Friday, November 29, 2013

சீட்பெல்ட் அணிய வலியுறுத்தி மாணவர்கள் விழிப்புணர்வுப் பேரணி


கார் ஓட்டுபவர்கள் சீட்பெல்ட் அணிய வலியுறுத்தி மெரினாவில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

சென்னை, நவ. 29–

சென்னையில் கார் ஓட்டுபவர்கள் மற்றும் முன்னால் அமர்ந்திருப்பவர்கள் கட்டாயம் சீட்பெல்ட் அணிய வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கருணாசாகர் மேற்பார்வையில் இணை கமிஷனர்கள் தினகரன், அருண் ஆகியோரது தலைமையில் சீட்பெல்ட் அணிவது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரம் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது.

மாணவ– மாணவிகள் இதில் கலந்து கொண்டு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.

இந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலையில் மாணவ– மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தென் சென்னை போக்குவரத்து இணை கமிஷனர் தினகரன் பேரணியை தொடங்கி வைத்தார். பின்னர் மாணவ– மாணவிகளுடன் சேர்ந்து கார் ஓட்டுனர்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கினார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:–

கார் ஓட்டுபவர்களும், முன் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கடந்த 1 வாரமாக இது தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்திவருகிறோம். வருகிற 2–ந்தேதி (திங்கட்கிழமை) முதல் சீட் பெல்ட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். முதலில் சிக்கினால் 100 ரூபாயும், அதன் பிறகு பிடிபட்டால் ரூ.300–ம் அபராதமாக வசூலிக்கப்படும். இதற்காக தென்சென்னை பகுதியில் 50 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சீட்பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து டிஜிட்டல் பேனர்கள், டிஜிட்டல் போர்டுகளிலும் தொடர்ந்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்படும்.

எனவே வாகன ஓட்டிகள் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.                                                                                                                                      

மாலை மலர் , 29 - 11 -2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.