Wednesday, October 19, 2011

ஜெயலலிதா நாளை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிறார்.





சொத்து குவிப்பு வழக்கில் 20-ந்தேதி ஜெயலலிதா பெங்களூர் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து ஜெயலலிதாவின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அக்ரஹாரத்தில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் தற்காலிகாக தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் திடீரென ஜெயலலிதா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவில் அக்ரஹாரத்தில் உள்ள கோர்ட்டில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. பாதுகாப்பு ஏற்பாட்டை ஜெயாவின் கருப்பு பூனை படை ஆய்வு செய்யும் வரை நேரில் ஆஜராவதிலிருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக நேற்று நடந்த விசாரணையில் ஜெயலலிதா நேரில் ஆஜராவதற்கு தேவையான பாதுகாப்பு குறித்து நாளை காலை கர்நாடக அரசு விளக்கம் அளிக்கவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி இன்று கர்நாடக அரசு தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் பாதுகாப்பு குறித்து எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தனர். அதில் ஜெயலலிதா நேரில் ஆஜராவதற்கான அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் பெங்களூர் விமான நிலையத்திலிருந்து கோர்ட் வரை பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறியிருந்தனர்.

கர்நாடக டி.ஜி.பி. மற்றும் தலைமைச் செயலாளர் அளித்த பதில் மனுவை தொடர்ந்து ஜெயலலிதா பாதுகாப்பை காரணம் காட்டி நேரில் ஆஜராவதை ஒத்திவைக்க முடியாது எனவும் நாளை அவர் பெங்களூர் சிறப்பு கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இதைதொடர்ந்து ஏற்கனவே அறிவித்தப்படி ஜெயலலிதா நாளை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிறார்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.