மத்திய மந்திரி சபை மாற்றம்: 22 மந்திரிகள் பதவி ஏற்றனர்- 17 பேர் புதுமுகங்கள் !
மத்திய மந்திரி சபை மாற்றம்: 22 மந்திரிகள் பதவி ஏற்றனர்- 17 பேர் புதுமுகங்கள்
பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய மந்திரிசபையில் 14 இடங்கள் காலியாக இருந்தன. அந்த இடங்களுக்குப் புதிய மந்திரிகளை நியமிக்கவும், சில மந்திரிகளின் இலாகாக்களை மாற்றவும் பிரதமர் மன் மோகன்சிங் முடிவு செய்தார். இது தொடர்பாக அவர் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தியுடன் பல சுற்று பேச்சு நடத்தி புதிய மந்திரிகள் பட்டியலைத் தயாரித்தார்.
மந்திரிசபை மாற்றத்துக்கு வசதியாக மத்திய மந்திரிகள் எஸ்.எம்.கிருஷ்ணா, அம்பிகா சோனி, சுபோத்காந்த் சகாய், முகுல் வாஸ்னிக், மகாதேவ் கண்டேலா, அகதா சங்மா, வின்சென்ட் பால் ஆகிய 7 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து இன்று காலை புதிய மந்திரிகள் பட்டியலை மன்மோகன்சிங்கும், சோனியாவும் இறுதி செய்தனர். இதைத் தொடர்ந்துப் புதிய மந்திரிகள் பதவி ஏற்பு விழா இன்று பகல் 11.30 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடந்தது.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விழாவில் கலந்து கொண்டு புதிய மந்திரிகளுக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். முதலில் காபினெட் மந்திரிகள் பதவி ஏற்றனர். அவர்கள் யார்-யார் என்ற விவரம் வருமாறு:-
1. கே.ரகுமான்கான் (கர்நாடகா)
2. தின்ஷாபட்டேல் (குஜராத்)
3. அஜய்மக்கான் (புதுடெல்லி)
4. பல்லம்ராஜு(ஆந்திரா)
5. அஸ்வனிகுமார் (பஞ்சாப்)
6. ஹரீஷ் ராவத் (உத்தரகாண்ட்)
7. சந்த்ரேஸ்குமாரி (ராஜஸ்தான்)
காபினெட் மந்திரிகளாக பதவி ஏற்ற இந்த 7 பேரில் தின்ஷாபட்டேல் (சுரங்கம்), அஜய் மக்கான் (விளையாட்டு மற்றும் இளைஞர் நலம்) ஆகியோர் தனிப்பொறுப்புடன் கூடிய இணை மந்திரிகளாக இதுவரை இருந்தனர். அவர்களுக்குப் பதவி உயர்வு கிடைத்துள்ளது. அதுபோல பல்லம் ராஜு (பாதுகாப்பு) அஸ்வனி குமார் (அறிவியல் தொழில் நுட்பம்), ஹரீஷ் ராவத் (உணவு பதப்படுத்துதல்) ஆகிய 3 பேரும் இணை மந்திரிகளாக இருந்தனர்.
இவர்களுக்கும் காபினெட் அந்தஸ்து மந்திரி பதவி கிடைத்துள்ளது. தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களாக நடிகர் சிரஞ்சீவி (ஆந்திரா) மற்றும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி (பஞ்சாப்) ஆகிய இருவரும் பதவி ஏற்றனர். தின்ஷாபட்டேல், அஜய் மக்கான் இருவரும் காபினெட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டதைட்ஜ் தொடர்ந்து அந்த இடத்துக்கு நடிகர் சிரஞ்சீவி, மணீஷ் திவாரி இருவரும் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இணை மந்திரிகளாக மொத்தம் 13 பேர் பதவி ஏற்றனர். அவர்கள் விவரம் வருமாறு:-
1. சசிதரூர் (கேரளா)
2. தாரிக் அன்வர் (மராட்டியம்)
3. கொடிகுனில் சுரேஷ் (கேரளா)
4. கே.ஜெயசூர்ய பிரகாஷ் ரெட்டி (ஆந்திரா)
5. ஏ.எச்.கான்சவுத்திரி (மேற்கு வங்காளம்)
6. அதீர்ரஞ்சன் சவுத்திரி (மேற்கு வங்காளம்)
7. ராணி நாரா (அசாம்)
8. சர்வேஷ் சத்யநாராயணா (ஆந்திரா)
9. நினாங் எரிக் (அருணா சலபிரதேசம்)
10. தீபா தாஷ்முன்சி (மேற்கு வங்காளம்)
11. பொரிசா பல்ராம்ராயக் (ஆந்திரா)
12. கிருபாராணி கில்லி (ஆந்திரா) 13.
லால்சந்த் கடாரியா (ராஜஸ்தான்) 22 மந்திரிகள் இன்று மொத்தம் 22 பேர் மத்திய மந்திரிகளாக பதவி ஏற்றனர். இவர்களில் 17 பேர் முதன்முதலாக மந்திரி பொறுப்பை ஏற்ற புதுமுகங்களாவார்கள். ராகுல்காந்தி மந்திரிசபை மாற்றத்தில் ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும், எனவே புதிய மத்திய மந்திரிசபையில் இளைஞர்கள் அதிக அளவில் இடம் பெறுவார்கள் என்று கடந்த சில தினங்களாகத் தகவல்கள் வெளியானபடி இருந்தது.
ஆனால் அந்த யூகங்களை எல்லாம் தலைகீழாகப் புரட்டிப்போட்டு அடித்து நொறுக்கும் வகையில் இளைய தலைமுறையினருக்கு அதிக வாய்ப்பு கொடுக்கப்பட வில்லை. ராகுல்காந்தியும் மந்திரி சபையில் முக்கிய பொறுப்பை ஏற்கக் கூடும் என்று கூறப்பட்டது. அதுவும் பொய்த்துப் போனது.
2014-ம் ஆண்டு பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டும், காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் வகையிலும் மந்திரிசபை மாற்றம் இருக்கும் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் மந்திரிசபை மாற்றம் பரவலாக எதிர் பார்ப்புகள் எல்லாவற்றுக்கும் ஏமாற்றம் தருவதாகத்தான் இருந்ததாக டெல்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
நன்றி :- மாலை மலர், 28-10-2012
0 comments:
Post a Comment
Kindly post a comment.