Monday, October 10, 2011

அதிவேகமாக இயங்கும் "கம்ப்யூட்டர் சிப்': அமெரிக்கவாழ் இந்தியர் கண்டுபிடிப்பு

இப்போது கம்ப்யூட்டர்களில் இருக்கும் சிப்களைவிட 60 சதவீதம் வேகமாக இயங்கும் அடுத்த தலைமுறை கம்ப்யூட்டர் சிப்பை அமெரிக்கவாழ் இந்தியரான ராஜ் தத் கண்டுபிடித்துள்ளார்.இந்த சிப்பை பயன்படுத்தினால், இப்போது இருப்பதைவிட 90 சதவீதம் அளவுக்கு மின்சார செலவும் குறையும்.

அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனையும் இந்த கண்டுபிடிப்பு கவர்ந்துள்ளது. அவர்கள் இதனை சோதனை செய்து வருகின்றனர்.இந்த சிப்பை கண்டுபிடித்துள்ள ராஜ் தத், கோரக்பூர் ஐஐடி-யில் படித்தவர். அமெரிக்காவில் கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தி வருகிறார். அவரது கண்டுபிடிப்பு கம்ப்யூட்டர் சிப் வரலாற்றில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.

கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வரும் தத் இது குறித்துக் கூறியது: கம்ப்யூட்டர் சிப்களில் இப்போது எலெக்ட்ரான்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இதற்குப் பதிலாக எடை குறைந்த போட்டான்களை பயன்படுத்தியுள்ளேன். இதனால் சிப்களின் அளவு, எடை, மின்சாரப் பயன்பாடு ஆகியவை குறைந்துள்ளது. எலெக்ட்ரான்களைப் பயன்படுத்தினால், சிப்கள் சூடாகும். எனவே அதனை குளிரவைக்க வேண்டும். இதற்காக மின்சாரம் அதிகம் செலவாகிறது. அத்துடன் வெப்பத்தை வெளியேற்றுவதற்காக தனியாக பாகங்களைப் பொருத்த வேண்டும. இதனால் அளவும், எடையும் கூடும். ஆனால் போட்டான் வெப்பத்தை வெளிப்படுத்துவதில்லை. எனவே பெருமளவில் மின்சாரம் சேமிக்கப்படும்.

மேலும் இந்த சிப்கள் சிறிய அளவிலேயே இருக்கும். எடையும் குறைவு. இந்த கண்டுபிடிப்பு கம்ப்யூட்டர், பாதுகாப்புத் துறைக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார் அவர்.முன்னதாக சமீபத்தில் அமெரிக்கா வந்த மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை ராஜ் தத் வாஷிங்டனில் சந்தித்து தனது கண்டுபிடிப்பு குறித்து விளக்கினார்.ராஜ் தத்துக்கும், அவரது நிறுவனத்துக்கும் பென்டகன் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது. அமெரிக்கப் போர் விமானத்தில் இந்த கண்டுபிடிப்பை சோதித்துப் பார்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.