Tuesday, April 17, 2012

சகோதரச் சண்டைக்கு யார் காரணம்?---பழ. நெடுமாறன்




ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் அதை மெய்யாக்கிவிட முடியும் என்பதை தனது தாரக மந்திரமாகக் கொண்டிருப்பவர் தி.மு.க. தலைவர் கருணாநிதியே ஆவார்.

கடந்த பல ஆண்டுகாலமாக ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் இடைவிடாது அவர் கூறுவதற்குக் காரணமே மக்களின் மறதி மீது அவருக்கு இருக்கக்கூடிய அளவுகடந்த நம்பிக்கைதான்.

ஐ.நா. மனித உரிமை ஆணையம் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தைப் பற்றிப் பேசுகையில் சந்தடி சாக்கில் பழைய புழுத்துப்போன பொய்யை திரும்பவும் கூறியிருக்கிறார்.

'ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை நான் மனந் திறந்து பேச வேண்டுமேயானால் சகோதர யுத்தம்தான் தமிழீழம் உருவாவதைத் தடுத்துவிட்டது என்பது என்னுடைய கருத்து. ஒருவருக்கொருவர் யார் பெரியவர், யார் இதைச் சாதிக்கிற முயற்சிகளில் வெல்லக்கூடியவர் என்பதை நிலைநிறுத்துவதற்காக விடுதலைப் போராளிகள் ஒருவருக்கொருவர் சுட்டுக்கொண்டு ஒற்றுமையைக் கெடுத்துக்கொண்டார்கள் என்பது உங்களுக்கு எல்லாம் தெரியும்....

போராளிகள் மாத்திரமல்ல, போராளிகளுக்கும் இலங்கை அரசுக்கும் மற்றும் பக்கத்து நாட்டுத் தலைவர்களுக்கும் தொடர்புகொள்ளக்கூடிய வாய்ப்பும் செல்வாக்கும் உள்ள அமிர்தலிங்கம் போன்ற தலைவர்கள் எல்லாம் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். பத்மநாபா குழுவைச் சேர்ந்த 10 பேர் சென்னையில் ஒரே நாளில் கொல்லப்பட்டதையும் அறிவீர்கள். சகோதர யுத்தம் வேண்டாம் என்று நான் பலமுறை கெஞ்சிக் கேட்டுக்கொண்டும் கூட யாரும் காதில் போட்டுக்கொள்ளவில்லை' என்று கூறியிருக்கிறார்.

2012ஆம் ஆண்டில் இவ்வாறு புலம்புகிறவர். 1990ஆம் ஆண்டு மே 8ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் என்ன கூறினார் என்பது சட்டமன்றப் பதிவேட்டில் பதிவாகியுள்ளது.

தேசவிரோத நடவடிக்கைகளில் கருணாநிதி ஈடுபடுவதாக சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியபோது முதலமைச்சராக இருந்த கருணாநிதி பின்வரும் பதிலை அளித்தார் : 'மத்திய மாநில அரசுகளுக்கிடையே பிளவு ஏற்படுத்த 'ரா' உளவுத்துறை தொடர்ந்து செயல்படுகிறது. இலங்கையில் உள்ள பல்வேறு போராளிக் குழுக்களிடையே பிளவும் மோதலும் ஏற்பட்டதற்கு 'ரா' உளவுத்துறையே காரணம்' என்றும் அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

இவ்வாறு சட்டமன்றத்திலேயே சகோதரச் சண்டைக்கு 'ரா' உளவுத்துறையே காரணம் என்று குற்றம் சாட்டியவர் இப்போது மத்திய அரசின் கூட்டாளியாக இருப்பதால் 'ரா' உளவுத்துறையைப் பற்றி எதுவும் பேசாமல் போராளிகள் மீது பழியைச் சுமத்த முற்படுகிறார்.

அதுமட்டுமல்ல, 1984ஆம் ஆண்டில் அனைத்துப் போராளி இயக்கங்களையும் ஒற்றுமைப்படுத்துவதற்கு அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியைத் திட்டமிட்டுச் சீர்குலைத்தது யார்?

1984ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழீழ விடுதலை அமைப்புகளை ஒன்றுபடுத்துவதற்காக அந்த அமைப்பின் தலைவர்களை குறிப்பிட்ட நாளில் தம்மைச் சந்திக்குமாறு முதல்வர் எம்.ஜி.ஆர். பகிரங்க அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை தமிழ்நாட்டு நாளிதழ்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன.

ஆனால் இந்த அழைப்பு விடுக்கப்பட்ட மறுதினமே தி.மு.க. தலைவர் கருணாநிதி குறுக்கு சால் ஓட்டினார். எம்.ஜி.ஆர். அவர்கள் குறிப்பிட்ட தினத்திற்கு முதல்நாள் தம்மைச் சந்திக்குமாறு ஈழவிடுதலை அமைப்புகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். இதுவும் பத்திரிகைகளில் பரபரப்புடன் வெளியானது. உண்மையிலேயே போராளி இயக்கங்களை ஒன்றுபடுத்தவேண்டும் என இவர் நினைத்திருந்தால் இதற்கு முன்பே இத்தகைய அழைப்பை விடுத்திருக்கவேண்டும். முதல்வர் எம்.ஜி.ஆர். அழைப்பு விடுத்த பிறகு, ஏட்டிக்குப் போட்டியாக இவர் ஓர் அழைப்பு விடுவதன் உள்நோக்கம் என்ன? ஒற்றுமையைச் சீர்குலைப்பதே என்பது வெள்ளிடைமலையாகும்.

கருணாநிதி விடுத்த அழைப்பை விடுதலைப் புலிகளும், பிளாட் இயக்கமும் ஏற்கவில்லை. ஏனென்றால் முதலில் அழைப்பு விடுத்தவர் எம்.ஜி.ஆர்.தான். கருணாநிதி அதற்குப் போட்டியாக இதைச் செய்கிறார் என்பது அவர்களுக்கு நன்கு புரிந்தது. எனவே அவர்கள் செல்லவில்லை. மற்ற இயக்கங்கள் கருணாநிதியின் அழைப்பை ஏற்றுச் சென்றன. இதன் விளைவாக முதலமைச்சர் மேற்கொள்ளவிருந்த ஒற்றுமைக்கான முயற்சி திட்டமிட்டுச் சீர்குலைக்கப்பட்டது. இதைச் செய்தவர் கருணாநிதியே ஆவார். இப்போது சாத்தான் வேதம் ஓதுவதுபோல சகோதரச் சண்டையைப் பற்றி நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.

நன்றி : ஜூனியர் விகடன்

0 comments:

Post a Comment

Kindly post a comment.