Wednesday, November 28, 2012

அரசு மருத்துவமனைகளின் டெங்கு வார்டுகளில், சித்த மருத்துவ சிகிச்சையைத் துவக்கி உள்ளது.

டெங்குக் காய்ச்சலால் ஏற்பட்டு வரும், உயிரிழப்புகளைத் தடுக்க முடியாமல் திணறிவரும் தமிழக அரசு, வேறு வழியின்றி, அரசு மருத்துவமனைகளின் டெங்கு வார்டுகளில், சித்த மருத்துவ சிகிச்சையைத் துவக்கி உள்ளது.

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில், இந்த ஆண்டு, ஜூன், ஜூலை மாதங்களில், 39 பேரை பலிகொண்ட, டெங்கு காய்ச்சலின் தீவிரம், இரண்டு மாதங்களாகக் குறைந்தபாடில்லை.

மதுரை மாவட்டத்தில் மட்டும், டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சலுக்கு இதுவரை, 50க்கும் மேற்பட்டோர் பலி ஆகி உள்ளனர். நாள்தோறும், பலி எண்ணிக்கை உயர்ந்து வருவதால், பொதுமக்கள் டெங்கு பீதியில் உறைந்துள்ளனர்.

டெங்குக் காய்ச்சலைத் தடுக்கும் தன்மை உள்ளதாக, சித்த மருத்துவர்கள் கூறும், நிலவேம்பு குடிநீர்க் கஷாயத்தை, அக்., 26ம் தேதி முதல், சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள, அரசு சித்த மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட, அனைத்து அரசு மருத்துவமனைகளின் சித்த மருத்துவ பிரிவுகளில் வழங்க, அரசு நடவடிக்கை எடுத்தது.

டெங்குக் காய்ச்சலைத் தடுப்பது மட்டுமின்றி, இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாகச் சிகிச்சை பெறுவோரையும், சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியும். இதற்கான வாய்ப்பை அரசு அளிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து, இம்மாதம், 2ம் தேதி, தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.

இந்நிலையில், டெங்கு காய்ச்சலால், நாள்தோறும் ஏற்பட்டு வரும் உயிரிழப்புகளைத் தடுக்க முடியாததால், வேறு வழியின்றி, அரசு மருத்துவமனைகளின் டெங்கு வார்டுகளில், அலோபதி சிகிச்சையுடன், சித்த மருத்துவ சிகிச்சையையும் அளிக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

சென்னை, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, டெங்கு வார்டில், சித்த மருத்துவ சிகிச்சையை, சுகாதார துறை அமைச்சர் விஜய் நேற்று துவக்கி வைத்து, நிருபர்களிடம் கூறியதாவது:

அலோபதி மருத்துவத்தில், டெங்கு காய்ச்சலுக்குத் தனியாக சிகிச்சை இல்லை. சித்த மருத்துவத்தில் டெங்குவைக் குணப்படுத்த முடியும் என, பரிசோதனை முறையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இச்சிகிச்சையால் பக்கவிளைவுகள் இல்லை என்பதால், மதுரை உள்ளிட்ட இடங்களில், அரசு மருத்துவமனை, டெங்கு வார்டுகளில் சிகிச்சை பெறுவோருக்கு, அலோபதி சிகிச்சையுடன், சித்த மருத்துவ சிகிச்சையும் துவங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அமைச்சர் விஜய் கூறினார்.

அரும்பாக்கம், சித்த மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி மாணவர் வீரபாபு கூறியதாவது: டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு, காய்ச்சலைக் குறைக்க, நிலவேம்பு குடிநீர்க் கஷாயமும், ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, பப்பாளி இலைச் சாறும் வழங்கப்படும்.

இவற்றுடன், நோய் எதிர்ப்பு சக்திக்கு, மலைவேம்பு சாறும் தரப்படும்.இவற்றை, அரசு மருத்துவமனைகளில், உள்நோயாளிகளாகச் சிகிச்சை பெறும் டெங்கு நோயாளிக்கு, வயதிற்கேற்ப, 5 முதல் 10 மி.லி., அளவிற்கு, ஒரு நாளைக்கு, நான்கு முறை அளித்தால், மூன்று நாட்களில், டெங்கு குணமாகும்

டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள் கண்டறியப்படும் புறநோயாளிகளுக்கும், சித்த மருந்துகளைத் தருவதன் மூலம், டெங்குவை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தலாம்.இவ்வாறு வீரபாபு கூறினார்.

நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் கனகசபை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

டெங்கு மற்றும் பிற வைரஸ் காய்ச்சல்களுக்கு, சித்த மருத்துவ சிகிச்சை அளிப்பது குறித்து, மருத்துவக்கல்வி இயக்குனர், பொது சுகாதார துறை இயக்குனர், ஊரக மருத்துவப் பணிகள் இயக்குனர் ஆகியோருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகள், இ.எஸ்.ஐ., மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றுக்கு, இச்சிகிச்சை குறித்து தெரிவிக்க, மாவட்ட கலெக்டர்கள், இந்திய மருத்துவ துறைக் கமிஷனர் ஆகியோர், அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என, சுகாதாரத் துறையின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



நன்றி :- யாகூ தமிழ் நியூஸ், 28-11-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.