Sunday, August 18, 2013

4-வது தமிழ்ச்சங்கத்தின்போது ரயில் இருந்ததா ? -குலாம் காதிறு நாவலர்

 

புலவராற்றுப்படை :- உந்துதல் :-தினமணி 18-08-2013

Sankara RamaSamy
17:30 (3 hours ago)

to editordinamani
அன்புள்ள ஆசிரியருக்கு,
தமிழ்மணி தமிழருக்குக் கிடைத்துவரும் நல்லறிவுப் பெட்டகம். இவ்வாரம் இடம்பெற்றிருந்த புலவராற்றுப்புப்படை குறித்த தகவல், நான்காம் தமிழ்ச் சங்கத்து நக்கீரர், குலாம் காதிறு நாவலரைப் பற்றி அறிய முடிந்தது. அவர் இயற்றிய புலவராற்றுப்படை தற்போது கிடைக்கப் பெறவில்லை என்றும், சென்னை ஆவணக்காப்பகத்தில் ஆற்றுப்படை பாடலும் குறிப்பும் ஓர் மேற்கோள் பாடலாக உள்ளது என்றும் கட்டுரை முடிக்கப் பட்டிருந்தது.
ஆனால், வலைதளத்தில் தேடும்பொழுது, :-
நான்காம் தமிச் சங்கத்து நக்கீரர் பற்றிய தகவல்களும், புலவராற்றுப்படை யின் 205 பாடல்களும் கிடைத்தன.பொருபொருளுரையும் இடம் பெற்றுள்ளது.

முஸ்லிம் புலவரால் இயற்றப்பட்ட ஆற்றுப்படை நூல் ஒன்று
உண்டு. இது மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் புலவராற்றுப்படை என்ற பெயரைப்பெற்றுள்ளது. பாண்டித்துரைத் தேவரினால் நிறுவப்பட்ட நான்காம் தமிழ்ச்சங்கத்தையே இந்நூல் குறிப்பிடுகின்றது.

 மதுரைத் தமிழ்ச் சங்கத்துக்குச் சென்று சிறப்புப் பெயரும் பரிசிலும் பெறுகிறார் ஒரு புலவர். இவற்றைப் பெறாத இன்னொரு புலவரைச் சந்திக்கிறார் அப் புலவர். சந்தித்ததும் சிறப்பும் பெயரும் பரிசிலும் பெறுமாறு கூறி இவற்றைப் பெறாத அப்புலவரைச் சங்கப் புலவரிடத்து வழிப்படுத்தியுள்ளார். இதனாலேயே இந்நூல்
புலவராற்றுப்படை எனப் படுவதாயிற்று.

புலவராற்றுப் படையில் குலாம் காதிறு நாவலர் சங்க காலத் தமிழ்க்
கவி மரபுகளையே ஆண்டுள்ளார். தமிழ் மொழியைப் பற்றிக்
குறிப்பிடுகையில் தமிழ் என்ற சொல்லின் இனிமையைப் பற்றிக் கூறுகிறார்.

     தனிமை யென் பெயர்த்தா யினிமை யென் பொருட்டாய் என்று ‘தமிழ்’என்ற சொல்லில் பொதிந்துள்ள கருத்துக்களை விளக்குகிறார்.

     தமிழ் மொழி அகத்தியருக்குச் சிவ பெருமானால் போதிக்கப்பட்டது என்பது மரபு. இக் கருத்தினையே நாவலர் தமது புலவராற்றுப் படையில் பின்வருமாறு கூறுகின்றார்:-

     கங்கைச் சடைய னொரு பாக மங்கையன்
     இமயப் பொதியத் தமர்முனி அகத்தியற்
     காய்ந்து தர வுணர்த்திப் போக்க.

     பாரி, காரி, ஆய், ஓரி, பேகன், நள்ளி, அதிகன் என்போர் கடையெழு
வள்ளல்கள். அவர்கள் பழங்காலத்தில் கற்றுணர்ந்த மக்களின் அருமை இத்தன்மைத்து என அளவிட்டறியும் ஆற்றல் வாய்ந்தவர்களாய்த் திகழ்ந்தனர். உள்ளந் தகுதிபட அக் கல்வியைத் தெரிந்து கொண்டனர். தெரிந்து பொன்னையும் இரத்தினங்களையும் பலவாறாக அளித்தனர். இவ்வாறு வரையாது கொடுத்து இவ்வுலகத்தின் கண் தம் புகழ் மங்காப்
பெயர்களை நிலை நாட்டினர். நிலை நாட்டிவைத்து மறைந்து போயினர்.

