Wednesday, October 17, 2012

வறட்சியைப் பகிர்ந்து கொள்ளக் கேரளம் சம்மத்திக்கின்றது ?






கோவை :தென்மேற்கு பருவமழை பொய்த்ததாலும், அணைகளில் தண்ணீர் இருப்பு இல்லாததாலும், தமிழகம் வழங்கும் தண்ணீரைப் பெற்று, வறட்சியைப் பகிர்ந்து கொள்ளப் போவதாக, கேரள மாநில அரசு சம்மதித்துள்ளது.

பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தில் ( பி.ஏ.பி., ), பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய அணைகள், கேரளா வனப்பகுதியில் உள்ளன. அதனால், தமிழகம் - கேரளா இடையே, பி.ஏ.பி., திட்டத்தில், நீர்ப்பங்கீடு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.  

இத்திட்டத்தில், ஆண்டுக்கு, 50 டி.எம்.சி., தண்ணீர் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஆண்டுக்கு அதிகபட்சமாக, 40 டி.எம்.சி., மட்டுமே கிடைக்கிறது. அதில், கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, நான்கு லட்சம் ஏக்கர் பாசனத்திற்கும், கேரளாவுக்கும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.இரு மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பங்கீடு தொடர்பான, அதிகாரிகள் மட்டத்திலான ஆய்வுக் கூட்டம், ஆறு மாதத்திற்கு ஒரு முறை நடக்கிறது. பி.ஏ.பி., திட்ட நீர்ப்பங்கீடு குறித்த, 93வது ஆய்வுக் கூட்டம், கோவை பொதுப்பணித் துறை அலுவலகத்தில் நேற்று நடந்தது.கேரள நீர்ப்பாசனத் துறை அதிகாரிகளும், தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.

ஆய்வுக் கூட்டத்திற்குப் பின், தலைமை பொறியாளர்கள் ரங்கநாதன், லத்திகா ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
நீர்க்கணக்கீட்டு ஆண்டான, 2011, ஜூலை முதல், 2012, ஜூன் வரையிலும், கேரளாவுக்கு, சோலையாறு அணையில் இருந்து, 12.3 டி.எம்.சி., தண்ணீரும், ஆழியாறு அணையில் இருந்து, 7.25 டி.எம்.சி., தண்ணீரும் வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை, பொய்த்து விட்டது.இதனால், பாசன திட்ட அணைகளில் நீர் இருப்பு இல்லாததால், ஒப்பந்தப்படி, கேரளாவுக்கு தண்ணீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வறட்சியை பகிர்ந்து கொள்ள உடன்பாடு ஏற்பட்டது.

கேரளாவுக்கு, அக்., 15 முதல், டிச., 15 வரையிலும், 1.38 டி.எம்.சி., தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால், வறட்சி காரணமாக ஒரு போக சாகுபடிக்கு, 1.25 டி.எம்.சி., வழங்க உடன்பாடு ஏற்பட்டுள்ளது; மழையின்மையால் ஒப்பந்த அளவை விட குறைவாக தண்ணீர் பெற்றுக் கொள்ளப்படும்.டிசம்பர் இறுதியில் மறுபடியும் ஆய்வுக் கூட்டம் நடத்தி, வடகிழக்கு பருவ மழையால் பெறப்போகும் தண்ணீரை பகிர்ந்து கொள்ள முடிவு செய்யப்படும்.
இவ்வாறு, தலைமை பொறியாளர்கள் தெரிவித்தனர்.
நீர்பங்கீடு மட்டுமே!



"கேரளாவில், பெரியாற்றின் குறுக்கே, இடைமலையாறு அணை கட்டிய பிறகு, பி.ஏ.பி., திட்டத்தில், ஆனைமலையாறு, நல்லாறு அணைகள் கட்ட வேண்டும். கேரளாவில் இடைமலையாறு அணை கட்டும் பணி முடிந்து விட்டதா?' என்று நிருபர்கள் கேட்டனர்.அதற்கு, ""இரு மாநிலங்களுக்கு இடையே நீர்ப்பங்கீடு பற்றி மட்டுமே, ஆய்வுக் கூட்டம் நடக்கிறது. திட்டம், புதிய அணைகள் கட்டுவது பற்றி இரு மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சு நடத்தப்படும்,'' என, பொறியாளர் லத்திகா தெரிவித்தார்.


நன்றி :- தினமலர்

0 comments:

Post a Comment

Kindly post a comment.