Saturday, November 10, 2012

அதிகக் கட்டணம் வசூலித்த 11 ஆம்னி பஸ்களின் உரிமம் ரத்து !

சென்னை: தீபாவளிப் பண்டிகையையொட்டி அதிகக் கட்டணம் வசூலித்த 11 ஆம்னி பஸ்களின் உரிமத்தை ரத்து செய்து போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

தீபாவளிப் பண்டிகையையொட்டி சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

இந்த வாரத்தில் 6,828 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனாலும் அந்த பஸ்களும் போதுமானதாக இல்லாததால் ஆம்னி பஸ்களில் இடம் பிடிக்கவும் பெரும் போட்டி நிலவுகிறது.

இந் நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 3 நாட்களாக கோயம்பேட்டில் நேரடி ஆய்வில் ஈடுபட்டு வருகிறார். நேற்று மாலையும் கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு அதிகாரிகளுடன் வந்த அவர் அரசுப் போக்குவரத்துக் கழக முன்பதிவு மையங்கள், சிறப்பு கவுண்டர்கள், பயணிகள் அமர்ந்திருந்த பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் ஆம்னி பஸ்கள் நிற்கும் பகுதிக்கு வந்து பயணிகளிடம் பேசினார். அப்போது 11 ஆம்னி பஸ்களில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்பட்டது தெரியவந்ததையடுத்து அந்த பஸ்களின் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவிட்டார்.

உரிமம் ரத்து செய்யப்பட்ட 11 ஆம்னி பஸ்களில் ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நேற்று மட்டும் அந்த பஸ்களை இயக்கவும் செந்தில் பாலாஜி அனுமதித்தார்.

நன்றி :- ஒன் இந்தியா, 10-11-2012

அன்று மட்டும் அனுமதிக்கப்பட்ட ஆம்னி பஸ்களில் பயணித்தோர் செலுத்திய அதிகக் கட்டணம் திருப்பியளிக்கப்பட்டது  என்றுஉறுதி செய்யப்பட்டிருந்தால்  நன்றாக இருந்திருக்கும்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.