கொல்லப்பட்ட விடுதலை புலியின் மனைவி ராஜபக்சேக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தொடர்ந்துள்ளார். இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்தவர் கர்னல் ரமேஷ். இவர் இறுதிக்கட்ட போரின்போது இலங்கை ராணுவத்தினரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். தற்போது ஐ.நா.சபை கூட்டத்தில் பங்கேற்பதாக இலங்கை அதிபர் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் சென்றுள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு எதிராக விடுதலைப்புலிகளின் தளபதியாக இருந்த ரமேசின் மனைவி அமெரிக்காவின் நியூயார்க் தென்மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், இலங்கையின் முப்படைகளுக்கும் தளபதி என்ற அடிப்படையில் அதிபர் ராஜபக்சே எனது கணவர் ரமேசின் கொலைக்கு பெறுப்பேற்க வேண்டும்.
போர்க்குற்றத்துக்கு அவரே பொறுப்பு ஏற்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த வழக்கின் ஆதாரமாக சானல் 4 டெலிவிஷனில் கர்னல் ரமேஷ் இலங்கை ராணுவத்தினரால் அடையாளம் தெரியாத இடத்தில் வைத்து விசாரணை செய்யப்படும் காட்சி இடம் பெற்றுள்ளது.
மேலும், கொல்லப்பட்ட அவரது உடலை மனைவி அடையாளம் காட்டிய ஒரு டெலிவிஷனின் சாட்சியும் உள்ளது. இவை தவிர இலங்கையில் போர்க்குற்றம் நடந்ததாக ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனின் நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கை, 40 ஆயிரம் பேர் கொல்லப் பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள தகவல், போன்றவையும் ஆதாரமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை வெளி நாட்டவருக்கு தகுதி என்ற அடிப்படையில் கர்னல் ரமேசின் மனைவி சார்பில் வக்கீல் விஸ்வநாதன் ருத்திரகுமாரன் தாக்கல் செய்துள்ளார்.
0 comments:
Post a Comment
Kindly post a comment.