Wednesday, November 28, 2012

செவ்வாய்க் கிரகத்தில் 20 ஆண்டுகளில் 80 ஆயிரம் பேரை குடியமர்த்தத் திட்டம் ! இப்போதே முன்பதிவு செய்யலாம்:


சூரியக் குடும்பத்தில் உள்ள கிரகங்களில் செவ்வாய் 4-வது கிரகமாக உள்ளது. இது சூரியனில் இருந்து 22.79 கோடி கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இது ஒரு முறை சூரியனைச் சுற்றிவர 687 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. பூமியில் இருந்து 5 கோடியே 46 லட்சம் கி.மீட்டர் தொலைவில் உள்ளது.               

இதன் மேற்பரப்பில் காணப்படும் கருப்பு ஆக்சைடு இக்கோளைச் சுற்றி சிவப்பாகக் காணப்படுவதால் இது 'செவ்வாய்' என அழைக்கப்படுகிறது. இதன் மேற்பரப்பு சந்திரனில் உள்ளது போன்று கிண்ணக் குழிகளையும், பூமியில் உள்ளது போன்ற எரிமலைகள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்கள், பனி மூடிய துருவப் பகுதிகளையும் கொண்டது.

செவ்வாய்க் கிரகம் குறித்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆய்வுகள் மேற்கொண்டன. பின்னர் 1965-ம் ஆண்டில் அங்கு தண்ணீர் இருப்பதைக் கண்டு பிடித்தனர். இதைத் தொடர்ந்து அங்கு உயிரினங்கள் வாழக் கூடிய சாத்தியம் உள்ளனவா? என்பதைக் கண்டறிய அமெரிக்க நாசா விண்வெளி மையம் ஆய்வு மேற்கொண்டுள்ளது.

அதற்காகக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரோவர் விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்பியது. அது இந்த ஆண்டு ஆகஸ்டில் செவ்வாயில் தரை இறங்கியது. ரோவருடன் கியூரியா சிட்டி என்ற ரோபோ ஆய்வு கூடமும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது. அது அதிநவீனத் தொழில் நுட்பத்துடன் கூடிய கருவிகளை உள்ளடக்கியது.

அவை செவ்வாய்க் கிரகத்தின் சுற்றுச் சூழல், மண், மலை காற்று, தட்ப வெப்ப நிலை போன்றவற்றை ஆராய்ந்து போட்டோ எடுத்துப் பூமிக்கு அனுப்பும் திறன் வாய்ந்தவை. தற்போது அவை செவ்வாய் கிரகத்தில் உள்ள மண், பாறை போன்றவற்றைப் போட்டோ எடுத்து அனுப்பியது.

சமீபத்தில் அங்கு வீசிய புழுதிப் புயலையும் படம் பிடித்தது. அவற்றையெல்லாம் ஆராய்ந்த நாசா விஞ்ஞானிகள் செவ்வாய்க் கிரகம் உயிரினங்கள் வாழத் தகுதி வாய்ந்த கிரகம் என்பதைக் கண்டுபிடித்துள்ளனர். எனவே செவ்வாய்க் கிரகத்தில் மக்களைக் குடியேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் அமைத்து வருகின்றனர். அதற்குத் தேவையான பொருட்களை விண்கலத்தில் ஏற்றிச் சென்று இந்த நிறுவனம் சாதனை படைத்தது.

இதையடுத்து தற்போது இந்த நிறுவனம் செவ்வாய் கிரகத்தில் மக்களை குடியேற்றத் திட்டமிட்டுள்ளது. அதற்காக அங்கு காலனி அமைக்கப்படுகிறது. இந்தத் தகவலை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் நேற்று லண்டனில் உள்ள ராயல் ஏரோ நாட்டிக்கல் சங்கத்தின் நடந்த நிகழ்ச்சியில் அறிவித்தார். அப்போது அவர் கூறும் போது,

செவ்வாய்க் கிரகத்துக்கு முதல் கட்டமாக 10 பேரை மட்டும் அனுப்பத் திட்டமிட்டுள்ளோம். பின்னர் படிப்படியாக அதிக அளவில் ஆட்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள். இதற்கான கட்டணம் சுமார் ரூ. 2 கோடியே 77 லட்சம் (5 லட்சம் அமெரிக்க டாலர்கள்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


முன்னேறிய நாடுகளில் உள்ள நடுத்தர வயதினர் அதிக அளவில் இப்பயணத்திற்கு முன்வர வேண்டும். அதற்காகக் கட்டணத்தைக் குறைக்கக் கூடத் தயாராக உள்ளோம். தொடக்கத்தில் 10 பேரை மட்டுமே அழைத்து செல்லத் திட்டமிட்டுள்ள நாங்கள் அடுத்த 20 ஆண்டுகளில் 80 ஆயிரம் பேரை அங்கு குடியேற்ற முடிவு செய்து இருக்கிறோம். அதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.                                                 .

செவ்வாய்க் கிரகத்தில் முதலில் குடியேறுவோர் வாழ்வதற்கான சூழ்நிலை உருவாக்கப்படும் என்றார்.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு உலக மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. பூமியில் இருந்து செவ்வாய் கிரகத்தில் வீடு கட்ட இப்போதே முன் பதிவு செய்யலாம்                                            

நன்றி :-மாலை மலர், 28-11-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.