Sunday, March 2, 2014

தேர்தல் நிலவரம் : அட்வாண்டேஜ் ஜெயலலிதா -pathre.

பத்ரி சேஷாத்ரி

தமிழக தேர்தல் நிலவரம்

Posted: 27 Feb 2014 11:38 PM PST

2014 நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் குறித்து தந்தி டிவியில் ஒரு கருத்துக் கணிப்பை அடிப்படையாக வைத்து தொடர் நிகழ்ச்சி ஒன்று நடந்துவருகிறது. இரண்டு நாள்கள் முன்பு அந்நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டேன். திருச்சி, மதுரை, காஞ்சி போன்ற எட்டு தொகுதிகள் பற்றியது. இந்தக் கருத்துக் கணிப்புகளில் கிடைத்த தகவல்களிலிருந்து நான் புரிந்துகொண்டவை:

ஒவ்வொரு தொகுதியிலும் அஇஅதிமுகதான் முன்னிலையில் உள்ளது. திமுக இரண்டாம் இடம்.

திமுகவும் தேமுதிகவும் சேர்ந்தாலொழிய அஇஅதிமுகவைத் தோற்கடிப்பது இயலாத காரியம்.

பாஜக, பல இடங்களில் தேமுதிகவைவிட அதிக வாக்குகள் பெறுவதாகத் தெரிகிறது.

பாஜகவும் தேமுதிகவும் இன்னபிறரும் சேர்ந்தாலும்கூட திமுகவை இரண்டாவது இடத்திலிருந்து நகர்த்த முடியாது. அஇஅதிமுகவை நெருங்கக்கூட முடியாது.

திமுக-தேமுதிக கூட்டணி ஏற்பட்டால், அந்தக் கூட்டணியால் சில இடங்களைப் பெற முடியும். இது நடைபெறாதபட்சத்தில், தமிழகத்தின் 39 இடங்களும் அஇஅதிமுகவுக்கே. பாண்டிச்சேரி விஷயம் எனக்குப் புரியவில்லை.

தேமுதிக-பாஜக கூட்டணி ஏற்பட்டால் அதனால் ஒருவருக்கும் ஓர் இடம்கூடக் கிடைக்காது. பாஜக-தேமுதிக-மதிமுக-பாமக என்று பெரும் கூட்டணி ஏற்பட்டாலும் அந்தக் கூட்டணிக்கும் ஓர் இடம்கூடக் கிடைக்காது.

அஇஅதிமுக, கம்யூனிஸ்டுகளுக்கு ஓர் இடம்கூடக் கொடுக்கவேண்டிய தேவையில்லை. கம்யூனிஸ்டுகளால் அஇஅதிமுகவுக்கு எந்த லாபமும் இருப்பதுபோலத் தெரியவில்லை.

தனிப்பட்ட முறையில் இந்தத் தேர்தலில் பாஜகவுக்குப் பெரிய ஆதாயம் இருக்கும். தேமுதிகவைவிட அதிக வாக்குகள் பாஜகவுக்குக் கிடைக்கும். தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக பாஜக ஆகிவிடும் என்று தோன்றுகிறது. அதாவது தமிழகத்தில் காங்கிரஸின் இடத்தை பாஜக எடுத்துக்கொண்டுவிடும் என்று தெரிகிறது; காங்கிரஸ் பாஜகவின் இடத்துக்குப் போய்விடும்.

கம்யூனிஸ்டுகள்போல, பாமக, மதிமுக ஆகியோரும் எந்தவிதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாத அமைப்புகளாக ஆகிவருகின்றனர் என்பதும் இந்தக் கணிப்பில் தெரிகிறது. இதில் விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் போன்ற தலித் கட்சிகளையும் மனிதநேய மக்கள் கட்சி போன்ற இஸ்லாமியக் கட்சிகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.

அட்வாண்டேஜ் ஜெயலலிதா.

0 comments:

Post a Comment

Kindly post a comment.