Sunday, October 28, 2012

அமெரிக்காவை 'சாண்டி' புயல் தாக்கியது: 6 கோடி பேர் பாதிப்பு




அமெரிக்காவையொட்டியுள்ள கரிபியன் கடல் பகுதியில் சில நாட்களுக்கு முன் ஹரிகேன் சாண்டி புயல் உருவானது. இதனால் கரிபியன் கடல் பகுதியில் உள்ள ஜமைக்கா, கியூபா நாடுகளில் சூறாவளியுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

இந்தப் புயலுக்கு இந்த இரு நாடுகளிலும் 60 பேர் பலியானார்கள். சாண்டி புயலானது மேலும் தீவிரம் அடைந்து அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பகுதி நோக்கி நகர்ந்து வந்தது. அமெரிக்காவின் புளோரிடா, மேரிலாண்ட், மாகாணங்களைத் தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து இந்த மாகாணங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று அமெரிக்காவை சாண்டி புயல் தாக்கியது. அப்போது சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தப் புயலால் அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் வசிக்கும் 6 கோடி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கிறார்கள். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வருகிற 6-ந்தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. சாண்டி புயல் காரணமாக அதிபர் தேர்தல் இறுதிக்கட்டப் பிரசாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதிபர் ஒபாமா இன்று புளோரிடா மாகாணத்தில் பிரசாரம் செய்வதாக இருந்தது. புயல் எச்சரிக்கையால் அவர் பிரசாரத்தை ரத்து செய்தார். அவர் முன்னாள் அதிபர் பில்கிளிண்டனுடன் இணைந்து பிரசாரம் செய்வதாக இருந்தார். அந்த பிரசாரக் கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட்ரோம்னியின் இன்றைய வெர்ஜினியா மாகாண தேர்தல் பிரசார சுற்றுப்பயணமும் ரத்து செய்யப்பட்டது. இந்தப் புயல் காரணமாக அமெரிக்காவின் 12 மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த மாநிலங்களில் தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த 61 ஆயிரம் வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.                                       நன்றி:-மாலைமலர்.28-10-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.