Sunday, November 25, 2012

ஆங்கில மொழிபெயர்ப்புடன் கூடிய ,22 இந்திய மொழிகளிலும் குழந்தைகளுக்கான கதைப்புத்தகங்கள் ! ஐந்து ஆண்டுகளில் 1000 புத்தங்கள் போதுமா ?

ஒவ்வொரு மொழியிலும் 1000 புத்தகங்கள்  ! - ந.ஜீவா, தினமணி, 25-11-2012




மாலை நேரம் ஆகிவிட்டால், ""கதை சொல்லு பாட்டி'' என்று சிறுவர், சிறுமியர்கள் பாட்டியிடம் கதை கேட்டுத் தொந்தரவு செய்த காலம் ஒன்றிருந்தது. இப்போது போல, பாடச்சுமை, ஸ்பெஷல் கிளாஸ், டியூஷன், அவ்வப்போது வந்து பயமுறுத்தும் டெஸ்ட்கள், தேர்வுகள்... அப்போது இல்லை. தொலைக்காட்சி இல்லை. குழந்தைப் பருவத்தைக் குதூகலமாகக் கொண்டாட முடிந்தது.

ஆனால், இப்போது குழந்தைகளுக்கும் கதைகளுக்கும் உள்ள தொடர்பு அறுந்து போனது. அவர்களின் கற்பனைத் திறனை ஊக்குவிக்க எதுவுமில்லை.

குழந்தைகளுக்கும் கதைகளுக்குமான தொடர்பை ஏற்படுத்தவே முடியாதா? என்ற கேள்விக்கு, ""ஏற்படுத்த முடியும்'' என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் என். ரெட்டி பிரகாஷ்.

"இந்திய மொழிகளுக்கான மத்திய கல்வி நிறுவனம்' என்ற மத்திய அரசு நிறுவனத்தின் கீழ் உள்ள ஒரு திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரியும் அவரிடம் பேசினோம்.

""இந்தியாவில் உள்ள 22 மொழிகளையும் வளர்க்க வேண்டும்; அழிந்துவிடாமல் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இந்திய மொழிகளுக்கான மத்திய கல்வி நிறுவனம் பல்வேறு பணிகளைச் செய்து வருகிறது. அவற்றில் ஒன்றுதான் குழந்தைகளுக்கான புத்தகங்களை வெளியிடுவது.

நம்நாட்டின் வரலாறு, பாரம்பரியம் ஆகியவற்றை குழந்தைகளுக்கு எடுத்துக் கூறும் கதைப் புத்தகங்களை வெளியிடுகிறது. பஞ்சதந்திரக் கதைகள், தெனாலிராமன் கதைகள், நாட்டுப்புறச் சிறுவர் கதைகள் என எல்லாவற்றையும் வெளியிடுகிறது. கண்ணைக் கவரும் வண்ணமயமான ஓவியங்கள் இந்தப் புத்தகங்களின் சிறப்பு.

இந்தப் புத்தகங்களில் ஒவ்வொரு பக்கத்திலும் முதலில் ஆங்கில வாக்கியங்கள் இருக்கின்றன. அதற்குக் கீழே தமிழ் வாக்கியங்கள் இருக்கின்றன. இது தமிழ் தெரிந்த குழந்தைகளுக்கு.

ஆங்கிலத்திலும் தெலுங்கிலும் உள்ள புத்தகங்கள்,

ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் உள்ள புத்தகங்கள்,

 ஆங்கிலத்திலும் கன்னடத்திலும் உள்ள புத்தகங்கள்

என ஆங்கிலத்திலும், இந்திய மொழிகளிலுமாகப் புத்தகங்களை

வெளியிடுகிறோம்.

இப்போது எல்லா மொழிகளிலும் புத்தகங்கள் வெளிவந்து

கொண்டிருக்கின்றன.

தமிழில் மட்டும் இதுவரை 68 புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. 16 பக்கங்களே உள்ள இந்தச் சிறிய நூல்களைக் குழந்தைகள் விரும்பும் வகையில் வடிவமைத்திருக்கிறோம்.


எதற்கு ஆங்கிலத்திலும், பிற இந்திய மொழிகளிலும் என இருமொழிப் புத்தகங்களாக வெளியிடுகிறோம்? இப்போது குழந்தைகளுக்கு ஆங்கில அறிவு மிக மிகத் தேவையாக உள்ளது.