குலாம்காதிறு நாவலர் உள்ளக் கண்கள் முன் இவர்கள் தோன்றுகின்றனர்.தமக்கென ஒன்றும் வையாது கொடுத்த அத்தகைய வள்ளல்கள் இக்காலத்தில்
வாழ்கின்றனர் அல்லர் என உள்ளம் உடைகின்றார். எனவே உணர்ச்சி
ததும்பப் பின்வருமாறு பாடுகின்றார்:

சங்ககாலத்து ஆற்றுப்படை நூல்களில் இல்லாத பல கருத்துக்கள்
புலவராற்றுப்   படையில்    ஆளப்பட்டுள்ளன.   அவற்றுள் ஒன்று இப்புலவராற்றுப் படையின் ஒப்புயர்வற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றது.

பழங்காலத்தில் ஆற்றுப்படுத்தப்பட்டவர்கள் பெரும்பாலும் கால்நடையாகவேசென்றனர். ஆனால் குலாம்   காதிறு   நாவலர்   வாழ்ந்த    பொழுது ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்குப் போகக் கால்நடையாகச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்படவில்லை. பலவகையான ஊர்திகளில் ஏறி அங்கும் இங்கும் சென்றனர். எனவே குலாம் காதிறு நாவலர்   மற்றப்  புலவரை ஆற்றுப்படுத்தும் பொழுது    இத்தகைய   ஓர்  ஊர்தியில் செல்லுமாறு
பணிக்கிறார். குலாம் காதிறு நாவலர் அத்தகைய  எந்திர  ஊர்தியைப்
பின்வருமாறு வர்ணிக்கிறார் :

     உரு முறுமோ டுறழொலியி
     னிரு புறனு மிருப்புருளை
     நான் குருளக் கான்குழுமும்
     வாஅய்க்கொள்ளிப் பேஎயுயிர்ப்பி
     னொலித்துமிழுங் கலித்தூமங்
     குழல்வாயிற் சுழல் கொள்ள
     மரவட்டைச் செலவொப்பச்
     செல்பாண்டில் பல்கோத்த
     நெடுத் தொடரி னிரை நீண்டு
     கடுங் காலிற் கழிவிசையி
     னெந்திர வூர்தி.

     இது நாம் எப்பொழுதும்  காணும்     எந்திரவூர்தியாகும். இடியின்
முழக்கத்தோடு மாறுபடுகின்ற   ஓசையை  உடையது. இ்வ் வோசையை உண்டாக்குவது இரும்பு உருளைகள்.  அவ்வுருளைகள்   நான்கு நான்காக இரண்டு பக்கத்தும்  அமைந்திருக்கின்றன. அவை  உருள  எங்திரவூர்தி
இயங்ககின்றது. அவ் வெந்திரவூர்தி ஒலிக்கும் பொழுது அது கொள்ளிவாய்ப்பேய்களின் மூச்சை யொத்திருக்கின்றது. இவ்வாறு ஒலிக்கும்பொழுது எந்திரம் மிக்க புகையைக் கக்குகின்றது. இப்புகை குழலின் வாயில் சுழன்று கொண்டு இருக்கும். எந்திரவூர்தியின் நடையோ வென்றால் மரவட்டையின் நடையைப் போன்றே இருக்கும். மரவட்டையின் நடையைப்  போன்ற  வண்டில்கள் பலவற்றைச் சேர்ந்த நெடிய தொடரினை உடையது. நிரை யாயுடையது. மிகநீண்டுள்ளது.    மரவட்டையின்      நடையையுடைய     வண்டில்கள்சேர்க்கப்பட்டாலும் கடுமையாக   வீசுகின்ற  காற்றைப்போல  ஓடுகின்றஎந்திரவூர்தியாயிருக்கும்.     இவ்வடிகளில்         புகைவண்டியே வருணிக்கப்பட்டுள்ளது.

மதுரைத் தமிழ்ச் சங்கத்துள் நிறுவப்பட்டிருக்கும் அச்சகம் எவ்வாறு
இயங்குகின்றது என்பது இவ்வாற்றுப் படையில் குறிக்கப்பட்டுள்ளது.
அச்சகத்தில் தமிழ், சங்கதம், ஆங்கிலம் ஆகிய எழுத்துக்கள் இருக்கின்றன.

