சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு நேரடி மானியம் வழங்கும் திட்டம் அக்டோபர் மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அந்த அதிகாரி கூறியது: சமையல் எரிவாயு சிலிண்டருக்கு "ஆதார்' எண் அடிப்படையில் நுகர்வோருக்கு நேரடி மானியம் வழங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த முறை இந்த வருடம் அக்டோபர் மாதம் முதல் தேதியிலிருந்து நாடு முழுவதிலும் நடைமுறைக்கு கொண்டுவரப்படுகிறது.
ஆதார் எண் அடிப்படையில் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக மானியத் தொகை செலுத்தப்படும். இதன் மூலம் கிட்டத்தட்ட 14 கோடி வாடிக்கையாளர்கள் பயன் பெறுவார்கள்.
இவர்கள் அனைவருக்கும் வங்கிக் கணக்குகள் இருக்க வேண்டும். இது ஆதார் எண்ணுடன் தொடர்புபடுத்தப்பட வேண்டும். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு அனைத்து அரசு வங்கிகளும் தயாராக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் இப்போது 32 கோடி பேர் ஆதார் எண் பெற்றுள்ளனர். ஆனால் இவர்களில் 80 லட்சம் பேர் மட்டுமே இந்த எண்ணை தங்களுடைய வங்கிக் கணக்குகளுடன் இணைத்துள்ளனர்.நேரடி மானியத்தை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்குகளில் செலுத்தும் முன்னோடித் திட்டம் வரும் மே மாதம் 15-ஆம் தேதி முதல் நாட்டில் பரவலாக இருபது மாவட்டங்களில் அமல்படுத்தப்படும்.
இந்த திட்டம் எவ்வாறு செயல்படும் என்பது தொடர்பான முழு விவரங்கள் இன்னும் முடிவாகவில்லை. சிலிண்டருக்கான முழு விலையை வாடிக்கையாளர் முதலிலேயே சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகஸ்தரிடம் செலுத்தி சிலிண்டரைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த சிலிண்டருக்கான மானியத் தொகை பின்னர் அந்த வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று தெரிகிறது.
இதன்படி, ஒரு வாடிக்கையாளர் சமையல் சிலிண்டருக்கான மானியத் தொகையை நேரடியாகப் பெற தனது வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். ஒரு வாடிக்கையாளர் ஆண்டுக்கு சுமார் ரூ. 4 ஆயிரத்தை மானியமாகப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வாடிக்கையாளர் தற்போது ஆண்டுக்கு 9 சிலிண்டர்களை மானிய விலையில் பெறலாம். சென்னையில் 14.2 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டரின் இப்போதைய முழு விலை ரூ. 891.50 ஆகும்.
நேரடி மானியத் திட்டத்தினால் சமையல் எரிவாயு விநியோகத்தில் உள்ள முறைகேடுகள் தவிர்க்கப்படும். பொய்த் தகவல்கள் மூலம் மானியத் தொகையில் சிலிண்டர் பெற்றுவரும் வாடிக்கையாளர்கள் முற்றிலும் ஒழிக்கப்படுவார்கள் என்று அந்த அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா ஆகியோர் நேரடி மானிய திட்டம் குறித்து புது தில்லியில் திங்கள்கிழமை கூடி விவாதிக்க இருக்கிறார்கள். இக்கூட்டத்தில் மாநில அரசு அதிகாரிகளும் கலந்து கொள்கிறார்கள்.
நன்றி :- தினமணி, 29-04-2013
0 comments:
Post a Comment
Kindly post a comment.