Friday, September 2, 2011

காங்கிரஸ் கட்சியின் வருமானம் "கிடுகிடு' உயர்வு : 2002ல் ரூ.62 கோடி; 2010ல் ரூ.496 கோடி

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஆண்டு வருமானம், 2002-03ல், 62 கோடியே, 55 லட்ச ரூபாயாக இருந்தது, மத்தியில் ஆட்சிக்கு வந்த பின், 496 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. நன்கொடை மற்றும் கூப்பன் விற்பனை மூலம், பெருமளவு வருவாயை ஆண்டுதோறும் ஈட்டி வந்துள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தன் வரவு-செலவு கணக்குகளை, வருமான வரித் துறையிடம் ஆண்டுதோறும் தாக்கல் செய்து வருகிறது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின், வருமான வரி கணக்கு எண் (பான் எண்) : அஅஆஊ16563ஓ.

இதில், ஊழலுக்கு எதிராக பேசி வரும் காங்கிரசின் வருவாய் ஆண்டுதோறும் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இக்கட்சி ஆண்டுக்கு ஒரு முறை, காங்கிரஸ் வாரம் என்ற பெயரில் ஒரு வாரத்துக்கு கூப்பன்களை விற்கிறது. 1,000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரையிலான கூப்பன்களை, கட்சிக்காரர்கள் பணம் செலுத்தி வாங்க வேண்டும். "கொடி நாள்' என்ற பெயரில், ஆண்டு முழுவதும் தமிழக அரசு கொடிகளை விற்றாலும், அதற்கு கிடைப்பது, 8 முதல் 9 கோடி ரூபாய் தான். ஆனால், காங்கிரஸ், ஒரு வாரத்தில், 422 கோடி ரூபாய் அளவுக்கு கூப்பன் விற்றுள்ளது.

இதுதவிர, நன்கொடை என்ற பெயரில் வசூல் நடத்தப்படுகிறது. இந்த நன்கொடைக்காக, பெரிய பெரிய நிறுவனங்கள், தேர்தல் சீர்திருத்த அறக்கட்டளை என்ற பெயர்களில், கோடிக்கணக்கில் நன்கொடை அளித்துள்ளன. இதுதவிர, சிமென்ட் கம்பெனிகள், கட்டுமான நிறுவனங்கள், கல்வி அறக்கட்டளைகள் போன்றவை கோடிகளை நன்கொடைகளாக அளித்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும், இதுபோன்ற நிறுவனங்கள் கோடிகளை நன்கொடையாக காங்கிரசுக்கு கொடுத்து வந்துள்ளன.

ஆனால், கட்சியின் தலைவரான சோனியாவோ, தலா, 39 ஆயிரத்து, 534 ரூபாய் வீதம் இரண்டு காசோலைகள் கொடுத்துள்ளார். கட்சியின் மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் போன்றோரும், 37 ஆயிரத்து, 500 ரூபாய் என்ற அளவில் தான் கொடுத்துள்ளனர். சில எம்.பி.,க்கள், ஒரு கோடி ரூபாயை கொடுத்து வந்துள்ளனர். சில எம்.பி.,க்கள், தங்களது பினாமி நிறுவனங்கள் மூலம் பணம் செலுத்தியுள்ளனர்.

குட்கான் மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராவ் தரம் பால், தலா ஐந்து லட்சம் ரூபாய் வீதம் தொடர்ச்சியாக எண் கொண்ட, 10 காசோலைகளை, அதாவது, 50 லட்சம் ரூபாயை நன்கொடையாக கொடுத்துள்ளார்.

ஜெம்ஸ் நிறுவன அமைப்பின் தலைவரான சன்னி வர்க்கி என்ற வெளிநாடு வாழ் இந்தியர், 1 கோடி ரூபாயை, 2008ல் கொடுத்துள்ளார். இவருக்கு, 2009ல், பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. எனவே, பத்மஸ்ரீ விருது பெறக் கூட, கோடிக்கணக்கில் நன்கொடை கொடுத்து பெற வேண்டிய நிலை உள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி, பெரிய வீதியில் பிரபாகர் என்ற பெயரில், 49 லட்சத்து, 50 ஆயிரம் பெறப்பட்டதாக, கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த விலாசத்தில், மேன்ஷன் ஒன்று உள்ளது. இதேபோல, ரசூல் டீ எஸ்டேட் பெயரில், 25 லட்ச ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்நிறுவனத்தின் வருமானவரி கணக்கில், நன்கொடை ஏதும் கொடுக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோல நன்கொடை செலுத்துபவர்கள் தங்களது, "பான் எண்' குறிப்பிட வேண்டுமென விதி உள்ளது. ஆனால், பலரும் வருமான வரி கணக்கு எண்களை குறிப்பிடாமல், நன்கொடை அளித்துள்ளனர்.

கடந்த, 2002-03ல், காங்கிரசின் வருமானம், 69 கோடியே, 55 லட்சத்து, 69 ஆயிரத்து, 532 ரூபாயாக இருந்தது. இதில், நன்கொடையாக, 7 கோடியே, 46 லட்சத்து, 34 ஆயிரத்து, 859 ரூபாய் பெறப்பட்டுள்ளது. கூப்பன் விற்பனை மூலம், 54 கோடியே, 49 லட்சத்து, 65 ஆயிரத்து, 765 ரூபாய் வசூல் செய்துள்ளது.
அதே தொகை, 2004ல், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின், மொத்த வருமானம், 153 கோடியே, 3 லட்சத்து, 82 ஆயிரத்து, 669 ரூபாயாக உயர்ந்தது. இதில், 8 கோடியே, 85 லட்சத்து, 66 ஆயிரம் ரூபாய் நன்கொடை மூலமும், 46 கோடியே, 9 லட்சத்து, 91 ஆயிரத்து, 844 ரூபாய், கூப்பன் விற்பனை மூலமும் பெறப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆட்சியில் இருந்த காங்கிரஸ், 2009-10ல், மொத்த வருமானமாக, 496 கோடியே, 87 லட்சத்து, 62 ஆயிரத்து, 59 ரூபாய் வசூலித்துள்ளது. இதில், நன்கொடை மூலம், 47 கோடியே, 91 லட்சத்து, 97 ஆயிரம் ரூபாய் வசூலித்துள்ளது.

கூப்பன் விற்பனை மூலம், 422 கோடியே, 67 லட்சத்து, 45 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளது. 2002ல், வெறும், 54 கோடியாக இருந்த கூப்பன் விற்பனை, 2009ல், 422 கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, 2010-11ம் ஆண்டில், 467 கோடியே, 57 லட்சத்து, 88 ஆயிரம் ரூபாய் வருமானம் பெற்றுள்ளது. இதில், நன்கொடை மூலம், 95 கோடியே, 90 லட்சத்து, 91 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளது. அதாவது, ஆட்சிக்கு வருவதற்கு முன், 2003ல், வெறும், 8 கோடியே, 85 லட்ச ரூபாயாக கிடைத்த நன்கொடை, கடந்தாண்டு, 95 கோடியே, 90 லட்சத்து, 91 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இவற்றில் இருந்தே, காங்கிரசின் ஊழல் ஒழிப்பு கொள்கையை புரிந்து கொள்ள முடியும்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.