திருக்குறள் பாவுரை
புதிய பார்வைகளும்,
எளிய சொல்லாட்சிகளும்
வேறுபட்ட எழுத்துக்களில்
புதுப்பிக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர்
பொதுவன் அடிகளார்
2006
திருக்குறள் பாவுரை ( விருத்தம் )
இறைவன்
புரியாத புதிரெல்லாம் இறைவன் தன்மை
புரிகின்ற விளக்கமெல்லாம் இறையின் மாட்சி
தெரியாத குணமெல்லாம் தெய்வத் தன்மை
தெளிவுதரும் அறிவெல்லாம் தெய்வப்பேறு
கரியாத பொருளெல்லாம் கடவுள் கோட்டம்
காட்டாமல் காட்டுவது கடவுள் நோக்கம்
பரிமாறி மழைநீத்தார் அறத்தின் பாங்காய்ப்
படர்கின்ற இறைவழியைப் பணிந்துள் ஏற்பாம்!.
அறம்
ஆற்றைப்போல் ஓடுவதை அறமென் பார்கள்
அனைவருக்கும் நீரன்பைப் பாய்ச்சிப் போற்றும்
ஊற்றைப்போல் உலகூட்டும் உள்ளத் தேறும்
உதவாத அழுக்குகளைக் கழுவிப் போக்கும்
ஏற்றத்தால் பெருமைகொளும் இனிய வெல்லாம்
ஈந்தாலும் கைம்மாறு கொள்வதில்லை
நீற்றுப்போய் துறவறமாம் நீர்மை கொண்டு
நிலைத்திருத்தல் இல்லறமாம் நேய வாழ்வோம்!
பொருள்
அரசொனொடு குடிமக்கள் அவர்தம் செல்வம்
அவர்துணையாய் அவர்வழியில் பணிசெய் வோர்கள்
விரிவடந்த நன்மனங்கள் வேண்டா வாழ்க்கை
விழைசெல்வம் தேடுமுறை பகைமை நட்பு
கரவிரவு கல்விநலம் மானம் சால்பு
களப்போர்நல் தூதுழவு கள்ளுண் சூது
பெருமைநலம் பண்புடைமை மருந்து நாணம்
பேச்சாற்றல் போல்பலவும் பொருளின் ஈட்டம்!
வாழ்வின்பம்
காதலினால் உளமிரண்டு கலந்துள் ஊறும்
காமத்தால் உடற்சுவையைக் கண்ட கற்பின்
பாதியிலே வாழ்புருட்காய்ப் பிரிந்த காலைப்
பாவைமனம் பலவாறாய் எண்ணிச் சோர்ந்து
வேதனையால் கண்பூத்து விம்மிப் பேச
விட்டகன்றான் வினைமுடித்து மீண்ட போழ்து
தோதாக ஊடுவதும் துனிசெய் யாமல்
தொழுதின்பம் காண்பதுவும் காமப் பாலாம்.
நான்கே பாடல்களில் திருக்குறள் முழுமையையும் உணரவைக்கும் இச்சிறுநூல் என்னிடம் சில ஆண்டுகள் இருந்தது. இன்றே அதன் அருமை புரிந்தது. பதிவிற்கும் வந்தது.
பொதுவன் அடிகள் வழியில் நூலைப் படிப்பவர்கள் புரவலர்கள்.
விலைக்கு வாங்கிப் படிப்போர் பெரும் புரலவர்.
பிறருக்கு வழங்கிப் படிக்கச் செய்வோர் மாபெரும் புரவலர்.
கிடைக்குமிடம்
செங்கைப் பொதுவன், M.A.M.Ed. Ph.D.
வீடு 22 - தெரு 13 -தில்லை கங்கா நகர், சென்னை 600 061
poduvan9@gmail.com
செம்பொருள் உணர்வு
ReplyDeleteபதிவுரையே குறுங்குறளாக உள்ளது. தங்கள் பேச்சுக்கள் அடங்கிய குறுந்தகடுகள் கிடைக்குமா ? கேட்டுக்கொண்டே இருக்க ஆசை. அதில் பொதிந்திருக்கும் கருத்துக்களைத் தெரிந்து புரிந்து கொள்வதன் மூலம் தமிழ்கற்க ஆசை.
ReplyDelete