Saturday, July 20, 2013

மாணவி மலாலாவுக்கு தலிபான் இயக்கம் அழைப்பு !

மாணவி மலாலா

பாகிஸ்தானுக்கு திரும்பி வந்து ஏதாவது பெண்கள் மதரஸாவில் சேர்ந்து படிக்குமாறு மாணவி மலாலா யூசுஃப் ஜாய்க்கு தலிபான் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரபை கொல்ல முயன்ற வழக்கில் தேடப்படும் குற்றவாளியும், தலிபான் போராளியுமான அட்னன் ரஷீத் இதுபற்றி இணையதளத்தில் வெளியிட்டுள்ள கடிதம்:

நாடு திரும்ப வேண்டும் என்று நான் உனக்கு அறிவுறுத்துகிறேன். இஸ்லாமிய மற்றும் பாஷ்தூன் கலாசாரத்தை நீ பின்பற்ற வேண்டும். உனது சொந்த ஊரில் உள்ள ஏதாவது ஒரு மதரஸாவில் சேர்ந்து அல்லா பற்றிய புத்தகத்தைப் படித்து அறிய வேண்டும்.

முஸ்லிம் பெண்களின் நிலை குறித்து எழுதுவதுடன், புதிய உலக நடைமுறை என்ற பெயரில் உன்னதத்தை புறக்கணித்து, தீய திட்டங்கள் மூலம் ஒட்டுமொத்த மனிதர்களையும் அடிமைப்படுத்த நினைக்கும் சதிகாரர்களின் திட்டத்தை அம்பலப்படுத்த வேண்டும்.

நீ பள்ளிக்கு போகிறாய் என்பதற்காகவோ அல்லது நீயொரு கல்வி ஆர்வலர் என்பதாலேயோ தலிபான்கள் உன்னைத் தாக்கவில்லை. தலிபான்களோ, முஜாஹிதீன்களோ கல்விக்கு எதிரானவர்கள் அல்ல. யார் வேண்டுமானாலும் கல்வி கற்கலாம்.

தலிபான்களுக்கு எதிராக எழுதியதாகவும், ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதியில் இஸ்லாமிய முறையை நிலைநாட்ட தலிபான்கள் மேற்கொண்ட முயற்சிக்கு எதிராக பிரசாரம் செய்ததாகவும், உனது எழுத்துகள் ஆத்திரமூட்டும் விதத்தில் இருந்ததாகவும் தலிபான்கள் நம்புகின்றனர்.

ஸ்வாட் பள்ளத்தாக்கில் பள்ளிகள் இடிக்கப்பட்டற்கு தலிபான்கள் மட்டுமே பொறுப்பு கிடையாது என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா.சபையில் கடந்த வெள்ளிக்கிழமை மலாலா ஆற்றிய உரையை மேற்கோள்காட்டியுள்ள அட்னன் ரஷீத், மலாலா நீ எதிரிகளின் கைப்பாவையாக உள்ளாய். மற்றவர்களுக்காக நீ பேசுகிறாய்.

வாளை விட பேனா சக்தி வாய்ந்தது என்பதை நீ உணர வேண்டும். ஆயுதங்களை விட வார்த்தைப் போர் அதிக அழிவை ஏற்படுத்தும் என்பதை மறந்து விடாதே என்று அறிவுரை கூறியுள்ளார்.

நன்றி :- தினமணி,  12-07-2013

0 comments:

Post a Comment

Kindly post a comment.