மத்திய ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளைக் குறைப்பது மற்றும் குறுக்கீடு செய்வது ஆகிய மத்திய அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து இம்மாதம் 19-ம் தேதி ரிசர்வ் வங்கி ஊழியர்கள் விடுப்பு எடுப்பு போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர்.
மத்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள், மற்றும் ஊழியர்களை உள்ளடக்கிய 4 அமைப்புகளின் தொகுப்பான ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஐக்கிய கூட்டமைப்பு நவம்பர் 19-ம் தேதி விடுப்பு எடுப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது, இதனை அனைத்திந்திய ரிசர்வ் வங்கி பணியாளர்கள் கூட்டமைப்பு தலைமைச் செயலர் சமீர் கோஷ் தெரிவித்தார்.
சுமார் 17,000 ரிசர்வ் வங்கி பணியாளர்கள் நவம்பர் 19-ம் தேதி விடுப்பில் சென்று தங்கள் எதிர்ப்பை வெளியிட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அவர் கூறும்போது, “நிதிக் கொள்கை கமிட்டியை அமைத்து, இதுவரை மத்திய ரிசர்வ் வங்கி மட்டுமே கவனித்து வந்த நிதிக்கொள்கையில் தலையீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதனை எதிர்த்து இந்த போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
ஆர்பிஐ அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஐக்கிய கூட்டமைப்பு இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில் கூறும்போது, “வரைவு நிதிச் சட்டம் மற்றும் சில சீர்திருத்த சட்டங்கள் மூலம் மத்திய ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளை முடக்க நினக்கும் மத்திய அரசுக்கு வலுவான எதிர்ப்பைத் தெரிவிக்கவே இந்த வேலை நிறுத்த அறிவிப்பு.
அரசின் நிதி நிர்வாக செயல்பாடுகளை மத்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து பொதுக்கடன் நிர்வாக ஏஜென்சியிடம் ஒப்படைப்பதற்கான இறுதி கட்ட நடவடிக்கைகளில் இருப்பதாக தெரிகிறது.
இந்த ஏஜென்சிதான் அரசுப் பத்திரங்களின் டெபாசிட்தாரர்களாக செயல்படும். இதன் மூலம் நிதிச்சந்தைக்கு தொடர்புடைய ஆர்.பி.ஐ.-யின் முக்கியமான நடவடிக்கைகளை அரசு முடக்க நினைக்கிறது” என்று அந்த செய்தி அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Keywords: ஆர்பிஐ பணியாளர்கள் போராட்டம், வேலை நிறுத்தம், நவம்பர் 19, அரசு தலையீடு, நிதிச்சந்தை, பிரதமர் மோடி
நன்றி : தி இந்து
0 comments:
Post a Comment
Kindly post a comment.