Saturday, November 17, 2012

விஜய் பாடிய கூகுல்... கூகுல்... பாடல் முணுமுணுக்க செய்கிறது. -துப்பாக்கி



நடிகர் : விஜய்
நடிகை : காஜல் அகர்வால்
இயக்குனர் : ஏ.ஆர்.முருகதாஸ்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
ஓளிப்பதிவு : சந்தோஷ் சிவன்
இந்திய இராணுவத்தில் அதிகாரியாகப் பணிபுரிகிறார் விஜய். விடுமுறைக்கு மும்பை வருகிறார். இங்கு அப்பா, அம்மா மற்றும் இரண்டு தங்கைகள் இரயில் நிலையத்தில் இவருக்காக காத்திருக்கிறார்கள். இரயில் தாமதமானதால் பதற்றம் அடைகிறார்கள்.

பின்னர் விஜய் வந்தவுடன் அவரை நேராகத் திருமணத்திற்குப் பெண் பார்க்க இராணுவ உடையிலேயே அழைத்துச் செல்கிறார்கள். அங்கு பெண்ணாகக் காஜல் அகர்வால் அறிமுகமாகிறார். புடவையைக் கட்டிக் குடும்பபாங்காகத் தெரிகிறார் காஜல். இவரைப் பார்த்துவிட்டுச் செல்லும் வழியிலேயே விஜய் பெண் வீட்டாருக்கு போன் செய்து பெண்ணைப் பிடிக்கவில்லை என்று சொல்கிறார்.

குடும்பபாங்காக இருப்பதால் காஜலை வேண்டாம் என்று சொன்ன விஜய் மறுநாள் மும்பை எஸ்.ஐயும், தனது நண்பனுமான சத்யனுடன் பெண்கள் கல்லூரிக்குப் பாதுகாப்புக்காகச் செல்கிறார். அங்கு நடைபெறும் குத்துச் சண்டைப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுகிறார் காஜல் அகர்வால். இதை கண்ட விஜய், காஜல் மீது காதல் வசப்படுகிறார்.

ஒருநாள் சத்யனுடன் பேருந்தில் பயணம் செல்கிறார் விஜய். அப்பொழுது பயணி ஒருவர் தனது பர்சைக் காணவில்லை என்று கூச்சலிடுகிறார். இதனால் பேருந்தை வழியில் நிறுத்தி விஜய் மற்றும் சத்யன் பயணிகள் அனைவரையும் சோதனையிடுகிறார்கள். அப்பொழுது திருடனைக் கண்டுபிடித்து விடுகிறார்கள். ஆனால் பேருந்தில் இருந்து மற்றொரு பயணி இறங்கி ஓடுகிறார். அதைக் கண்ட விஜய் அவரைத் துரத்திப் பிடித்து விசாரிக்கிறார். அப்பொழுது அவர்கள் வந்த பேருந்து வெடித்து சிதறுகிறது. இதனால் விஜய் அவரைப் பிடித்துப் போலீஸில் ஒப்படைக்கிறார். போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்கும் இவரை விஜய் பிடித்துத் தனது வீட்டில் அடைத்து வைக்கிறார். இவரிடம் இருந்து மற்ற உண்மைகளை ஆராய்கிறார். இதற்கு பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்றும் கண்டுபிடிக்கிறார்.

அந்த விசாரணையில், அவன் மும்பையில் 12 இடங்களில் குண்டு வைக்கத் திட்டம் தீட்டியது தெரியவருகிறது. இதனைத் தடுத்துத் தனது இராணுவ நண்பர்கள் உதவியோடு விஜய் முறியடிக்கிறார். இதை அறிந்த தீவிரவாதி தலைவன் விஜயையும் அவரது நண்பர்களையும் அழிக்கக் களம் இறங்குகிறார். இதில் இருந்து விஜய் தப்பித்தாரா? அல்லது அவர்களை அழித்தாரா? காஜல் அகர்வாலை கரம் பிடித்தாரா? என்பதுதான் மீதிக் கதை.

இது விஜய் படங்களில் முற்றிலும் மாறுபட்ட படம். இராணுவக் கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் தனது உடல் அமைப்பை மாற்றி அருமையாகப் பொருந்தி உள்ளார்.

படம் முழுவதும் ஒரு இராணுவ வீரரின் தியாகத்தையும் துணிச்சலையும் தனது வசனங்களால் ரசிகர்களிடம் அழுத்தமாகப் பதியச் செய்கிறார்.

குறிப்பாக ஆயிரம் பேரைக் கொல்வதற்காக ஒரு தீவிரவாதியே உயிரைக் கொடுக்கிறான். ஒரு நாட்டைக் காப்பாற்றுவதற்காக உயிரைக் கொடுக்க நாம் ஏன் துணியக் கூடாது என்ற வசனம் சிந்திக்க வைக்கக் கூடியது.

காஜல் அகர்வால் முந்தைய படங்களைவிடத் துப்பாக்கியில் சற்றுத் தூக்கலாகவே இருக்கிறார். மும்பைக் கதைக்கு ஏற்ப வில்லனாக வித்யுத் ஜம்வால் பொருந்திருக்கிறார். இறுதிக் காட்சியில் விஜய்யுடன் இவர் போடும் சண்டைக் காட்சி அழகு.

சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களுக்கு விருந்து. ஹரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். குறிப்பாக விஜய் பாடிய கூகுல்... கூகுல்... பாடல் முணுமுணுக்க செய்கிறது.

இப்படத்தில் நாட்டை வெறுத்து இருக்கும் இளைஞர்களை, தீவிரவாதிகள் எப்படித் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதை இயக்குனர் முருகதாஸ் காண்பித்து இருக்கிறார். விஜயையும் இந்தி பேச வைத்திருக்கிறார். இவரது இயக்கத்தில் இந்தப்படம் முற்றிலும் மாறுபட்ட படம்.

மொத்தத்தில் துப்பாக்கி

விஜய் ரசிகர்களுக்குச்

சிறந்த  தீபாவளிப் பரிசு.                                                                                                                 
நன்றி:- மாலை மலர்                                 

0 comments:

Post a Comment

Kindly post a comment.