Thursday, September 15, 2011

ஏழு பூவுலகை வெடிக்கச் செய்யும் அணுகுண்டு மானிடருக்குத் தேவையா?



இன்றைய காலம் அறிவுப் புரட்சிக்கான காலம். கணினியின் பங்களிப்பு பெரு மாற்றத்தைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறது. அதில் நன்மையும் உண்டு. தீமையும் உண்டு. இதில் மனிதனுக்குப் பயன்படும் ஆற்றலை மட்டும் கற்பது மிக முக்கியம்.

தீயைக் கண்டுபிடித்து , சமைத்து உண்ணும் அறிவைப் பெற்ற பின்னரே, மனிதகுலத்தில் நாகரீகம் தொடங்கியது. சக்கரம் கண்டான். இடம் பெயரத் தொடங்கினான். எரி பொருள் மூலம் உந்து சக்தியைக் கண்டறிந்தது அறிவியலில் முக்கிய பங்காக அமைந்தது. அதுவே விண்வெளிக்கு கலங்களை அனுப்பும் மனித ஆற்றலை வெளிப்படுத்தியது.

அறிவு வளர்ச்சி பெருகப் பெருகப் பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகள் வரத் தொடங்கின. இன்று எல்லா நாடுகளுமே பாதுகாப்பு என்ற பெயரில் அணுகுண்டுகளைத் தயாரித்து வைத்திருக்கின்றன. உலகில் உள்ள அணுகுண்டுகளை வெடிக்கச் செய்தால் ஏழு பூவுலகை அது வெடிக்கச் செய்யும். இந்த சக்தி கொண்ட அணுகுண்டு மனித குலத்துக்குத் தேவையா? அழிப்பதில் தன் அறிவைச் செலுத்தும் மனிதன் ஏன் அந்த அறிவால் வாழ்வதற்கு முயற்சிக்கவில்லை.?

கடினமான மனித உழைப்பை எளிமைப்படுத்தியது, இந்தக் கணினி. ஒரு கண்டம் விட்டு மறு கண்டத்திற்கு ஒரு வினாடியில் செய்தியைக் கொண்டு செல்லும் வாய்ப்பு உருவாகியுள்ளது. ஆனால் அதே சக்தி இன்று மிகைப்படுத்தப் பட்டதால் உயிரினங்களின் அழிவிற்கும் காரணமாக அமைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சிட்டுக் குருவி என்ற பறவை இனம் முற்றிலுமாக அழிந்துவிட்டன. காரணம் நாம் பயன் படுத்தும் செல்போன் கருவிதான். இதேபோல் தேனீக்கள் அழிந்து வருவதாகவும், இன்னும் சில ஆணுகளில் தேனீக்கள் இனம் அழிந்துவிடும் என்றும் இயற்கை விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இயற்கை நியதிக்கு உட்பட்ட ஒரு விஞ்ஞான வளர்ச்சியை மேற்கொள்ள வேண்டும்.

நிலத்தையும், தங்கத்தையும், தண்ணீரையும் அளக்க கருவி உள்ளது. ஆனால், அறிவை அளக்கும் கருவி கிடையாது. ௨G ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரிக்கும் காவல் துறையினருக்கு அதைப்பற்றிய அறிவியல் தெளிவு இல்லாததால் தடுமாறிப் போனார்கள்.

அமெரிக்க அதிபர் ஒபாமா, “இந்திய மாணவர்களைப் பாருங்கள். அவர்களைப் போல் நீங்கள் அறிவில் வளர்ச்சி பெறவில்லை என்றால் நாளை நீங்கள் அவர்கள் முன்பு ஒரு எழுத்தாளராக, பணியாளராகத்தான் வாழ வேண்டும் “ என்று கூறி வருகின்றார்.

அமர்த்தியா சென், “இந்தியாவில் வறுமை ஏழ்மை நிலவினாலும், அதையும் மீறி அவர்கள் இளம் வயதிலேயே கல்வி கற்பதில் வெறி கொண்டு செயல் படுகிறார்கள் இந்தியாவில் எண்பது சதவிகித மக்கள் பட்டப் படிப்பிற்கு முன்னேறியிருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார். இந்த வேகத்தை நாம் கடைப் பிடிக்க வேண்டும்.

திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரியில், இளநிலை கணினித்துறை சார்பில், மாநில அளவிலான கல்லூரிகளுக்கிடையிலான தொழில் நுட்பச் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் துவக்க உரை இங்கு பதிவாகி உள்ளது. உரை நிகழ்த்தியவர் சி.பி.ஐ. மாநிலச் செயலர், தா.பாண்டியன்.

இயற்கை நியதிக்கு உட்பட்ட விஞ்ஞான வளர்ச்சி வேண்டும் என்று யார் சொன்னால் என்ன கேட்பதில் தவறில்லையே? இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழவேண்டும் என்றுதானே ஆன்மிகவாதிகளும் கூறுகின்றனர்?

0 comments:

Post a Comment

Kindly post a comment.