Friday, October 19, 2012

சீர்காழியில் தமிழிசை மூவர் நினைவு மண்டம் திறக்கப்பட்டு, தமிழிசை விழாவும் நடத்திட வேண்டும் . செய்வாரா தமிழக முதல்வர் ?




சீர்காழி,ஆக.13-

சீர்காழியில் பிறந்து வளர்ந்து உலகெங்கும் தமிழிசையை வளர்த்த தமிழிசை மூவர்களான முத்துதாண்டவர், அருணாச்சலகவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை ஆகியோரின் நினைவுகளைப் போற்றும் வகையில் சீர்காழி தாசில்தார் அலுவலகம் எதிரில் ரூ 1 கோடியே 51 லட்சம் செலவில் மணிமண்டபம் கட்ட கடந்த ஆட்சியில் உத்தரவிடப்பட்டு 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மணிமண்டபம் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடந்து வந்தது.



முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனி கவனத்தில் வித்திட்ட இந்த மணிமண்டபத்தை அப்போதைய செய்திதுறை அமைச்சர் பரிதிஇளம்வழுதி பல்வேறு வகையான கலை யுக்திகளைக் கையாண்டார். அதன் தொடர்ச்சியாக மணி மண்டபத்தில் வைப்பதற்காக கலை நுணுக்கத்துடன் உருவாக்கப்பட்ட தமிழிசை மூவர்களான முத்துதாண்டவர், அருணாச்சலகவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை ஆகியோரின் ஐம்பொன் சிலைகள் மணிமண்டபத்தில் வைக்கப்பட்டது.                                 


ஒவ்வொரு சிலையும் 500 கிலோ எடையில் பீடம் உட்பட ஆறேமுக்கால் அடி உயரம் கொண்ட ஐம்பொன் சிலைகளால் அலங்கரிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ 21 லட்சம் ஆகும். மேலும் மணிமண்டத்தின் முகப்பில் இருபக்கங்களிலும் பெரியளவிலான இரண்டு கல் யானைகளும் அதன் மேல் பண்ணும், பரதமும், விரலியார் சிற்பமும் அமைக்கப்பட்டுள்ளது.                                                    


ஆரம்ப காலக் கட்டத்தில் அசுர வேகத்தில் தொடங்கிய மணிமண்டபத்தின் சிற்ப வேலைகள் சற்றுத் தாமதமாகவே நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என தமிழ் ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். திமுக ஆட்சி காலத்திலேயே மணிமண்டபம் கட்டித் திறக்கப்பட வேண்டுமென்பது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவுத் திட்டத்தில் ஓன்றாகும். 


அதன்படி சீர்காழியில் ஆண்டு தோறும் அரசு சார்பில் நடத்தப்படும் தமிழிசை மூவர் விழா கடந்த ஆண்டு புதிய மணிமண்டபத்தில் தலைசிறந்த கலைஞர்களைக் கொண்டு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த மணிமண்டபம் காலதாமதாமாகப் பணிநிறைவு பெற்றும் திறப்பு விழாக் காணமுடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது தமிழ் ஆர்வலர்களை மனவேதனை அடையச் செய்துள்ளது.

இது குறித்துத் தமிழ் ஆர்வலர் ஒருவர் கூறுகையில் : உலகெங்கும் தமிழிசையை வளர்த்த முத்துதாண்டவர், அருணாச்சலகவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை ஆகிய தமிழிசை மூவர்களுக்கு மணிமண்டபம் மாளிகை கட்டித் திறப்பு விழா செய்யாமல் இருப்பது வருந்ததக்க விஷயமாகும்.                                                     


எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பல்வேறு இன்னல்கள் பட்டு தமிழிசையை வளர்த்த மூவர்களுக்கும் மணிமண்டபம் அவசியமான ஒன்று. அவர்களின் நினைவுகளை இந்த மண்டபத்தில் ஆண்டுதோறும் போற்றிப் பாடி உலகளவில் உயர்த்திட நாம் ஒற்றுமையுடன் இணைந்து செயலாற்றிட வேண்டும். 


தமிழக முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் சென்னைக் கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலையைப் புதுப்பித்துச் சலவைக் கற்கள் அமைத்து சீரமைக்கவும், கன்னியாகுமரியில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தைப் புனரமைக்கவும் பல லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.



இதேபோல் சீர்காழியில் ரூ 1 கோடியே 51 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட தமிழிசை மூவர் மணிமண்டபத்தைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றார்.

 நன்றி :-மாலைமலர், 20-12-2008. 

-http://nermai-endrum.blogspot.in/2012/08/blog-post_492.html        


நம்பள்ளி என்பது ஹைதராபாத் ரெயில் நிலையத்தின் புதுப்பிக்கப்பட்ட பெயர். நம்பள்ளி பகுதியையும் ( ஹைதராபாத் ), செக்கந்திரபாத் பகுதியையும் இணைக்கும் நீளமான பாலத்தில் நிறையச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், நாம் இங்கு திருவையாற்றில் சிறப்பாகக் கொண்டாடப்படும் தியாகராஜருக்கு மட்டும் சிலை வைக்கப்படவில்லை. ஏனெனில், தெலுங்கில் கீர்த்தனைகள் பல எழுதித் தெலுங்கு மொழிக்குப் பெயர் சேர்த்திருந்தாலும், தமிழ்நாட்டிலேயே அவர் தங்கிவிட்டதால், அவரைப் புறக்கணித்து விட்டனர். ஆனால், மரபு வழியாக அவரை சங்கீத சீசனில் விழாவெடுத்துக் கொண்டாடுகின்றோம்.

ஆனால், இனிய தமிழில்  பாமரருக்கும் புரியும் வண்ணம் கீர்த்தனைப் பாடல்களையும், ராகங்களையும் உருவாக்கித்தந்துள்ள, தமிழ் மூவர் என்று அழைக்கப்படும்,  முத்துத் தசண்டவர், மாரி முத்தா பிள்ளை, அருணாசலக் கவிராயர் ஆகியோரை நாம் முற்றிலுமாக மறந்து விட்டோம். அவர்களுக்கு அழகிய மணிமண்டம், சீர்காழியில் எழுப்பப் பட்டுள்ள தகவல் இன்றுதான் பார்வைக்கு வந்தது. இவ்வாண்டு சங்கீத சீசனிலேயே மாண்புமிகு தமிழக முதல்வர், அம்மண்டபத்தைத் திறந்து வைத்து, ஆண்டுதோறும் அரசுவிழாவாக, மூவரின் பேரிலும் தமிழிசை விழாவினைச் சீரோடும் சிறப்போடும் கொண்டாட வேண்டுமென்பதே தமிழர்களின் வேண்டுகோள் !

0 comments:

Post a Comment

Kindly post a comment.