Wednesday, November 16, 2011

இந்திய முன்னாள் வெளியுறவுத் துறைச் செயலரைப் புறக்கணித்த யாழ்.மாணவர்கள்

யாழ்ப்பாணப் .பல்கலைக்கழகத்தில் முன்னாள்
இந்திய வெளிவிவகாரச் செயலர் சியாம் சரண் நிகழ்த்திய உரையை மாணவர்கள் புறக்கணித்துள்ளனர்.

கைலாசபதி கலையரங்கில் நேற்று பிற்பகல்இந்தியாவின்
அயல்நாட்டுக் கொள்கையும், இந்திய - சிறிலங்கா நட்புறவும்
என்ற தலைப்பில் முன்னாள் இந்திய வெளிவிவகாரச் செயலாளரும், நாடுகளின் அபிவிருத்திக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் மையத்தின் தலைவருமான சியாம் சரண் உரையாற்றியிருந்தார்.

யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுனர் ..சந்திரசிறி, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரி மகாலிங்கம், மற்றும் அரச, இராணுவ அதிகாரிகள் பலரும்
கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் வழமைக்கு மாறாக பெருமளவு இராணுவ
அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

அதேவேளை பல்கலைக்கழக மாணவர்கள் எவரும் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை. குறைந்தளவிலான பல்கலைக்கழக
விரிவுரையாளர்களே இதில் பங்குபற்றியிருந்தனர்.

இதனால் பெரும்பகுதி ஆசனங்கள் வெறுமையாகவே காட்சியளித்தன.

விடுதியில் கைதான எண்மருக்கு விளக்கமறியல்

யாழ்.நகரில் சிறிலங்கா காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்ட விடுதியில் வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டதான
குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 8 பேரையும்
விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்ட விடுதியின் முகாமையாளர்
மற்றும் பணியாளர் ஒருவரையும், அங்கு தங்கியிருந்த மூன்று
ஆண்களையும் மூன்று பெண்களையுமே இருண்டு வாரங்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறிலங்கா காவல்துறையினரின் சோதனையின் போது விடுதியில் தங்கியிருந்த 16 பேர் விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களில் கணவன்- மனைவி என்பதை உறுதிப்படுத்திய
8 பேர் உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.

அத்தகைய உறவுமுறையை நிரூபிக்க முடியாத ஆறு பேருக்கு
எதிராகவே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கைதான ஆண்கள் மூவரும் குருநகர், ஊர்காவற்றுறை,
மட்டுவில் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், பெண்கள்
மூவரும் அச்சுவேலி, பரந்தன், வல்வெட்டித்துறையைச்
சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதை - மாணவர் படுகாயம்

யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதை என்ற பெயரில், மூத்த
மாணவர்களால் தாக்கப்பட்ட முதலாம் ஆண்டு மாணவன், தலையில் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் முல்லைத்தீவைச் சேர்ந்த
துரைராஜா தமிழ்செல்வன் என்ற மாணவனே
பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை
பெற்று வருகிறார்.

யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நேற்று புகுமுக மாணவர்களுக்கும், மூத்த மாணவர்களுக்கும் உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கான நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

இதன்போது, அரங்கினுள் சில மாணவர்களுடன் நுழைந்த மூத்த மாணவியொருவரே, ”யார் தமிழ்ச்செல்வன்?” என்று பெயர் கூறி அழைத்ததாகவும், இதன் பின்னர் அவர் மூத்த மாணவர்களால் தாக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

பெருமளவு மாணவர்கள் முன்பாக நடத்தப்பட்ட
கண்மூடித்தனமான இந்தத் தாக்குதல் புகுமுக
மாணவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

http://www.puthinappalakai.com/

இந்திய முன்னாள் வெளியுறவுத் துறைச் செயலரைப் புறக்கணித்த யாழ்.மாணவர்கள்

0 comments:

Post a Comment

Kindly post a comment.