அவ்வச்செழுத்தின் கீழ்க் கட்டையைத் தமக்காதாரமாகக் கொள்ளும்படி வார்க்கப்பட்டுள்ளது. வெவ்வேறு பகுதிகளாகச் செய்யப்பட்டுள்ளது. பல பிரதிகள் இயற்றக்கூடிய ஆற்றல் அவ் வச்சகத்துக்கு இருந்தது. ஒரு பிரதி பல பிரதிகளாய் எங்குஞ் சென்று பொருந்தப் பதிப்பிக்கும் அச்சுச் சாலையாகும்.

     தென் மொழி யெழுத்தொடு வடமொழி யெழுத்து
     மீங்கு நனி பாய வாங்கிலாக் கரமுங்
     கால்கொள வாக்குபு பால்வேறு படுத்தி
     யொன்று பல வாகிச் சென்றுறப் பதிக்கு
     மச்சுச் சாலையும்

என்ற அடிகளில் அச்சகத்தைக் குறிப்பிடுகின்றார் ஆசிரியர்.

 மதுரைத் தமிழ்ச் சங்கத்தாரால் அளிக்கப்படும் பட்டங்கள் பரிசில்கள்
பலவும் குறிக்கப்பட்டுள்ளன. பொன் மோதிரம், பொழுதறி கருவி,
காசுமீரமாகிய போர்வை, பணம் முதலியன அத்தகைய பரிசில்களாம். இப்பரிசல்களைக் கூறும்பொழுதும் மிக நுண்ணிதாக அவற்றை விளக்குகின்றார்ஆசிரியர்.

     இவ்வாற்றுப்படை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில்
இயற்றப்பட்டதாயினும் பழங்கால ஆற்றுப்படைகளைப்போல் சொல்நயம்,பொருள்நயம் அமைந்துள்ளது. இக்கால வழக்கிலுள்ள சில கருத்துக்களைக்குலாம் காதிறு நாவலர் தமது புலவராற்றுப்படையில் அமைக்காமல் பாடியிருப்பாரேயானால் இவ்வாற்றுப்படையையும் பழங்காலத்தைச் சேர்ந்தது
என்றே படிப்போர் எண்ணுவர். நடையும் பெரும்பாலும் சங்ககால
ஆற்றுப்படை நூல்களின் நடையையே ஒத்துள்ளது. சொற்சுவை, பொருட்செறிவு பொதிந்த இப் புலவராற்றுப்படை தமிழ் மக்கள் படித்து இன்புறவேண்டிய ஒரு நூல் எனின் அது மிகையாகாது. ம.மு.உ.
( ம.மு.உ. என்ற எழுத்துக்கள் யாரைக் குறிப்பன என்பதை உறுதி செய்ய இயலவில்லை.)
 பதிப்பாசியரின் நூல்கள்

1. முஸ்லிம்கள் தமிழ் இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு (ஆங்கிலம்)
2. இஸ்லாமியத் தென்றல்
3. நம்பிக்கை
4. வாய்மையின் வெற்றி
5. ஞானச் செல்வர் குணங்குடியார்

சிங்களத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்த நூல்கள் :

6. இலங்கையின் பொருளாதாரத் திட்டம்
(லங்கா ஆர்த்திக்க ஸலஸ்ம)
7. பிரித்தானிய அரசியல் யாப்பு
(பிரித்தான்ய ஆண்டு கிரமய)
8. பொருளியற் பாகுபாடு (ஆர்த்திக்க விக்கிரகய)
9. கிராமப் பிறழ்வு (கம்பெரலிய - ஒரு நாவல்)

தமிழிலிருந்து சிங்களத்துக்கு மொழிபெயர்த்த நூல்கள் :

10. வாணிஜ அங்க கணிதய (வர்த்தக எண் கணிதம்)
11. மாநபி ஸிரித்த (நபிகள் நாயகம் - அப்துற் றஹீம்)

உரை நூல்கள் :

12. குத்பு நாயகம் என்னும் முகியித்தீன் புராணம்
13. இராஜநாயகம்

பதிப்பித்த நூல்கள் :

14. ஆசாரக்கோவை-அப்துல் மஜீதுப் புலவர்
15. பெருமானார் பெருவாழ்வு
கண்டு இன்புறவேண்டிய இணையதளம்

-http://www.tamilvu.org/library/l5H00/html/l5H00ind.htm

http://www.tamilvu.org/slet/l5100/l5100pd1.jsp?bookid=121&pno=11
-
சங்கர இராமசாமி
http://rssairam.blogspot.com/
sankaravadivu.blogspot.com
tamilspeak.com

0 comments:

Post a Comment

Kindly post a comment.