Wednesday, October 26, 2011

அரசியல் ஓட்டப்பந்தயத்தில் விரைவில் முந்துவோம்:வைகோ நம்பிக்கை

""அரசியல் ஓட்டப் பந்தயத்தில் மற்ற கட்சிகளை விரைவில் முந்துவோம்,'' என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோவின் சொந்த ஊரான, திருநெல்வேலி மாவட்டம் கலிங்கப்பட்டி ஊராட்சித் தேர்தலில், அவரது தம்பி வை.ரவிச்சந்திரன், மூன்றாவது முறையாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேற்று காலையில் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் வைகோ பங்கேற்றார்.

முன்னதாக, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:தமிழகத்தில் தவிர்க்க முடியாத அரசியல் கட்சியாக ம.தி.மு.க., திகழ்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள எங்களது பங்களிப்பை, "தினமலர்' உள்ளிட்ட பத்திரிகைகள் பாராட்டியுள்ளன. வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள், பேஸ்புக் உள்ளிட்ட இணையதளங்களில் எங்களது வெற்றியை பாராட்டுகின்றனர்.அரசியலில் இளைய தலைமுறையினரின் பங்களிப்பு அதிகளவில் இருப்பதால், வருங்காலத்தில் ஊழலுக்கு எதிரான நிலைப்பாடு இருக்கும். உள்ளாட்சித் தேர்தலில் நான் எதிர்பார்த்த அளவு கட்சி வெற்றி பெறாவிட்டாலும், களத்தில் நிற்கிறோம். அரசியல் ஓட்டப்பந்தயத்தில் விரைவில் மற்ற கட்சிகளை முந்திக்கொண்டு முன்னிலைக்கு வருவோம்.இவ்வாறு வைகோ கூறினார்.


0 comments:

Post a Comment

Kindly post a comment.