Wednesday, October 17, 2012

எல்லோருக்கும் உண்டு புனைபெயர்



கடைவாயிலிருந்து
ஒழுகும் எச்சில்
அமிர்தத் தாரையென
படிந்து கிடக்கிறது
முதுகுப் புறத்தில்!

கசங்கிய சேலைக்கு
நறுமணம் தெளிக்கிறது
கதக்கிய பாலின் வாசம்!

பனித்துளிகளை
தொடுகிற பரவசத்துடன்
மென்மையாக
ஒற்றி எடுக்கப்படுகிற மலம்
மஞ்சள் தங்கமென
மின்னுகிறது விரல் நுனிகளில்!

சிதறிய சிறுநீர் திவலைகளை
அபிடேக நீரென
சிலிர்த்து
ஏற்றுக் கொள்கிறது தேகம்!

தத்துப் பிள்ளையிடம்
தன்னை முழுமையாய்
ஒப்படைத்தவளை
காணுந்தோறும்
யார் வீட்டுப் பிள்ளையோயென
கூசியபடி தொடும் நான்
கூனிக் குறுகி
சூன்யமாகிறேன்

- கோவை.மீ.உமா மகேஸ்வரி


நூல் அறிமுகம்:
எல்லோருக்கும் உண்டு புனைபெயர்
கோவை.மீ.உமாமகேஸ்வரி
வெளிச்சம் வெளியீடு
சோயம்புத்தூர்
பக் 64/ ரூ.40/ செல்: 9894777291                                                                        

நன்றி :-http://www.maattru.com/2011/12/blog-post_21.html

0 comments:

Post a Comment

Kindly post a comment.