Friday, October 26, 2012

வருமுன் காத்திட பள்ளிகளில் தமிழக அரசு துவங்கியுள்ள அன்னையர் குழு !!

தங்களது குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் என்னென்ன வசதிகள் மற்றும் குறைபாடுகள் உள்ளன என்பதைத் தாய்மார்களே இனி நேரடியாக ஆய்வு செய்யலாம். இதற்காக, ஒவ்வொரு பள்ளியிலும் 5 பேர் கொண்ட அன்னையர் குழுவை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெரும்பாலான தனியார் பள்ளிகளில் பெற்றோரை வாயிலோடு வெளியே அனுப்பும் அவலமும், அரசுப் பள்ளிகளில் உள்ள வசதிக் குறைவுகள் குறித்து பெற்றோர் கேள்வி கேட்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும் நேரத்தில் மிக முக்கியமான இந்த உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

வாரத்தில் ஒரு நாள் பள்ளியில் உள்ள அனைத்து வசதிகளையும் பள்ளி வேலை நேரத்தில் இந்தக் குழுவைப் பார்வையிட அனுமதிக்க வேண்டும். இவர்களுக்கான பார்வைப் புத்தகம் ஒன்றையும் பள்ளிகள் பராமரிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள், பள்ளி வாகனங்களில் ஏற்படும் விபத்துகள், அசம்பாவித சம்பவங்கள் அண்மையில் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதையடுத்து, இந்தச் சம்பவங்களைத் தவிர்க்கும் பொருட்டு, பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் தமிழக அரசுக்குப் பரிந்துரைத்தார்.

அதனையேற்று, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பாகப் பள்ளிக் கல்வித் துறை அரசாணையைப் பிறப்பித்துள்ளது.

அதன் விவரம்: அரசு அதிகாரிகள் தவிர, தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் உள்ள வசதிகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் குறித்துப் பள்ளியின் நுகர்வோரான பெற்றோரே நேரில் சென்று சமூக ஆய்வு- COMMUNITY INSPECTION-) நடத்த அனுமதிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த ஆய்வின் அடிப்படையில் பள்ளிகளில் உள்ள குறைபாடுகளை நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டுசெல்வது அதிகபட்ச நலம் பயக்கும் எனக் கருதப்படுகிறது.

இந்த வகையில், மாணவ, மாணவியரின் தாய்மார்கள், வாரத்தில் ஒரு நாள், 5 பேர் கொண்ட குழுவாகச் சென்று பள்ளிகளில் உள்ள அனைத்து வசதிகளையும் பள்ளி வேலை நாள்களில் பார்வையிட அனுமதிக்க வேண்டும்.

இவர்களின் பார்வைக் குறிப்புகள் ஒரு பார்வைப் புத்தகத்தில் தொடர்ந்து பதிவு செய்யப்பட வேண்டும். தாய்மார்களைத் தேர்வு செய்யும்போது கீழ்க்கண்டவாறு பல்வேறு

வகுப்புகளில் இருந்து பிரதிநிதிகள் உள்ளடக்கியவாறு அமைதல் வேண்டும்.

வகுப்புகள்

1. மழலையர் வகுப்பு - 1 நபர்

2. 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை - 1 நபர்

3. 4-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை - 1 நபர்

4. 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை - 1 நபர்

5. 11-ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை - 1 நபர்

1. ஒருமுறை பார்வையிட்ட குழுவைச் சேர்ந்தவர்களே திரும்பவும் பார்வையிடும் வண்ணம் இருத்தல் கூடாது. பிரதிநிதிகள் குலுக்கல் முறையில் ( RANDOM METHOD )தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

2. பள்ளியில் உள்ள கழிப்பறை, குடிநீர் வசதி, ஆய்வக வசதி, கணினி வசதி, நூலக வசதி, விளையாட்டு வசதிகள், வகுப்பறை வசதிகள் போன்ற எல்லா வசதிகளையும், பள்ளியின் அனைத்துப் பகுதிகளையும் பார்வையிட்டு இவர்கள் தங்களது பார்வைக் குறிப்பைப் பதிவு செய்ய  வேண்டும்.

இந்தக் குழுவின் பார்வைக் குறிப்புகளை ஒவ்வொரு வாரமும் பார்வையிட்டு குறைபாடுகள் உள்ள இடங்களில் அதனைச் சரி செய்யT தாளாளர், செயலர், முதல்வர் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர் நடவடிக்கைகள் குறித்த குறிப்பு எழுதப்பட்டு, அதில் தாளாளர், செயலர் ஒப்பமிட வேண்டும்.

இந்தக் குழுவினர் பார்வையிடும்போது பள்ளியின் முதல்வரோ அல்லது அவரின் பிரதிநிதியோ உடன் இருக்கலாம்.                                

நன்றி :- தினமணி, 26-10-2012




0 comments:

Post a Comment

Kindly post a comment.