நகரங்களில் உள்ள குழந்தைகள் ஆங்கில வழியில் படித்து, ஆங்கில மொழியில் திறன் பெற்றுவிடுகிறார்கள். அவர்களுக்கு உள்ள பிரச்னை அவர்களுடைய தாய்மொழிதான். பிழையின்றித் தாய்மொழியில் எழுதத் தெரியாமல் விழிக்கிறார்கள்.

கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகள் அவர்களுடைய தாய்மொழியின் மூலம் கற்கிறார்கள். அவர்களுக்கு ஆங்கில மொழியறிவு குறைவு. ஆங்கிலத்தில் பேசும் திறன் சிறிதும் இல்லை. எனவே இந்தப் புத்தகங்களின் மூலம் நகர்ப்புற மாணவர்கள் அவர்களுடைய தாய்மொழியைக் கற்றுக் கொள்ள முடியும். கிராமப்புற மாணவர்கள் ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்ள முடியும்.

இந்தப் புத்தகங்களை முதலில் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்தப் போகிறோம். இப்போது தமிழ்நாட்டில் நிறையப் புத்தகக் கண்காட்சிகள் நடைபெறுகின்றன.

புத்தகக் கண்காட்சிகள் மூலமும் இந்தப் புத்தகங்களைக் கொண்டு சேர்க்கும் திட்டமும் இருக்கிறது.

5 ஆண்டுகளுக்குள் ஒவ்வொரு மொழியிலும் 1000 புத்தகங்களைக் கொண்டு வரப் போகிறோம்.

இந்தப் புத்தகங்கள் பல மொழிகளில் வெளிவருகின்றன. அந்தந்த மொழிகளில் திறன்வாய்ந்த வல்லுநர்களின் உதவியிருந்தால்தான் இந்தப் புத்தகங்களைச் சிறப்பாகவும், பிழையில்லாமலும் கொண்டு வர முடியும்.

 தமிழ்ப் புத்தகங்களுக்கு முனைவர் கே.ராமசாமி தலைமை எடிட்டராக இருக்கிறார்.

இந்தப் புத்தகங்களை உருவாக்குவதற்காக பாட்டி, தாத்தா கூறும் கதைகளை அவர்களிடம் நேரில் கேட்டு பதிவு செய்கிறோம். பின்னர் அவற்றை எழுத்து வடிவத்தில் கொண்டு வர இருக்கிறோம். கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றைப் பாதுகாக்கும் நோக்கத்துடன், தாலாட்டுப் பாடல்களைப் பதிவு செய்கிறோம்.

இப்போது புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் மாணவர்களிடம் சற்றுக் குறைந்துள்ளது. பள்ளி மாணவர்களிடம் கம்ப்யூட்டர் பரிச்சயம் அதிகமாக உள்ளது. எனவே இந்தப் புத்தகங்களை சிடி வடிவில் தயாரித்து வெளியிடலாம் என்று நினைக்கிறோம்'' என்றார்.                                                                                            

திட்டம் நல்ல திட்டம் ! ஆனால், ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு மொழியிலும் 

1000-ம் புத்தகங்கள் என்பது போதவே போதாது. 

 ஆங்கிலத்துடன் கூடிய தாய்மொழிக் கதைப் புத்தகங்களை வாங்குவோருக்கு

அவர்கள் விரும்பும் பிற மாநில மொழிப்புத்தகங்களையும் பெறுவதற்குரிய 

மாற்றுத் திட்டம் கொண்டு வரவேண்டும்.

22  தாய்மொழிகளிலும் தனித்தனியாகவும், அவற்றை வாங்குவோருக்கு 

ஆங்கில மொழிப் புத்தகத்தை இலவசமாகவும் தர வேண்டும்.

அப்பொழுதுதான் வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்க்கும் 

முறைதொடராமல், கதையின் கருவைப் புரிந்து கொண்டு ஆங்கிலத்தில்

மொழிபெயர்க்கும் ஆற்றலை வளர்த்திட இயலும்.

புத்தகத்தின் தயாரிப்புச் செலவில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது.

அட்டைப்படத் தயாரிப்புக்கான செலவு மட்டும் சிறிது கூடலாம்.

நன்றி :- தினமணி, ஞாயிறு கொண்டாட்டம், 25-11-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.