அதாவது ரூ.300 டிக்கெட் கட்டணம் என்றால் அவற்றுடன் மேலும் ரூ.300 சேர்த்து ரூ.600 அபராதம் விதிக்கப்படும்.

ரூ.250-க்கும் குறைவான டிக்கெட் கட்டணமாக இருந்தால் டிக்கெட் கட்டணத்துடன் ரூ.250 அபராதம் விதிக்கப்படும். அதாவது ரூ.240 டிக்கெட் கட்டணமாக இருந்தால் அவற்றுடன் ரூ.250 சேர்த்து மொத்தம் ரூ.490 அபராதமாக வசூலிக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.                                                                                                                             

நன்றி :- தினமணி, 01-12-2012


0 comments:

Post a Comment

Kindly post a comment.