Friday, October 31, 2014

இந்தியாவில் முதல்முறையாகக் கருவில் இருக்கும் சிசுவிற்கு இதய அறுவை சிகிச்சை !


ஹைதராபாத்: இந்தியாவில் முதல்முறையாக கருவில் இருக்கும் சிசுவிற்கு இதய அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். 

ஹைதராபாத்தில் உள்ள கேர் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது இந்தப் புதிய முறை அறுவை சிகிச்சை. மூலம், சிரிஷா எனும் 25 வயது பெண்ப் பெண்ணின் கருவில் இருந்த சிசுவின் இதய ரத்தகுழாய் அடைப்பு வெற்றிகரமாக குறைக்கப்பட்டுள்ளது. 

இடது பக்க ரத்தக் குழாய் பாதிப்பு: சிசுவிற்கு அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர் நாகேஸ்வர ராவ் இது குறித்துத் தெரிவிக்கையில், "25 வார சிசுவின் இதயத்தின் இடது பக்கம் ரத்தக்குழாயில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. 

பிறக்கும் குழந்தைக்கு ஆபத்து: அந்த ரத்தகுழாய் சுருங்க ஆரம்பித்திருந்ததால் குழந்தை பிறக்கும்போது இதயத்தின் இடது பக்கம் மிகவும் சிறியதாக இருந்திருக்கும். 

வால்வோட்டமி அறுவை சிகிச்சை: அதனால், சிசுவிற்கு "ஃபோட்டல் ஆர்டல் வால்வோட்டமி" என்னும் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்தோம்' எனத் தெரிவித்துள்ளார். 

12 மருத்துவ நிபுணர்கள்: இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்பட்ட இந்த அறுவை சிகிச்சையை 12 மருத்துவ நிபுணர்கள் செய்துள்ளனர். பலூன் மூலமாக சிகிச்சை: சிசுவின் 27 வது வாரத்தில் தாய்க்கும், சிசுவிற்கும் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, இறக்குமதி செய்யப்பட்ட ஊசியின் உதவியோடு பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட பலூன் மற்றும் கம்பியைப் பயன்படுத்திச் சிசுவின் இதயத்தில் இருந்த ரத்த குழாய் அடைப்பு சரி செய்யபட்டது. 

60 சதவீதம் குறைப்பு: இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு தாயின் கருப்பைக்குள் இருந்த சிசுவின் இதயத்தில் இருந்த 99 சதவீத அடைப்பு 60 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 

அறிவியல் ஆசிரியை: சிரிஷா அறிவியல் ஆசிரியர் என்பதால், அவருக்கும் அவரது குழந்தைக்கும் என்ன நடக்கிறது என்பதை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது எனவும் அவர் கூறினார். 


இதயதுடிப்பு அதிகரிப்பு: அறுவை சிகிச்சைக்குப்பின் சிசுவின் உடல்நிலை நலமாக இருப்பதாகவும், சிசுவின் எடை 830 கிராமிலிருந்து 1200 கிராமாக அதிகரித்துள்ளதாகவும், ரத்தக் கசிவின்றி இதய துடிப்பு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.