Friday, November 25, 2011

குடாநாட்டில் 50 லட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளை!


யாழ்.கச்சேரியடிப் பகுதி, புன்னாலைக்கட்டுவன் பகுதிகளில் நேற்று முன்தினம் இரண்டு வீடுகளில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த 83 பவுண் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

இவற்றுடன் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள், வீடியோக்கமரா என்பனவும் புன்னாலைக்கட்டுவனில் திருடப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக யாழ்ப்பாணம் மற்றும் சுன்னாகம் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பான விசாரணை மேற்கொண்டுள்ளதாக அந்தப்பகுதி பொலிஸார் தெரிவித்தனர்.

புன்னாலைக்கட்டுவன் மணியகாரர் வீதியில் உள்ள வீடொன்றினுள் அதிகாலை 1.30 மணியளவில் ஓடுபிரித்து உள்நுழைந்த திருடர்கள் அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி 33 லட்சம் பெறுமதியான 66 பவுண் நகையையும் 90 ஆயிரம் பெறுமதியான இரண்டு கைத்தொலைபேசிகள், வீடியோக்கமரா என்பவற்றையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இந்தக் கொள்ளைக் கும்பல் முகமூடி அணிந்துள்ள நிலையில் குறித்த வீடுகளுக்குள் புகுந்துள்ளனர் என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கச்சேரியடியில் நேற்று முன்தினம் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளான துரைரட்ணம் திரேசம்மா என்பவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக யாழ்.பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

0 comments:

Post a Comment

Kindly post a comment.