Sunday, September 2, 2012

தனியார் வங்கிகளில் அதிகரிக்கும் கள்ள நோட்டுகள் !



http://www.pgbea.net/2012/09/blog-post.html


இந்தியாவில் உள்ள தனியார் வங்கிகளில் கள்ள நோட்டுக்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் மட்டும் 23 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. இது அபாயகரமானது என இந்திய ரிசர்வ் வங்கி எச்சரித்திருக்கிறது. தனியார் வங்கிகளில் இப்படி அதிக அளவில் கள்ள நோட்டுப்  புழங்குவது இந்தியப் பொருளாதாரத்தையே சீர்குலைத்து விடும் ஆபத்தும் இதற்குள் உள்ளடங்கியிருக்கிறது என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.

இந்தியாவில் உள்ள தனியார் வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியிடம் தாக்கல் செய்திருக்கும் அறிக்கையின் படி 2009 -2010ம் நிதியாண்டில் தனியார் வங்கிகளிடம் இருந்த கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 3லட்சத்து 34 ஆயிரத்து 948 ஆகும். அதற்கடுத்து 2010- 2011ம் நிதி ஆண்டில் 3லட்சத்து 76 ஆயிரத்து 460 கள்ள நோட்டுகள் கள்ள நோட்டுகள் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2011 -2012ம் நிதியாண்டில் 4 லட்சத்து 62 ஆயிரத்து 865 நோட்டுகள் என்ற அளவில் கூடியிருக்கிறது.

அதாவது ஓரே ஆண்டில் 23 சதவிகிதம் அளவிற்கு கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது என்று நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சகம் அளித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 ஏற்கனவே எச்.எஸ்.பி.சி வங்கி தீவிரவாதிகளின் பண பரிவர்த்தனைக்கு உதவி வருவது அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. அதே நேரத்தில் அந்த வங்கியின் அனைத்து நாட்டு கிளைகளையும் கண்காணிக்க வேண்டும் என அந்நாட்டின் பாராளுமன்றம் வேண்டுகோள் விடுத்தது.

பல அடுக்கு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புகளை உள்ளடக்கியிருக்கும் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலேயே தனியார் வங்கிகள் தங்களின் சுய லாபத்திற்காக தங்களின் வேலையை காண்பித்திருக்கின்றன.

அதனைத் தொடர்ந்து அனைத்து தனியார் வங்கிகளையும் அமெரிக்கா தற்போது தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தியிருக்கிறது. தங்கள் வங்கியில் தீவிரவாதிகள் பணம் பரிவர்த்தனை செய்திருக்கின்றனர் என்பதை எச்.எஸ்.பி.சி வங்கி ஒப்புக்கொண்டதோடு, அதற்காக வருத்தமும் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது இந்தியாவில் உள்ள தனியார் வங்கிகளில் கள்ள நோட்டு புழக்கம் அதிகரித்திருக்கிறது என்பது மிகப்பெரும் கவலையை இந்திய ரிசர்வ் வங்கிக்கு ஏற்படுத்தியிருக்கிறது. கள்ள நோட்டு மட்டுமின்றி இந்த நோட்டை புழக்கத்தில் விட்டவர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என முடிவு செய்திருக்கிறது.

இதற்காக மாநில மற்றும் மத்திய அரசுகளின் கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவினரை கள்ள நோட்டுக்கள் தொடர்பான தகவல்களை தங்களுக்குள் பரிமாறிக் கொண்டு இதற்கான மூல ஆதாரத்தை கண்டுபிடிக்க வேண்டும் என கூறியிருக்கிறது.

அதில் மத்திய புலனாய்வு பிரிவு உள்ளிட்ட பல்வேறு புலனாய்வு அமைப்புகள் உள்ளடங்கிய இந்திய கள்ள நோட்டுகளை கண்டறியும் ஒருங்கிணைப்பு குழுவையும் மத்திய உள்துறை அமைச்சகம் உருவாக்கியிருக்கிறது. ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வங்கித்துறை நிபுணர்கள், இந்த நடவடிக்கை மட்டும் நாட்டில் கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்தி விடும் என்று முழுவதுமாக நம்பிவிட முடியாது.

காரணம், இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் தனியார் வங்கிகள் தங்களின் சுய லாபமா அல்லது இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பா ? என்றால் அவர்களுக்கு முதலில் வருவது சுயலாபம்தான்.

காரணம் இன்று நிதித்துறையில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. அதில் தங்களை முதன்மையாக காட்டிக்கொள்ள தனியார் வங்கி நிர்வாகங்கள் எந்த அளவிற்கும் இறங்கிச் செல்லத் தயாராகி வருகின்றன.

ஆனால் இவர்களின் செயல்பட்டை முழுவதுமாக கண்காணித்திட போதுமான ஏற்பாடு இன்றைய சூழலில் இல்லை. இந்நிலையிலும் ஏற்கனவே இருக்கும்

அரசு பொதுத்துறை வங்கிகளில் தனியாரின் ஆதிக்கத்தை நிலை நாட்ட 2011 இந்திய வங்கிச் சட்டங்கள் (திருத்த) சட்ட முன்வடிவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறது.

 முதலில் இந்த கொள்கையை மறுபரிசீலனை செய்து கைவிடாமல், எந்த நடவடிக்கை எடுத்தாலும் நிதித்துறையில் அதிகரித்து வரும் கள்ள நோட்டு மட்டுமல்ல தீவிரவாத தொடர்புகளையும் முழுமையாக கட்டுப்படுத்த முடியாது.

மாறாக அதிகரிக்கவே செய்யும். இதனை ஆட்சியாளர்கள் காலத்தில் புரிந்து கொண்டால் இந்திய பொருளாதாரத்திற்கு பங்கம் ஏற்படாது என்று கருத்து கூறியிருக்கின்றனர்.

ஆதாரம் :

Number of fake notes detected by private banks jumps by 23% this year
23% rise in fake notes in private banks

Filed Under: banking , discussions , fake currency , PGBEA , privatisation
Related posts:

0 comments:

Post a Comment

Kindly post a comment.